சரணடைதல் எனும் வாசல்

சரணடைதல் எனும் வாசல்

என் வாழ்க்கையில் பல தருணங்களில் நான் அப்படியே தளர்ந்து போயிருக்கிறேன். அது வெறும் உடல் சோர்வு மட்டுமல்ல; அது ஒருவிதமான ஆத்தும இளைப்பு. ஓடிக்கொண்டே இருப்பதிலும், போராடுவதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் நமக்குப் புரியும்படி மாற்ற முயல்வதிலும் வந்த சோர்வு அது. நான் ஜெபிப்பேன், ஆனால் கவலைப்படுவதை நிறுத்தமாட்டேன். விசுவாசிப்பேன், ஆனால் விளைவுகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே துடிப்பேன். தேவனுடைய சமாதானம் எனக்கு வேண்டும் என்று கேட்பேன், ஆனால் என் திட்டங்களை மட்டும் விடவே மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில், என் இதயத்தின் ஆழத்தில் ஒரு மெல்லிய சத்தம் கேட்டது: சரணடை!.

ஆரம்பத்தில், சரணடைதல் என்றால் ஏதோ தோல்வி என்று நினைத்தேன். எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது என்று கற்பனை செய்தேன். ஆனால், அது பலவீனம் அல்ல, மாறாக அது ஒரு மகா வல்லமை என்பதை மெல்ல உணர்ந்தேன். இது ஓட்டத்தை நிறுத்துவது அல்ல; இது தேவன் கிரியை செய்வதற்கு நம் இதயத்தில் இடம் கொடுக்கும் ஒரு பரிசுத்த விடுதலை. சரணடைதல் என்பது போராட்டத்தின் முடிவு அல்ல; அது நம்பிக்கையின் ஆரம்பம். விட்டுக்கொடுத்தலின் மறுபக்கத்தில் நான் இதுவரை அறியாத ஒரு சுதந்திரம் எனக்காகக் காத்திருந்தது. நான் என் கைகளை விரித்தபோதுதான், நான் பிடித்துக்கொண்டிருந்த வாழ்க்கை எவ்வளவு சிறியது என்பதை உணர்ந்தேன்.

சி.எஸ். லூயிஸ் (CS Lewis) ஒருமுறை சொன்னது போல, நாம் எப்போது நம்முடைய கதையை நாமே எழுதுவதை நிறுத்துகிறோமோஅப்போதுதான் நம்முடைய உண்மையான அடையாளத்தைக் கண்டடைகிறோம். என் பிடியை நான் தளர்த்தியபோது, அந்தப் போராட்டங்களுக்கு நடுவிலும் ஒரு விஷயத்தைக் கவனித்தேன்—அவருடைய கரம் ஏற்கனவே என் கரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது. கோபத்தோடு அல்ல, எரிச்சலோடு அல்ல; நீடிய சாந்தத்தோடும், தயவோடும்,அன்போடும் அவர் காத்திருந்தார். என் பிடியைத் தளர்த்தும்போதுதான், அவருடைய கரம் என்னைத் தாங்குவதை என்னால் உணர முடிகிறது. நான் தேவனுக்காகக் காத்திருப்பதாக நினைத்தேன், ஆனால் அவரோ நான் சற்று விலகி நிற்க மாட்டேனா என்று எனக்காகக் காத்திருந்தார். அவர் என்னை அடக்கி ஆள நினைக்கவில்லை, எனக்குள் ததும்பி வழியவே (Overflow) விரும்பினார்.

சரணடைதல் என்பது, என் மகிழ்ச்சி மீண்டும் துளிர்விடும் ஒரு நிலமாக மாறியது. நான் எதைப் பிடித்துக் கொண்டு தொங்கினேனோ, அதைவிடப் பெரிய ஒன்றை தேவன் எனக்காக வைத்திருந்தார். உண்மையில், நான் எதைப் பிடித்துக்கொண்டிருக்கிறேனோ அது தேவன் எனக்குக் கொடுக்க விரும்பும் வாழ்க்கையை விட மிகச் சிறியது. சரணடைதல் என்னை ஒரு நல்ல விதத்தில் உடைத்தது. அந்த உடைந்த நிலத்திலிருந்து நான் எதிர்பார்க்காத ஒன்று வந்தது: சமாதானம்,ஆச்சரியம், சுகம் மற்றும் புதிய தொடக்கங்கள். என் குறுகிய கால வெற்றிகளைத் துரத்துவதை நிறுத்தும்போது, தேவனுடைய பரந்த திட்டத்திற்கு நான் இடமளிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். எதிர்காலம் மங்கலாகத் தோன்றும்போதெல்லாம் என்னைத் தாங்கும் ஒரு வசனம் உண்டு. அது:

எரேமியா 29:11 “நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்குநான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்அவைகள் தீமைக்கல்லசமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”

இந்த வாக்குத்தத்தம் ஏதோ குறையே இல்லாத மனிதர்களுக்கானது மட்டுமல்ல; என்னைப் போல சோர்ந்து போன, கவலைப்படுகிற, உறுதியற்ற நிலையில் இருக்கிற ஒவ்வொருவருக்கானது. சரணடைதல் என்றால் எதுவும் நடக்கவில்லை என்று அர்த்தமல்ல. உண்மையில், நான் கைகளை விரித்தபோதுதான், தேவன் ஏற்கனவே திரைமறைவில் வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அவர் என் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மட்டுமல்ல, என் இதயத்தை உருவாக்குவதற்கும் வேலை செய்து கொண்டிருந்தார். நான் ஜெபிக்காத ஆச்சரியங்களை அவர் எனக்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.

அதனால் இன்று உங்களை என் கதைக்குள் அழைக்கிறேன். சரணடைதல் என்னை உடைக்கவில்லை, மாறாக என்னைக் கட்டியெழுப்பியது. அது என் கட்டுப்பாட்டின் முடிவு அல்ல, அது விசுவாசத்தின் ஆரம்பம். சரணடைதல் என்னை எப்படி மாற்றியது என்பதை நான் சொல்கிறேன். தேவன் எப்படி என்னைச் சந்தித்தார், என்னை மறுரூபப்படுத்தினார், நான் எதிர்பார்க்காத ஆசீர்வாதங்களை எப்படித் தந்தார் என்பதைப் பகிர்கிறேன்.

என் பலம் போதுமானதாக இல்லை என்பதையும் என் திட்டங்கள் பலன் அளிக்கவில்லை என்பதையும் நான் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு தருணம் வந்தது. உறவுகள், பொறுப்புகள்,எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றையும் நானே பிடித்துக் கொள்ள முயன்றேன். நான் எவ்வளவு பலமாகப் பிடித்தேனோ, அவ்வளவு அதிகமாக எல்லாம் என் விரல்களுக்குள் நழுவியது. என் இதயம் முழுவதும் சிக்கலான நூல்களால் நிறைந்திருப்பது போலவும், தேவன் என்னிடம் கேட்காத முடிச்சுகளை நானே அவிழ்க்க முயல்வது போலவும் உணர்ந்தேன். அந்த ஆத்தும இளைப்பில்தான் சரணடைதல் மென்மையாக என்னிடம் வந்தது. அது அதட்டவில்லை, கட்டாயப்படுத்தவில்லை; “உன்னால் இப்படியே தொடர முடியாது” என்று மெல்லிய சத்தத்தில் சொன்னது.

ஆரம்பத்தில் சரணடைதல் என்னைப் பயமுறுத்தியது. முன்னால் என்ன இருக்கிறது என்ற உத்தரவாதம் இல்லாத ஒரு இருண்ட பாதையில் நடப்பது போல இருந்தது. அங்கே எந்த வழிகாட்டும் பலகைகளோ, ஐந்து ஆண்டு திட்டங்களோ இல்லை. “என்னை நம்பு, உன் கைகளை விடு” என்று தேவன் சொன்ன அந்த ஒரு மெல்லிய தூண்டுதல் மட்டுமே இருந்தது. சி.எஸ். லூயிஸ் சொன்னது போல, யதார்த்தத்தின் பாரத்தைத் தாங்க முடியாத அளவுக்கு நம் பகுத்தறிவு சிறியதாக மாறும்போதுதான்,விசுவாசம் தொடங்குகிறது!. என் நிலைமையும் அதுதான். என் அறிவின் எல்லைக்கு நான் வந்துவிட்டேன். எல்லாவற்றையும் என் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக என்னால் இனி நடிக்க முடியாது. அது பரவாயில்லை என்பதையும் முதல்முறையாக உணர்ந்தேன். சரணடைதல் என்பது அறியாத ஒன்றிற்குள் எடுத்து வைக்கும் அடியாக இருந்தது. ஆனால் தேவன் அந்த ஒளியைப் பிடித்துக் கொண்டிருந்தார்.

நான் அந்த அடியை எடுத்து வைத்தபோது, என் பயத்தை விட ஒரு உண்மை சத்தமாக ஒலித்தது: அவருடைய நினைவுகள் என் நினைவுகளை விட உயர்ந்தவை. அவருடைய திட்டங்கள் என் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. எரேமியா 29:11 வெறும் காகிதத்தில் உள்ள வசனமாக மட்டும் இருக்கவில்லை; அது என் உயிர்நாடியானது. “நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்.” இது அவர் திட்டமிட்டிருக்கலாம் என்பதல்ல, அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார் என்பது. அவர் அறிந்திருக்கிறார் என்றால், நான் அறிய வேண்டிய அவசியம் இல்லை.

வேதாகமத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, சரணடைதல் என்பது எப்போதும் தெய்வீக ஆச்சரியங்களுக்கான வாசலாகவே இருந்திருக்கிறது:

  • தாவீது ஆட்டு மந்தையைச் சரணடையச் செய்தபோது, தேவன் அவனை ராஜாவாக்கினார்.
  • சவுல் தன் கர்வத்தைச் சரணடையச் செய்தபோது, தேவன் அவனைப் பவுலாக, சுவிசேஷத்தைச் சுமந்து செல்லும் ஒரு மனுஷனாக மாற்றினார்.
  • பேதுருவும் யோவானும் தங்கள் வலைகளைச் சரணடையச் செய்தபோது, தேவன் மீனவர்களைச் சபையின் அஸ்திவாரமாக மாற்றினார்.

அவர்கள் தங்களுக்குப் பழகிய ஒன்றை விட்டுக் கொடுத்தபோதுதான், தேவன் நித்தியமான ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்தார். அதனால் என்னை நானே கேட்டுக் கொண்டேன்: “தேவன் அவர்களை ஆச்சரியப்படுத்தினார் என்றால், ஏன் என்னை ஆச்சரியப்படுத்த மாட்டார்? அவர் எல்லாத் தலைமுறைக்கும் உண்மையாக இருந்துவிட்டு, என்னிடம் மட்டும் ஏன் மாறப்போகிறார்?” பதில் எளிது: அவர் மாற மாட்டார். அவர் என்னை விட்டுவிடவில்லை!. 

என் பிடியைத் தளர்த்திய நிமிடம், நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. நான் பலவீனமாக உணரவில்லை; லேசாக உணர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்த என் ஆத்துமா இறுதியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டது. சரணடைதல் என்னை நசுக்கவில்லை, அது என்னை விழிப்படையச் செய்தது. நான் வெறுமைக்குள் விழவில்லை, நான் தேவனிடம், அவருடைய ஞானத்திடம், அவருடைய காலத்திடம், பாதுகாப்பிடம் விழுந்தேன்.

அந்த விடுதலையில் எனக்கு ஒரு ஆத்தும ஆறுதல் கிடைத்தது. எல்லாம் எனக்குப் புரிந்துவிட்டதால் வந்த ஆறுதல் அல்ல, அது எனக்குப் புரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் வந்த ஆறுதல். ஒவ்வொரு பதிலையும், ஒவ்வொரு பாரத்தையும் நானே சுமக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கும்படி அவர் என்னிடம் சொல்லவில்லை, அதை அவரிடம் ஒப்படைத்து நம்பச் சொன்னார். கைகளை விரிப்பதுதான் முதல் அற்புதம். அது பயம் குறைந்து சமாதானம் எழும்பிய தருணம். சரணடைதல் என்பது முயற்சியின் முடிவு அல்ல, அது தனித்துப் போராடுவதன் முடிவு. அங்கேதான் என் உண்மையான பயணம் தொடங்கியது.

சில நாட்கள் இருட்டில் ஜெபித்துவிட்டு, பரலோகம் மௌனமாகிவிட்டதோ என்று நான் யோசித்ததுண்டு. மௌனமாக அமர்ந்து தேவனிடம் வழிகாட்டுதலையும் பதில்களையும் கேட்பேன். எதுவும் நகர்வதாகத் தெரியாதபோது, அவர் கேட்கிறாரா என்ற சந்தேகம் வரும். என் ஜெபங்கள் கூரையைத் தாண்டிப் போகவில்லை என்று தோன்றும். நாம் அனைவரும் ஒரு அடையாளத்தை, ஒரு வேகத்தை, கண்களுக்குத் தெரிந்த மாற்றத்தை விரும்புகிறோம். கதவுகள் திறக்கப்பட வேண்டும், பிரச்சனைகள் தீர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தேவன் பெரும்பாலும் நாம் காண முடியாத வழிகளில் கிரியை செய்கிறார். சி.எஸ். லூயிஸ் எழுதியது போல, தேவனுடைய மௌனம் அவர் இல்லை என்பதற்கான அடையாளம் அல்லஅது நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்றைத் தயார் செய்கிறார் என்பதன் அடையாளம்.

தேவனுடைய மௌனம் அலட்சியம் அல்ல; அது ஆயத்தம். அதை நான் முழு இருதயத்தோடும் நம்புகிறேன். திரும்பிப் பார்க்கும்போது, அவர் ஒருபோதும் என்னை விட்டு விலகவில்லை. நான் இன்னும் ஆயத்தமாகாத சில அற்புதம்—திரைமறைவு அற்புதங்களை அவர் அடுக்கிக் கொண்டிருந்தார்.

சங்கீதம் 40:1-3 “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும்… என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் நடைகளை உறுதிப்படுத்தினார்.”

பதில் இல்லாமல் காலம் கடந்து செல்வதின் வலியை நான் அறிவேன். ஆனால் திரும்பிப் பார்த்து, “தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்” என்று சொல்லும் மகிழ்ச்சியையும் நான் அறிவேன். அவர் ஒருபோதும் தாமதிப்பதில்லை; அவர் சரியான நேரத்தில் வருகிறார். நான் ஒரு காரியத்திற்காக மிக உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தேன், ஆனால் மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது. பதில் “இல்லை” என்று நான் நினைக்கத் தொடங்கினேன். ஆனால் அவர் என்னை அலட்சியப்படுத்தவில்லை, எனக்குத் தேவை என்று எனக்கே தெரியாத காரியங்களை அவர் தயார் செய்து கொண்டிருந்தார். ஒரு எளிய தீர்வை நான் எதிர்பார்த்தேன், அவரோ ஒரு பெரிய ஆச்சரியத்தை, சிறந்த திட்டத்தை, ஆழமான சுகத்தைத் தயார் செய்தார்.

தேவன் எதிர்பாராத காரியங்களைச் செய்வதில் வல்லவர். நான் பிழைத்திருந்தால் போதும் என்று நினைத்தபோது, அவர் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தார். தாமதத்தை நான் ஏற்றுக் கொண்டபோது, நான் பார்க்காத ஒரு கதவைத் திறந்தார். ஏதோ ஒன்று நிந்தையாகப் போய்விட்டது என்று நினைத்தபோது, அவர் அதை மீட்டெடுத்தார். நான் விண்ணப்பிக்காத ஒரு வேலை வாய்ப்பு வந்து என் வாழ்க்கையை மாற்றியது. முடிந்துவிட்டது என்று நினைத்த ஒரு உறவில் சமாதானம் மலர்ந்தது. சுகம் என்பது ஒரே நொடியில் வராமல், மெதுவாக, பரிசுத்தமாக வந்தது.

உபாகமம் 31:6 “நீ பயப்படவேண்டாம்… உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”

மௌனத்திலும் அவர் என்னோடு இருந்தார். அசைவற்ற நிலையிலும் அவர் நகர்ந்து கொண்டிருந்தார். காத்திருப்பிலும் அவர் என் நன்மைக்காக வேலை செய்தார். நான் அவசரப்பட்டிருந்தால் எவ்வளவோ இழந்திருப்பேன். அவருடைய காலம் என்னை உருவாக்கியது. அவருடைய பொறுமை என் இதயத்தைப் பதப்படுத்தியது. இறுதியாக அவர் பதிலளித்தபோது, நான் கேட்டதற்கும் நினைத்ததற்கும் மிக அதிகமாய் இருந்தது (எபேசியர் 3:20). தேவனுடைய மௌனம் அவர் இல்லை என்பதல்ல. அவர் எப்போதும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்—சரி செய்தல், சீரமைத்தல், ஆயத்தம் செய்தல் என எல்லாம் செய்து, சரியான நேரத்தில் அந்தத் தாமதத்தை ஒரு தெய்வீக ஆச்சரியமாக மாற்றுகிறார்.

சரணடைதல் என்பது எதையோ இழப்பது என்று நினைத்தேன், ஆனால் அது என்னை உள்ளுக்குள் திறப்பதாகும். தேவன் என் சூழ்நிலையை மட்டும் மாற்றவில்லை, அவர் என் இதயத்தையே மாற்றினார். சி.எஸ். லூயிஸ்  Surprised by Joy என்கிற புத்தகத்தில் சொன்னது போல, மகிழ்ச்சியை, அதைத் தேடுவதன் மூலம் கிடைப்பதில்லைஅவரைத் தேடுவதன் மூலமே கிடைக்கிறது.” என் திட்டங்களுக்காகப் போராடுவதை நிறுத்தியபோது, நான் அவரைத் தேட ஆரம்பித்தேன். அந்தப் பரிசுத்தப் பரிமாற்றத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது:

  • என் விசுவாசம் ஆழமானது.
  • என் குணாதிசயம் மென்மையடைந்தது. பயத்திலிருந்து செயல்படுவதை நிறுத்தி அன்பிலிருந்து செயல்பட ஆரம்பித்தேன்.
  • என் பொறுமை வளர்ந்தது.
  • என் தைரியம் என்னையே ஆச்சரியப்படுத்தியது.
  • என் அடையாளம் மாறியது. நான் தேவனால் நேசிக்கப்படுகிறவன், செதுக்கப்படுகிறவன்,தாங்கப்படுகிறவன் என்று என்னை உணர ஆரம்பித்தேன்.

கொரிந்தியர் 4:17 “மேலும், காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலகுவான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.”

நான் உபத்திரவம் என்று அழைத்த காரியங்கள் தேவனுடைய கையில் பரிசுத்தக் கருவிகளாக மாறின. அவர் என் ஒரு கண்ணீரையும் வீணாக்கவில்லை. யோசேப்பைப் போல, நான் கடந்து வந்த பின்னைடவுகள் எல்லாம் உண்மையில் ஒரு முன்னேற்பாடுதான். தேவன் என்னைத் தண்டிக்கவில்லை, அவர் என்னைத் தயார் செய்து கொண்டிருந்தார். யோசேப்பு சொன்னது போல, மற்றவர்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தாலும், தேவன் அதை நன்மையாகவே முடித்தார். அந்தப் புயல்கள் என்னை அழிக்கவில்லை, அவை என்னை உருவாக்கின.

தேவன் எனக்காக ஆசீர்வாதங்களைத் தயார் செய்வது மட்டுமல்ல, அந்த ஆசீர்வாதங்களைச் சுமக்க என்னையும் தயார் செய்கிறார். “எப்போது எனக்கு வெற்றி கிடைக்கும்?” என்று கேட்பதை விட்டுவிட்டு, “தேவன் எனக்குள் எதைக் கட்டியெழுப்புகிறார்?” என்று கேட்க ஆரம்பித்தேன். அது எல்லாவற்றையும் மாற்றியது.

நான் என்னை விட்டுக் கொடுத்த அந்த நிமிடம் எனக்கு ஒருபோதும் மறக்காது. எல்லாம் மாறிய அந்த நிமிடம் அல்ல, நான் மாறிய அந்த நிமிடம். என் பிடிவாதங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, “ஆண்டவரே, என்னால் முடியாது, உம்மால் முடியும்” என்று சொன்ன அந்த நிமிடம். நான் அதிகமாய்ப் போராடியபோது அல்ல, நான் அமைதியாக நின்றபோதுதான் தேவன் ஆச்சரியங்களை வெளிப்படுத்தினார். அது ஒரு பெரிய அடையாளத்துடன் தொடங்கவில்லை, அது ஒரு ஆழமான சமாதானத்துடன் தொடங்கியது. “உனக்கு வழி தெரிய வேண்டிய அவசியமில்லை, வழியானவரை மட்டும் நம்பு” என்று அந்தச் சமாதானம் சொன்னது.

ஆபகூக் 1:5 எனக்கு உயிர்பெற்றது: “ஜாதிகளை நோக்கிப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்; உங்கள் நாட்களில் நான் ஒரு கிரியையைச் செய்வேன், அதை ஒருவன் உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.” அவர் அதைச் செய்தார். நான் அழுத அடைக்கப்பட்ட கதவுகள் உண்மையில் என்னைப் பாதுகாத்தன. பதில் வரவில்லை என்று நினைத்த ஜெபங்கள் உண்மையில் மேலான விதத்தில் பதிலளிக்கப்பட்டன.

சங்கீதம் 37:4-5 “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருளுவார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”

இதன் அர்த்தம் இப்போது புரிகிறது. அவரில் மகிழ்ந்திருக்கும்போது என் விருப்பங்களே மாறுகின்றன. எனக்குத் தேவையானதை விட அவருக்குத் தேவையானதையே நான் விரும்புகிறேன். சரணடைந்த இதயத்திற்கு தேவன் தரும் பதில் ஒரு பரிசுத்த ஆச்சரியம்:

  • எதிர்பாராத வாய்ப்பு.
  • எதிர்பாராத சுகம்.
  • சரியான நேரத்தில் வரும் ஒரு நபர்.
  • கதவைத் தட்டுவதை நிறுத்தியபோது திறக்கப்படும் கதவு.
  • பலம் இல்லை என்று நினைத்தபோது எழும்பும் ஒரு புதிய பலம்.

ஏசாயா 40:31 “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்.”

தேவன் என்னை புதுப்பித்தார். நான் ஆசீர்வாதத்திற்காகக் காத்திருந்தேன், ஆனால் அந்த ஆசீர்வாதம் நான் சரணடைய வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தது. என் குழப்பத்தின் திரை மறைவில் அவர் செய்த காரியங்களைக் கண்டபோது நான் திகைத்துப் போனேன். ஆறுதல், வியப்பு,நன்றியுணர்வு, பணிவு என எல்லாம் என் இதயத்தை நிரப்பியது.

இப்போது ரோமர் 8:31 என் கீதமானது: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” கடலைப் பிளந்த, புயலை அடக்கிய தேவன் என் பக்கத்தில் இருக்கும்போது நான் எதற்கு அஞ்ச வேண்டும்? சி.எஸ். லூயிஸ் சொன்னது போல, தேவன் என்னை ஒரு சிறிய குடிசையாக அல்ல, அவர் குடிபுகும் ஒரு பெரிய அரண்மனையாக மாற்ற விரும்பினார். நான் வசதியை விரும்பினேன், அவரோ நெருக்கத்தைத் தந்தார். நான் கட்டுப்பாட்டை விரும்பினேன், அவரோ சமாதானத்தைத் தந்தார்.

இன்று “சரணடைகிறேன்” என்று சொல்லுங்கள். பயத்தோடு இருந்தாலும் “நான் தயார் ஆண்டவரே” என்று சொல்லுங்கள். அந்த மூன்று வார்த்தைகள் திரைமறைவில் இருக்கும் கிருபையைத் திறந்துவிடும். நான் சரணடைந்தபோது தேவன் என்னை ஆச்சரியப்படுத்தினார். சரணடைதல் என்பது இழப்பல்ல, அது சமாதானத்தைப் பெறுவது. பிடிவாதத்தை நிறுத்திவிட்டு விசுவாசிக்கத் தொடங்கும் அந்த அமைதி அற்புதமானது. சி.எஸ். லூயிஸ் சொன்னது போல, “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று நாம் சொல்லும்போதுதான் விடுதலை ஆரம்பமாகிறது.

இன்று நான் லேசாக வாழ்கிறேன். ஏமாற்றங்களை எதிர்பார்க்காமல், அழகை எதிர்பார்க்கிறேன். என் பிடியைத் தளர்த்தி என் கைகளை உயர்த்துகிறேன். தேவன் ஒருபோதும் நம் சரணடைதலை வீணாக்கமாட்டார். அவர் அதைச் சந்திப்பார், மதிப்பார், மறுரூபப்படுத்துவார். என் கைகள் திறந்திருக்கட்டும், என் ஆத்துமா உறுதியாய் இருக்கட்டும், என் இதயம் சரணடைந்த நிலையில் இருக்கட்டும். பிதா அன்பினால் ஆயத்தம் செய்துள்ள அனைத்தையும் பெற்றுக்கொள்ள நான் ஆயத்தமாயிருக்கிறேன். ஆமென்.

(இந்தக் கட்டுரை Mere Christian Wisdom ஆங்கில YouTube சேனல் செய்தி ஒன்றின் தமிழ் வடிவம்; உருவாக்கியவர் பெயர்: தெரியவில்லை)

தமிழாக்கம்: Benny Alexander)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *