
முன்குறிப்பு: கட்டுரையின் பின்குறிப்பை வாசித்து வந்தால் நன்றாக இருக்கும்.
சில வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்போம்; அதன் ஆழம் தெரியாவிட்டாலும். கிறிஸ்தவத்தில் அப்படி ஒரு வார்த்தை – மகிமை!. அதாவது தேவனுடைய மகிமை. இதுபற்றி விளக்கமான போதனைகளும் நான் அதிகம் கேட்டதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த மகிமை என்கிற வார்த்தையை விளக்குவது கடினம் என்பதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கேட்டிருப்பீர்களானால், தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். 🙂
தேவ மகிமை என்பது அவருடைய பரிபூரணத்தின், அவருடைய தெய்வீக தன்மையின் முழுமையான வெளிப்பாடு. அவருடைய அளவற்ற வல்லமை, ஞானம், நீதி, பரிசுத்தம், அன்பு, இரக்கம் போன்ற அனைத்து குணாதிசயங்களின் ஒருமித்த பிரகாசமே அது.
பிரகாசம் என்றால் உடனே நாம் கண்களால் காணும் வெளிச்சம் என்று கருதிவிடக்கூடாது. இது நாம் வெறும் கண்களால் காணும் (பௌதீக) ஒளி அல்ல, இது ஆவிக்குரிய ஒளி. பழைய ஏற்பாட்டில், யாத்திராகமம் போன்ற புத்தகங்களில், தேவனுடைய மகிமை மேகமாகவும், அக்கினியாகவும் வெளிப்பட்டதை நாம் வாசிக்கிறோம் (யாத்திராகம 24:16-17) என்றாலும், இன்று நாம் தேவ மகிமையை அப்படியெல்லாம் சரீரக்கண்களால் காண்பதில்லை. நம் முன்னர் தேவ மகிமை நம் கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சமாகவெல்லாம் வந்து நிற்பதில்லை.
இன்று இந்த தேவ மகிமையை அறிவது எப்படி?
‘உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் என்பது தேவனுடைய மகிமையைக் கண்டுணர்ந்து, அதிலே சந்தோஷம் கொள்வதிலே அடங்கியிருக்கிறது‘ என்றார் போதகர் ஜோனத்தான் எட்வர்ட்ஸ். அப்படியானால், ஒரு கிறிஸ்தவனாக நாம் தேவனுடைய மகிமையை அறிந்துகொள்ளுதல், அதற்கான முயற்சியை எடுத்தல் மிகவும் முக்கியமானதாகிவிடுகிறது. சகலத்தையும் அவர் தமக்காகவும், தமது மகிமைக்காகவும் உண்டாக்கினார் என்றால், தேவ மகிமையை அறிந்துணர்வது எவ்வளவு அவசியம்? ஆனால், அதை ஒரு அந்தஸ்து மிகுந்த வார்த்தையாக உச்சரித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோமே!
மகிமையை வார்த்தைகளால் வடிப்பதைவிட சட்டென்று விளங்கும் வண்ணம் உதாரணங்கள் தருவதன் மூலம் உணரச் செய்வதுதான் எளிது.
முதலாவது, தேவ மகிமையை ஒரு நபராக அறிவதுதான் எளிது. அது கிறிஸ்து இயேசு.
தேவனுடைய மகிமையின் உச்சக்கட்ட, பரிபூரண வெளிப்பாட்டை நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில்தான் காணமுடியும். இதைத்தான் அப்போஸ்தலனாகிய யோவான் சொல்கிறார், “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைப் பிதாவின் ஒரேபேறானவருடைய மகிமையாகக் கண்டோம்” (யோவான் 1:14).
அந்த தேவ மகிமையைத்தான் கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள், அற்புதங்கள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் அனைத்துமே வெளிப்படுத்தின. தேவ மகிமையைப் புரிந்துகொள்ள கிறிஸ்து நமக்காகச் செய்தவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வதும், அதில் திருப்தி அடைவதும் அவசியம். போதகர் ஜான் பைப்பரின் வார்த்தைகளில் சொன்னால்:
நாம் தேவனிடத்தில் பூரண திருப்தியடையும்போதே அவர் நம்மில் அதிகமாய் மேன்மைப்படுகிறார்.
இரண்டாவதாக, தேவ மகிமையை நாம் காண்பது நம்முடைய இரட்சிப்பில்தான்.
நாம் பாவிகளாயிருந்தும், தேவன் தம்முடைய கிருபையினால் நம்மை இரட்சித்திருக்கிறார் அல்லவா? இந்த இரட்சிப்பே அவருடைய மகிமையின் ஒரு அற்புதமான வெளிப்பாடு! அதன்பின்னர், பரிசுத்த ஆவியானவரின் துணையோடு, நாம் மெல்ல மெல்ல அவருடைய சாயலை அணியும்போது, அதாவது அவருடைய குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும்போது, அந்த மகிமையை நாமும் வெளிப்படுத்தத் துவங்குகிறோம்.
இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது, கையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் என்கிறார். அதாவது, தேவ மகிமை நம் செயல்பாடுகளாக வெளிப்படுகிறது. அதன் விளைவு நாமே தேவ மகிமைக்கு அடையாளமாகிறோம். அருமையான விஷயம் அல்லவா இது?
தொடர்ந்து நாம் தேவனை அறிந்துகொள்வதும், அவருடைய குணாதிசயங்களையும், கிரியைகளையும், நோக்கங்களையும் தியானிப்பதும் அவருடைய மகிமையை நம்மில் விளங்கப்பண்ணுகிறது. “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.” (2 கொரிந்தியர் 4:6).
மூன்றாவதாக, நாம் கிறிஸ்துவின் சாயலில் அவருடைய மகிமையைக் காண்கிறோம்.
தேவனுடைய மகிமையை உணரும்போது, நம்முடைய இருதயங்கள் ஆராதனையாலும் துதியாலும் நிரம்புகின்றன. அவருடைய மகத்துவத்திற்கும் பரிசுத்தத்திற்கும் முன்பாக நாம் தாழ்மையுடன் அவரை வணங்குகிறோம். “கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்” (சங்கீதம் 29:2). இதில் மிக முக்கியமான விஷயம், பரிசுத்த அலங்காரம்!.
இரட்சிப்பில் அவருடைய பிள்ளைகள் என்கிற அடையாளத்தைப் பெறுவது நமக்கு மகிமை. நம்முடைய மகிமையில் அவர் மகிமை வெளிப்படுகிறது. அவருடைய சித்தம் அறிந்து செயல்படுவதில், நாளும் மருரூபம் அடைந்து குமாரனாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறுவதில் அவரும் மகிமைப்படுகிறார். நம்மில் வெளிப்படும் குணமாற்றங்கள் – அல்லது ஆவியின் கனி – என்பது அவருடைய மகிமையை நம்மில் உறுதிப்படுக்கின்றன. பிறனிடத்தில் அன்புகூறுதல் என்பதே தேவ மகிமையின் வெளிப்பாடுதான்!
நம்முடைய வாழ்க்கையில் அனுதின செயல்பாடுகளில் வெளிப்படாத தேவ மகிமையை ஞாயிறன்று பாடல் பரவசங்களில் மட்டும் வெளிப்படுத்தமுடியாது. ‘மகிமை, மகிமை மாட்சிமை…’ என்று பாடுவதற்கு அதன் அர்த்தம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது – அர்த்தமுள்ள வாழ்க்கையாக அது வெளிப்படவும் வேண்டும்! அவருடைய நாமத்துக்குரிய மகிமை என்று சங்கீதக்காரன் சொல்வது நம்முடைய வாழ்வில் வெளிப்படும் பரிசுத்த அலங்காரத்தில் முதலில் வெளிப்பட வேண்டியதைத்தான். வாரமெல்லாம் வழக்கம்போல் சேட்டைகளில் ஈடுபட்டுவிட்டு முதல்நாள் அன்று ஆராதனை என்று பரவசப்படுதலில் நிச்சயம் மகிமை இருக்கப்போவதில்லை.
நம் துதியில் தேவன் மகிமைப்பட பாடல்வரிகள், இசை மட்டும் போதாது – வாழ்வியல் மாற்றம் வேண்டும்.
நான்காவதாக, தேவ மகிமை அவர் நமக்குள் வைக்கும் நம்பிக்கையில் வெளிப்படுகிறது.
இன்று எவ்வளவு சொன்னாலும், சற்று புரிவதற்குச் சிரமான விஷயம்தான் தேவ மகிமை. ஆனால், ஒரு நாள் தேவனுடைய மகிமையை முழுமையாகக் காண்போம் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களாகிய நமக்கு உண்டு. பரலோகத்தில், நாம் அவருடைய பிரசன்னத்தில் நித்தியமாக வாழ்ந்து, அவருடைய மகிமையைக் கண்டு களிகூருவோம். ” நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.” (கொலோசெயர் 3:4).
இதையே அப்போஸ்தலனாகிய யோவானுடைய வார்த்தைகளில், “தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு” (வெளிப்படுத்தின விசேஷம் 21:23) என்று வாசிக்கிறோம். இந்த நித்திய மகிமையின் கனத்தை நினைவுகூருவது, நாம் சோதனைகளையும் பாடுகளையும் சந்திக்கும்போது நமக்கு பெலத்தையும் ஆறுதலையும் அளிக்கும். “எங்கள் தற்காலத்து லேசான உபத்திரவம் எங்களுக்கு மிகவும் அதிகமான நித்திய மகிமையின் கனத்தை உண்டாக்குகிறது” (2 கொரிந்தியர் 4:17).
தேவனுடைய மகிமை என்பது அவருடைய பரிபூரணத்துவத்தின் அல்லது முழுமையின் பிரகாசம். எனவே, அந்த முழுமை நமக்கு ஒரே வாழ்வில் முழுமையாகப் புரியவில்லை என்பதால் அவருடைய மகிமையும் நமக்கு முழுமையாகப் புரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், அது நமக்குள் இல்லாத விஷயம் அல்ல. தேவ மகிமை என்பது அவருடைய தெய்வீக மேன்மையின் வெளிப்பாடு; அவருடைய செயல்களிலும், நம்முடைய இரட்சிப்பிலும், நாம் அவரைப் பிரதிபலிப்பதிலும் சிறிது சிறிதாக இது வெளிப்படுகிறது – வெளிப்பட்டே தீரும்!.
எனவே, ஒரு கிறிஸ்தவராக, அந்த மகிமையை அறிந்துகொள்வதும், அந்த மகிமைக்காக வாழ்வதும், பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தேவ மகிமையை எல்லா சூழ்நிலைகளிலும் பிரதிபலிப்பதும் நமக்கான அன்பின் அழைப்பாகும். தேவ மகிமையை முறையாக அறிதல் நம்முடைய ஆராதனை, வாழ்க்கை முறை மற்றும் நித்திய நம்பிக்கை ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது.
கடைசியாக நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வசனத்துடன் முடித்தால் நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்:
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. சங்கீதம் 40:16
எனவே, தேவனுடைய மகிமையைத் தேடுவதும், அவரை மகிமைப்படுத்துவதும் நம் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும்! மகிமையின் தேவனே அதற்கு உதவிசெய்வாராக!
பின்குறிப்பு: கட்டுரையின் தலைப்பு மகிமை…மகிமை..மகிமை என்று வைக்க ஒரு ‘பழைய’ காரணம் ஒன்று உண்டு. சுமார் 40 வருடங்கள் முன் வீட்டுக்கு வந்த ஒருவர் தன்னை ஊழியக்காரர் என்று சொல்லிக்கொண்டார். ஜெபிக்கும் முன்னர் தான் இயற்றிய பாடலை பாடுகிறேன் என்று ஆரம்பித்தார். அதன் வரிகள் “மைமை..மைமை..மைமை…மைமை;மைமை;மைமை…மைமை” என்று துவங்கி அதே மகிமை என்கிற வார்த்தை மட்டும் ஒரு நூறு நூற்றைம்பது தடவை சென்றது. 3 நிமிடம் கழித்துப் பாடல் முடிந்தது. ஒட்டு மொத்தப் பாடலின் ஒரே வார்த்தை ‘மைமை’ மட்டுமே. கண்ணை மூடிக்கொண்டிருந்த சிறுவனாக இருந்த எனக்கு சிரிப்பை அடக்குவதுதான் மிகவும் கடினமாக இருந்தது!