இப்படிக்கு பிசாசு

 ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்?

பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்?

எழுத்தாளரும் இறையியலாளருமான சி.எஸ் லூயிஸ் இப்படி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். சாதாரணமாக நாம் தேவனின் பார்வையிலிருந்து அல்லது மனிதனுடைய அனுபவத்திலிருந்து ஆவிக்குரிய யுத்தத்தைப் பற்றிப் பேசுவோம். ஆனால் லூயிஸ் ஐயா துணிச்சலாக, ‘பிசாசின் பக்கமிருந்து’ இதை எழுதியிருக்கிறார்! அதன் பெயர் ‘தி ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்‘ (The Screwtape Letters). இது மிகவும் தனித்துவமான புத்தகம். இந்த நடையில் அனேகமாக கிறிஸ்தவத்தில் எவரும் எழுதியதில்லை. இப்படி, இது விசேஷமான புத்தகம்தான்.

இன்று எவரும் கடிதங்கள் எழுதுவது கிடையாது. இன்றைய தலைமுறையினர் ஒரு கடிதத்தைக்கூட வாசித்திருக்க வாய்ப்பில்லை. போஸ்ட் ஆஃபீஸ் பக்கம் போகாத தலைமுறை இது.  90கள்வரை பிறந்தவர்களுக்கு மட்டுமே கடிதங்களைப் பற்றித் தெரியும். ஆனால்,  தகவல்பரிமாற்றம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடிதங்கள் வழிதான் நடந்தன. உறவுகள் மேம்பட்டது, சிதைந்தது எல்லாம் இன்று வாட்ஸ்சபில் நடப்பதுபோல் அன்று கடிதங்கள் வழியாக நடந்தன. அப்படிக் கடிதம் எழுதிவிட்டு மாதக்கணக்கில் பொறுமையாக பதில்களுக்குக் காத்திருந்த  காலத்தில் வாழ்ந்தவர் லூயிஸ். எனவே, அவர் ஒரு புத்தகமாக எழுத இந்த நடையைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை. சில பெரியவர்கள் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வந்திருக்கின்றன. ஆலோசனைகள் அறிவுரைகள் அடங்கிய கடிதங்கள் அப்படிப் புத்தகங்களாக வந்துவிடும். முன்னாள் பிரதமர் நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதியவை புத்தகங்களாக வந்திருக்கின்றன.

தி ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ் அப்படி ஒரு கடிதத் தொகுப்பு. என்ன ஒரு வித்தியாசம் என்றால் – இந்தக் கடிதங்கள் முற்றும் கற்பனையானவை. எழுதியது ஒரு பெரிய பிசாசு. தன் மருமகனாகிய ஒரு குட்டிப் பிசாசுக்கு எழுதிய கடிதங்கள் இவை. 

கடிதம் எழுதுபவன்: ஸ்க்ரூடேப் (Screwtape) என்னும் ஒரு ‘மூத்த பிசாசு’ – மனிதர்களை விழத்தள்ளி ஒன்றுமில்லாமல் ஆக்குவதில் முதிர்ச்சி அடைந்த அனுபவசாலி.

கடிதம் பெறுபவன்: வார்ம்வுட் (Wormwood) என்னும் அவனுடைய இளைய, அனுபவமில்லாத மருமகப் பிசாசு. அவ்வப்போது தலையில் கொட்டு வாங்கிக்கொண்டே இப்போதுதான் ஸ்க்ரூடேப்பிடம் டிரெய்னிங் எடுக்கிறவர்.

இந்த இளைய பிசாசு பூமியில் வாழும் ஒரு குறிப்பிட்ட மனிதனைச் சோதித்து, அவனைத் தேவனிடமிருந்து பிரித்து, நரகத்திற்கு இழுத்து வரும் ‘தன் வாழ்நாள் வேலையில் மிகவும் சின்சியராக இருக்கிறான். அந்த மனிதனின் பெயராக புஸ்தகத்தில் ‘நோயாளி’ – the Patient என்று லூயிஸ் பெயர் வைத்திருக்கிறார் – அதாவது ஆவிக்குரிய நோயாளி! (பெயர் பொருத்தமாகத்தானே இருக்கிறது?)

அவனுடைய ‘குரு’வான ஸ்க்ரூடேப், இந்த வேலையை எப்படிச் செவ்வனே செய்வது என்று பாடம் சொல்லிக்கொடுக்கிறான்! தன் பதில் கடிதங்கள் வாயிலாக. அதாவது புத்தகத்தில் வார்ம்வுட்டுக்கு ஸ்க்ரூடேப் எழுதும் பதில்கள் மட்டும்தான்  உண்டு. வார்ம்வுட் எழுதிய கடிதங்கள் இடம்பெறாது. காரணம் அதற்கு அவசியமில்லாதபடி,  வார்ம்வுட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் ஸ்க்ரூடேப்பின் எழுத்துக்களில் இருந்தே நாம் வார்ம்வுடின் சவால்கள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு விடுவோம். 

பிசாசின் ‘அறிவுரைகள்’

இனி ஸ்க்ரூடேப் தனது மருமகனுக்கு அறிவுரைகளாக எழுதும் கடிதங்களில் வரும் சில ‘முக்கியமான பயிற்சிகளைப்’ பாருங்கள்:

  • ‘அந்தச் சத்துருவை’ (இங்கு சத்துரு என்பது தேவனைக் குறிக்கிறது) மறக்கடி! – மனிதன் நித்தியத்தையும், தேவனையும் சிந்திப்பதைத் தடுத்து, அன்றாட அற்ப விஷயங்களிலும், உலகக் கவலைகளிலும் தன் கவனத்தைச் செலுத்துமாறு சிதறடி.
  • ஜெபத்தைக் கெடு! – மனிதன் உண்மையாக ஜெபிக்காதபடிக்கு அவனைக் குழப்பு. வார்த்தைகளை வெறும் சடங்காகச் சொல்லும்படி செய். அல்லது ஜெபிக்கும்போது அவன் மனதில் தேவையற்ற எண்ணங்களை நிரப்பு.
  • மனநிலைகளைப் பயன்படுத்து! – மனிதன் மகிழ்ச்சியாக இருந்தால், அது அவனே தன் முயற்சிகளின் வழியாகச் சம்பாதித்துக்கொண்ட  சொந்த பலன் என்கிற அகங்காரத்தை ஊட்டு!. அதுவே அவன் துக்கமாகவும், சோர்வாகவும் இருந்தால், அதை தேவனை விட்டு விலக ஒரு காரணமாகப் பயன்படுத்து.
  • சிறிய பாவங்களில் பழக்கு! – நம் நோயாளியை ஒரேயடியாக பெரிய, பயங்கரமான பாவங்களை ஒரேயடியாக செய்ய வைப்பது கடினம். ஆனால், கோபம், பொறாமை, எரிச்சல், புறங்கூறுதல் போன்ற ‘சின்னச் சின்ன’ விஷயங்களை அவனுடைய பழக்கமாக்கு. ‘பழைய புளித்த மாவைப் பார்!’ (1 கொரி 5:6)
  • சபைக்குள்ளேயே குழப்பத்தை உண்டாக்கு! – மற்ற விசுவாசிகளைக் குறித்து நியாயந்தீர்க்கவும், சபையின் குறைகளையே பார்க்கவும் அவனைத் தூண்டு.
  • காலத்தைப் பாழாக்கு! – அவனுடைய நேரத்தை வீண் காரியங்களிலும், அற்பப் பொழுதுபோக்கிலும் கழிக்கச் செய். முக்கியமானதை விட்டுவிட்டு அற்பமானதில் ஈடுபடச் செய்.

மேல் குறிப்பிட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. இந்த ‘ஒரு சோறு’ சாப்பாட்டின் பதத்தைக் காட்டியிருக்கும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த புத்தகமும் இதைவிடப் பலச் சிக்கலான கோளாறுகளை விவரிக்கிறது. அவற்றை வாசிக்க வாசிக்க, ஒரு கட்டத்தில் நம்முடைய வருத்தங்களையும், கோபங்களையும் சகமனிதர்கள் மேல் காட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்பது புரியத்துவங்கும். நம்முடைய ‘வேதனை உண்டாகும் வழிகள்’ எவ்வளவு ஆழமானவை என்பதையும் சிந்திக்கத் துவங்குவோம். 

பிசாசு எப்படியெல்லாம் நம்முடைய பலவீனங்களை அறிந்து, நம்மை தேவனை விட்டு விலக்கப் பார்க்கிறான் என்பதைதான் இந்தப் புத்தகம் மிகவும் சுவாரசியமான முறையில் நுட்பமாக வெளிப்படுத்துகிறது. சி.எஸ் லூயிஸின் இந்த எழுத்துநடை வாசிக்கவே அலாதியானது. ஆனால், அந்தத் திறமையைப் பயன்படுத்தி ஆவிக்குரிய உலகின் பயங்கரமான போராட்டங்களை ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் சந்திக்க வேண்டிவரும் என்பதைச் சொல்லிவிடுகிறார். பிசாசின் தந்திரங்கள் எவ்வளவு நுட்பமானவை என்பதை அவனது ‘மண்டைக்குள் நுழைந்து’ பார்ப்பது மிகுந்த சிந்தனைக்கு உரியது. லூயிஸ் அதைக் கற்றுத்தருகிறார். 

அவசியம் வாசியுங்கள்

லூயிஸின் எழுத்து நடை கடினமானதுதான். பழைய ஆங்கிலம் என்பதைவிட வாக்கியங்கள் நாம் சிந்திக்கும் நடையில், நீண்டதாக இருக்கும் என்பதைத்தான் நான் அதற்கான காரணமாகப் பார்க்கிறேன்.  அதுவும் ஒருவகையில் அழகுதான். ஆனால், டிக்‌ஷனரியைக் கையில்   வைத்துக்கொண்டு சற்று சிரமப்பட்டாவது வாசிப்பது அதற்கான பலனை நிச்சயம் தரும். Kindle-இல் வாசித்தால் டிக்‌ஷனரி அதிலேயே இணைந்துவரும்.  முயன்றால் முடியும்.  தமிழ் மீடியத்தில் படித்த தான் அதற்கு கேரண்ட்டி. 

‘பிசாசு நம்மை எப்படிப் பார்க்கிறான் என்கிற பார்வையே’ பிசாசின் கண்ணோட்டம்

பிசாசின் தந்திரங்களை நாம் அறிந்துகொள்ளும்போதுதான், அதற்கு விரோதமாக நாம் விழிப்புடன் இருக்க முடியும். ‘பிசாசு நம்மை எப்படிப் பார்க்கிறான் என்கிற பார்வையே’ பிசாசின் கண்ணோட்டம். எனவே, இந்த ‘பிசாசின் கண்ணோட்டத்தை’ அறிந்து கொள்வது நமக்கு நம்முடைய சொந்தப் போராட்டங்களையும், தேவனுடைய இரக்கத்தையும், பாதுகாப்பையும் புதிய விதத்தில் புரிந்துகொள்ள உதவும். வேதம் பிசாசின் கண்ணோட்டத்தை கட்டுரைகளாகப் போதிப்பதில்லை. ஆனால், ஆங்காங்கே இருக்கும் சில குறிப்புகளைக் கொண்டும், வேதகால மக்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்துதான் நாம் கற்றுக்கொள்கிறோம். அதனால்தான், அவனுடைய ‘தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே’ என்று நாம் எற்கனவே அறிந்துகொண்ட ஒன்றாக அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். 

புத்தகத்தில் மொத்தம் 31 கடிதங்கள். பிசாசு தன் பார்வையில் தனது பிரச்சனைகளை ‘அலசி’ அதற்கு தங்கள் கூட்டம் என்ன தீர்வை வைத்திருக்கவேண்டும் என்று ஆலோசனைகள் ஒவ்வொரு கடிதத்திலும் விளக்கமாக இருக்கிறது. அந்தக் கடிதங்களைப் படித்து நாம் சிந்தித்திராத கோணங்களில் நம் வாழ்வைக்குறித்து பிசாசு எப்படியெல்லாம் சிந்திக்கிறான் என்பதை நாமும் அறிந்துகொள்வது நல்லது. இதுவரை நீங்கள் இன்னும் இந்தப் புத்தகத்தை வாசித்திருக்கவில்லை என்றால், வாசித்துப் பாருங்கள். ஆவிக்குரிய யுத்த களத்தில் இது உங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தரும் என்று நம்புகிறேன்.

பிரச்சனைகளை வாசிப்பதில் இருக்கும் பிரச்சனை

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டுவிட விரும்புகிறேன். நான் சில வருடங்கள் முன் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, ஒவ்வொரு முறையும் ஒரு கடிதத்தை வாசித்து முடிக்கும்போதும் அதிலிருந்து வெளியே வரச் சிரமப்பட்டதுதான் உண்மை. இருந்தாலும், புத்தகத்தின் வெற்றியும் அதுவே என்று கருதுகிறேன்.  உண்மையில், அப்படிப்பட்ட நிலை  C.S. லூயிஸ் ஐயாவுக்கே இந்தப் புத்தகத்தை எழுதும்போதும் ஏற்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. “எழுதுவதில் எப்போதும் எனக்கு இருக்கும் இன்பம் இந்தப் புத்தகத்தை எழுதும்போது அவ்வளவாக இல்லை” என்பதாகச் சொன்னதுண்டு. இப்படிப் பிசாசின் மனநிலைக்குள் தன்னைப் பொருத்திக்கொள்வது ஒருவிதமான “ஆவிக்குரிய இறுக்கத்தை” (spiritual cramp) உண்டாக்கியதாக அவர் சொன்னார்.

அதாவது, பிசாசின் தீய கண்ணோட்டத்தில் சிந்திப்பது ஆரம்பத்தில் எளிதாக இருந்தாலும், அது தனக்கு ‘மகிழ்ச்சிக்குரியதாக இல்லை’ என்றும், தொடர்ந்து அப்படிச் சிந்திப்பது ஒருவிதமான மனச்சோர்வையும், சிரமத்தையும் கொடுத்தது என்றும் கூறினார். நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் பிசாசின் பார்வையில் மாற்றி எழுதுவது அவருக்கு மிகவும் கடினமானதாக இருந்ததாக சில பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இதையும் நாம் அறிந்துகொள்வது நல்லது. காரணம், சத்தியத்தைத் திரிப்பது – தேவனுடைய படைப்பாக இருந்தாலும், நாம் பிசாசாக சிந்திப்பது என்பது எவ்வளவு மோசமான செயல் என்பதை வளரும் கிறிஸ்தவர்கள் உணர்வதற்கு இது உதவும்.

இந்தப் புத்தகத்தின் ஆங்கில PDF வடிவம் இங்கே.

கடைசியாக, நம் கற்பனைக்கு ஒரு வசனம் (இது சொந்த கற்பனை – லூயிஸ் அவர்கள் எழுதியது அல்ல):

நிதானமான புத்தியும் மிகுந்த ஜாக்கிரதையும் உள்ளவர்களாய் ஒவ்வொருவரையும் குறிவையுங்கள்; ஏனெனில், நம்முடைய பிதாவாகிய கெர்ச்சிக்கிற சிங்கம்போல, நம் எதிரி காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொரு ஆத்துமாவையும் எவ்விதமாய்த் தந்திரமாய்ப் பின்தொடரப்பட்டு, முற்றிலும் பட்சிக்கப்படவேண்டுமென்று போதிக்கிறார்.

சோதனைக்காரன் தந்திரங்கள்  5:8

பின்குறிப்பு: இந்த சோஷியல் மீடியா காலத்தில் லூயிஸ் ஐயா எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பார் என்பதை விரைவில் ஒரு ஆங்கிலக் கட்டுரையாகப் பதிவிடுகிறேன். (ஆங்கிலத்தில் மட்டும்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *