
ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டிருக்கும். அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என்று சொல்வார்கள். அதாவது, நமக்குள் இருக்கும் நன்மையான எண்ணங்களுக்கும், தீமையான எண்ணங்களுக்கும் உருவமும் உயிரும் அளித்தால் நமக்குள் ஒரு நல்ல மனிதனும் தீய மிருகமுமாக நமக்குள்ளேயே இருவர் உண்டு – என்கிற சிந்தனை உலகத்தில் இருந்து வரும் ஒரு சிந்தனை.!
சிலருக்கு நல்லவன் வெளியே உலாவிக்கொண்டிருப்பான் – அவர்கள் நல்லவர்கள். சிலருக்கு தீயவன் வெளியே. அவர்கள் மோசமான மிருகங்கள். பெரும்பாலும் நல்லவர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பினால் அவர்களுக்குள்ளே இருக்கும் மிருகம் வேலையைக் காட்டிவிடும். இந்த நல்லவன்தான் தீய மிருகத்தை வெளியே வரவிடாமல் தடுத்து வைத்திருக்கிறான்.
மேம்போக்காகப் பார்த்தால் சரியாகவே தெரியும் இது உலகத்தின் பார்வை!. இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமில்லை.
மனிதன் இயல்பில் பாவி என்பதுதான் வேதம் சுட்டிக்காட்டுவது. அவன் இயல்பில் நல்லவனாகவோ, அவனுக்குள் தூங்கிக்கொண்டு இருக்கும் மிருகம் ஒன்று இருப்பதாகவோ வேதம் சொல்வதில்லை. அதேபோல், மனிதனுக்குள் இருக்கும் நல்லவன், அவனுக்குள் இருக்கும் தீயவனை அடக்கிவைத்து சரி செய்கிறான் என்றும் வேதம் சொல்வதில்லை.
பாவத்தைச் செயல்களில் முளைவிட்டு வெளியே வளரச் செய்யும் ஆற்றலைக் கொண்ட விதை அவனுக்குள் கருவிலேயே ஏற்பட்டுவிடுகிறது. வெளியுலகத்தைக் கண்டு சிந்தை வளரும்போது, அந்த விதை பாவச் செயல்களாக முளைத்து வெளிப்படுகிறது. என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்று தாவீது இராஜா உணர்ந்து சொல்வது இதைத்தான். எனவே, இயல்பில் நாம் நல்லவர்கள் அல்ல. சில நற்செயல்கள் மூலம் தீமைகளை அடக்கி வைப்பவர்களும் அல்ல. தீமை என்று ஒன்று வெளிப்படாத அளவு நன்மை செய்துகொண்டிருந்தாலும் மனித இயல்பு தீமையில்தான் வேர்கொண்டிருக்கிறது. காரணம், தீமைக்குக் காரணமாக பாவம் உள்ளுக்கும் இருக்கும் ஒன்று.
கிறிஸ்துவினால் புது சிருஷ்டியாக்கப்படும் நபர்தான் நம்முள் ஒரு நல்லவர் வந்து நம்மில் இருக்கும் தீயவரை மாற்ற முடியும். நன்மை வெளிப்புறத்தில் இருந்து வரவேண்டும். நல்லவர் கிறிஸ்துவாக வர வேண்டும். இந்த உலகத்தில் அப்படி எவரும் இலர் என்பதால்தான் கிறிஸ்து இங்கு பிறக்க வேண்டியதாயிற்று.