
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] …[பாகம் 5]
ஆண்டவர் பூமியில் இருந்தகாலங்களில் கிருபையைப் போதிக்கவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். தேபோல் ஆச்சரியமானவிதமாக அவர் விளக்கிச் சொல்லாத மற்றொரு விஷயம் கிறிஸ்தவத்தின் அடிநாதமான ‘சத்தியம்’! அதை அவர் ஒரு உபதேசமாகச் சொல்லி விளக்கவில்லை. அதற்குக் காரணம் சீடர்கள் தாங்கமாட்டார்கள் என்ற காரணமாகத்தான் இருக்கமுடியும்.
ஆனாலும், அவரது குரலை வீதிகளில் கேட்டவர்கள் அவர் போதிப்பது சத்தியம் என்று சில பரிசேயர்கள் அனுப்பிய சில ஏரோதியரான வேவுக்கார் அறிந்திருந்தார்கள். “போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும் இருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள். இதை மத்தேயு, மாற்கு, லூக்கா என்று மூன்று அப்போஸ்தலருமே தங்கள் சுவிசேஷங்களில் பதிவு செய்யிருக்கிறார்கள்.
அதேபோல, பல இடங்களிலும் ‘சத்தியம்’ என்பதை உறுதி செய்யும் ஒரு வெளிப்புறச் செயல்பாடாகப் பார்க்கிறோம். இன்றுவரை ஒரு விஷயத்தை உண்மையாக ஒத்துக்கொள்ள, “சத்தியமாகச் நான் அதைச் செய்யவில்லை” என்று சொல்வது நம்மிடம் உண்டு. ‘பொய்ச்சத்தியம் செய்யாதே- சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று பயமுறுத்துதெல்லாம், சத்தியத்தை உறுதிப்படுத்தும் ஒரு செயல்பாடாக செயலாக மட்டுமே பார்ப்பதால்வரும் விளைவு இது. இது தவறல்ல; நம் தரப்பு நியாயத்தை, நீதியை, உண்மையை, நேர்மையை உறுதி செய்யச் சொல்வது இது. ஆண்டவரும்கூட பலிபீடத்தின்பேரில், தேவாலயத்தின்பேரில், வானத்தின்பேரில் சத்தியம் செய்பவர்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். ஏன் அப்படிப்பட்ட சத்தியங்கள் முறையற்றது என்றும் விளக்கி இருக்கிறார். (மத்தேயு 5,23ம் அதிகாரங்கள்). பேதுருவும் ஆண்டவரை மறுதலிக்கும்போது ‘சத்தியமாக அவரை எனக்குத் தெரியாது’ என்றே மறுதலித்தார்.
ஆனால், ஆண்டவர் சத்தியத்தின்படிச் சொல்கிறேன் என்று அவர் சத்தியமாகக் காட்டியது அப்போது மக்களிடம் அல்லது தேவாலயத்தில் வேதாகமமான பழைய ஏற்பாட்டைத்தான். (லூக்கா 4:27). அதன்பின்னர் பிதாவினிடத்தில் ஏறெடுத்த தன் ஜெபத்திலும் (யோவான் 17), உம்முடைய வசனமே சத்தியம் என்று தேவ வார்த்தையைச் சத்தியமாக அடையாளம் காட்டினார். பிற்காலங்களில் அப்போஸ்தலர்கள் இதை விளங்கிக்கொண்டபடியினால், தாங்கள் எழுதிய எல்லாக் கடிதங்களிலும் சத்தியத்தை விளக்கவும் போதிக்கவும் தவறவில்லை. காரணம், அவர்கள் சத்தியத்தின் இன்னொரு பரிமாணத்தையும் அறிந்துகொண்டார்கள். அது – சத்தியம் என்பது வெறும் வார்த்தைகளாக, நினைவுகளாக இல்லாமல், அது ‘ஆள்த்துவம்’ கொண்டது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டதுதான்!
யோவான் சுவிசேஷத்திற்கு வரும்போதுதான் ‘சத்தியம்’ பற்றிய புதிய விளக்கங்கள் கிடைக்கிறன்றன. யோவான் தான் சத்தியத்தை ஒரு நபராகக் கண்டு கொண்டதை எழுதுகிறார். அந்த வெளிப்படுத்துதல் முதன்முதலில் கிடைத்தது அப்போஸ்தலனாகிய தோமாவுக்குக் கிடைத்த பதிலில்தான்.
தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
““சத்தியம் என்பது நான் தான்தான்” என்று சொன்னது அன்று பேசுபொருளாக சீடர்கள் மத்தியில் இருந்ததாகத் தெரியவில்லை. நியாயப் பிரமாணமாகிய சத்தியத்தின் நிறைவேறுதல் தானே என்று சொன்னதன் பொருளும் அவர்களுக்குப் புரிந்திருந்தார்போல் தெரியவில்லை. கிறிஸ்துவும் ஏன் தானே அந்தச் சத்தியம் என்று விளக்கியதாகவும் அப்.யோவான் எழுதவில்லை. ஆனால், சத்தியம் என்பது ஒரு தத்துவமோ, கோட்பாடோ இல்லை – அது ஒரு நபர் என்று அங்குதான் நாம் அறிந்துகொள்கிறோம்.
இதைப் பின்னர் புரிந்துகொண்ட யோவான், எழுதியதுதான்: கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வார்த்தையான கிறிஸ்து மனிதருக்குள் வந்து வாசம் பண்ணினார் (யோவான் 1:14) என்கிற ஆழமான விளக்கங்கள் எல்லாம்!
இப்படிச் சத்தியத்தை ஒரு நபராகச் சொன்ன ஆண்டவர் அத்துடன் நிறுத்தவில்லை, சத்திய ஆவியானவர் என்று ஆவியானவரையும் சத்தியம் என்று ஒரு நபராக அடையாளம் காட்டுகிறார். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். (யோவான் 14:16)
இதனால்தான், சத்தியம் என்றால் என்ன என்று கேட்ட பிலாத்துவுக்கும்கூட அவர் பதில் சொல்லவில்லை. (யோவான் 18:38). தன் முன் ஒரு நபராக நிற்கும் சத்தியத்தினிடமே சத்தியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி? சத்தியம் ஒரு நபர் என்பது பழைய ஏற்பாட்டில் நிழலாக இருந்த விஷயம். ஆதலால், பழைய ஏற்பாட்டை மட்டுமே கற்றிருந்த அப்போஸ்தலருக்கு சத்தியம் ஒரு நபராகத் தெரியாமல் இருந்திருந்தாலும்,
ஆனால், இன்று நமக்கு அப்படி இல்லை. அன்று சங்கீதக்காரன் கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்தித்தது (சங்கீதம் 85:10) என்றார். அது வேறுயாருமல்லர், கிறிஸ்துவே என்கிற வெளிச்சத்தைப் பெற்றவர்கள் நாம்தான். கிருபை-சத்தியம் என்கிற இரண்டும் என்றும் (சங்கீதம் 89:14) நம்மைவிட்டு விலகாமல் கிறிஸ்து என்கிற ஒரு நபராக என்பதையும் விளங்கிக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் நாம் ( நீதிமொழிகள் 3:3)! இதன் உட்சபட்ச நன்மையாக, அவரை சத்தியமாக விளங்கிக் கொண்டவர்கள் வழியாக, சத்தியவாளன பரிசுத்த ஆவியானவரின் மூச்சாய் அருளின ‘சத்திய’வேதம் நமக்கு உண்டு.
என்னை அறிவீர்கள், நான் விடுதலையாக்குவேன் என்பதே சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்பது (யோவான் 8:32). இதன் விளைவாக நாம் அறியவருவது: கிறிஸ்துவே வார்த்தை, வார்த்தையே சத்தியம், சத்தியமே கிறிஸ்து. கிறிஸ்துவின் சிலுவை மரணமும், அவரது உயிர்தெழுதலும், அதன் வழியாகக் கிடைக்கும் மீட்டும் சத்தியமானது அவர் சத்தியமாக இருந்ததால்தான். அதைப்பின்னர்தான் சீடர்கள் விளங்கிக்கொண்டார்கள். நமக்கும் விளங்க வைத்திருக்கிறார்கள்.
இப்படிச் சத்தியத்தை மட்டுமல்ல, இன்னும் சில விஷயங்களையும் தாங்கமாட்டீர்கள் என்றே ஆண்டவர் போதிக்கவில்லை. அதில் ஒன்று சபை. அதைத் தொடர்ந்து அடுத்த பாகத்தில் தியானிக்கலாம்.