கடவுளின் திட்டத்தில் மனிதன்


மனிதனை சுய அறிவுடன் படைத்த நல்ல, நீதியுள்ள தேவன் நம் தேவன். இராஜாதிராஜாவாய் இருந்தாலும் சர்வாதிகாரியாய் அவர் இல்லை. நம்மைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவராய்ப் படைத்தாலும், ரோபோக்களாய் இயந்திரகதியில் தான் விரும்பும்வண்ணம் மட்டுமே மனிதன் செயல்பட வேண்டும் என்று தேவன் நினைப்பதில்லை. மாறாக, முழுச் சுதந்திரம் கொடுத்து நம்மை இயங்கவிட்டதுமல்லாமல் தனக்கான வேலைகளையும் மனிதனுடன் பகிர்ந்து கொண்டு செய்வதில் ஆனந்தமடைபவர் அவர். இதை வேதம் முழுவதிலும் பல இடங்களில் கண்டு அறியலாம். 

இன்னும் சொல்லப்போனால், தான் செய்ய விரும்பிய அல்லது சொல்ல விரும்பிய காரியங்களை நிறைவேற்ற அவரது தாசர்களைப் பயன்படுத்தி அவர்களைச் சிறப்பிக்கவும் செய்கிறார். ஆச்சரியமானதல்லவா இது?

எதையும் அவரால் நேரடியாகச் செய்ய இயலும் வல்லமை படைத்தவராக இருந்தாலும், அவர் அப்படிச் செய்வதில்லை. தன் விருப்பத்தை நிறைவேற்ற தன் தூதர்களை மட்டும் அனுப்பியும் செய்வதில்லை. ஒரு நோவா, ஒரு மோசே, ஒரு கிதியோன், ஒரு சாமுவேல், ஒரு பவுல், ஒரு யோவான் என்று எண்ணற்ற சாதாரண மனிதர்களை அசாதாரண தேவமனிதர்கள் என்று நாம் சொல்லத்தக்க வண்ணம் மாற்றியது நம் கடவுளின் இப்பெரும் பண்பே.

இன்று நம்மையும் அவ்வாறு தேவமனிதர்களாக்கிடவே அவர் விரும்புகிறார். அதற்குத் தகுதிப்படுத்தவும் செய்கிறார்.

இதன் காரணமாகவே, விழுந்துபோன தூதன் நம்மேல் பொறாமை கொண்டு – வெறுப்புக் கொண்டு, நாம் அவன் கையாளாக மாற்ற முற்படுகின்றான். 

நம்முடன் கைகோர்த்துத் தன் செயல்களைச் செய்ய சர்வவல்லவருக்கே பிரியமானவர்களாக, நம்மோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் அப் பெருந்தெய்வத்திற்கே தாசர்களாக இருப்பதில்தான் நமக்கும் ஆனந்தம் அல்லவா?

அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. ஆதியாகமம் 2:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *