இந்த நம்பிக்கை!



கிறிஸ்து உயிர்தெழாவிட்டால் எங்கள் நம்பிக்கை வீண். நாங்கள் உரைக்கும் எந்தவார்த்தையும் வீண் என்கிறார் பவுல். அவர் உயிர்தெழுந்திருக்காவிட்டால், கிறிஸ்தவமும் வீண். கிறிஸ்தவர்களும் வீண். நாமெல்லாம் வெறும் முட்டாள்களாக இருந்திருப்போம். ஆனால், இது எப்படிப்பட்ட நம்பிக்கை?

2000த்துச் சொச்சம் வருடங்களாக, தலைமுறை தலைமுறைகளாக வரும் இந்த நம்பிக்கை வெறும் முரட்டுப் பக்தர்களால் பின்பற்றப்படும் குருட்டு நம்பிக்கை அல்ல. மாறாக, பெரும் சவால்களையும், எதிர்விவாதங்களையும் முறியடித்துத் தாங்கி வந்த நம்பிக்கை. கண்கள் திறக்கப்பட்டவர்களின் நம்பிக்கை.

படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளால் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள் அல்ல. காட்டுமிராண்டிகளையும் மனிதர்களாக்கி மண்ணோடு மண்ணாக நம்பிக்கையற்ற ஜடமாக பூமியில் தூளாகிவிடாமல், உயிர்த்தெழுவோம் என்ற மகிழ்வை விதைத்த நம்பிக்கை அது.

பாவத்தை தன்னுள் ஒரு பகுதியாகக் கொண்ட மனிதனுக்கு பரிசுத்தம் என்கிற நிறைவைத் தந்து முழுமையானவனாக்கும் நம்பிக்கை.

வெறுமனே செத்து சில நிமிடம் கழித்து எழுந்தவரின் தந்த நம்பிக்கை அல்ல! மரணத்தில் கூரை முறித்து, விடுதலை அளித்த பரிசுத்த இரத்தம் சிந்தியவர் தந்த நம்பிக்கை.

செத்துச் சுண்ணாம்பாகிவிடுவோம் என்கிற மரணபீதியில் இருப்பவனுக்கும், இன்னும் பத்துமுறை பிறப்போம் என்கிற அலட்சியம் கொண்டவனுக்கும் சவாலாக இருக்கும் நம்பிக்கை.

தற்காலிகக் கிளர்ச்சியை அல்ல, புதிய நம்பிக்கையை, புதிய பாடலை (சங்கீதம் 40:3) இருதயத்துள் விதைத்த நம்பிக்கை அது. 

என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவரை நான் மீண்டும் முகமுகமாகக் காண்பேன் என்னும் நம்பிக்கை. 

மரித்த மனிதன் மேல் இருக்கும் குருட்டு நம்பிக்கை அல்ல இது. என்னுள் ஜீவனைக் கொண்டுவந்து, என்னை வெறுத்துச் சிறுமையாக்கி, என்னை நிரப்பி என்னை உயர்வாக்கிய மெய்யானவர்மேல் வைக்கும் மெய்நம்பிக்கை!

தன்னை ஞானியாகக்காட்டும் பெருமைகாரனின் அகந்தையான நம்பிக்கை அல்ல! என்னை உயர்த்தத் தன்னை வெறுமையாக்கிச் சிறுமையாக்கிய ஒரே பெரியவரின் மேல் கொண்டிருக்கும் அன்பின் நம்பிக்கை.

நம் திறமையால் அவரை உயர்த்தும் நம்பிக்கை அல்ல, அவர் தந்த உயர்வால் அவரையே உயர்த்தும் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை பொய்யாய்த் தோன்றுவோர் பார்வையில் மூடராய் இருப்பதிலும் மேல், நமக்குள் நாம் கொண்டிருக்கும் நல்நம்பிக்கை! இது சமாதானம், சந்தோஷம், மீட்பு என்று இங்கு காணக்கிடைக்காதவற்றைக் காணச் செய்யும் நம்பிக்கை. அது இயேசு உயிர்த்தெழுந்தார் என்னும் நம்பிக்கை. நாம் மட்டும் உணர்ந்து அனுபவித்து மகிழும் உன்னத நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *