உள்ளுணர்வு… எண்ணங்கள்…சிறைபிடிப்பு

என் விருப்பம் எது, கிறிஸ்துவின் விருப்பம் எது? என்னை எதுவரை அவர் அனுமதிப்பார்? அல்லது, நான் எதையெல்லாம் அவர் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டும அல்லது பெறாமலேயெ செய்யலாம்? என்கிற கேள்விகள் கிறிஸ்துவுக்குள் வளரும்போது வரும் சில ஆரம்பகால கட்டக் குழப்பங்கள். ஆனால், நம் விருப்பங்கள், எண்ணங்கள் எல்லாம் அவரிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதுதான் சத்தியம் என்றாலும், பலரும் இதை உடனடியாக விரும்புவதில்லை. எனக்கென்று விருப்பங்களே இருக்கக்கூடாதா? நானாக நல்லவைகளைக்கூடச் செய்யகூடாதா? நானாக எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருக்கவே இருக்காதா? என்கிற எரிச்சலான அல்லது பரிதாபமான கேள்வி வெளிப்படுவது இயல்பு. என்றாலும், சிலபல ஆவிக்குறிய அதிர்ச்சிகளுக்குப்பின் சத்தியம் போதிப்பதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் சூழல் வந்தேதீரும். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

மார்ட்டின் லூத்தரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், “நம் உள்ளுணர்வு, முற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்”. இதையே, அப். பரிசுத்த பவுலின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமன்றால் நம்முடைய எந்த எண்ணங்களும் கிறிஸ்து இயேசுவுக்குள், அதாவது வார்த்தையானவருக்குள் சிறை பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் (2 கொரிந்தியர் 10:5 ). இவற்றின் அர்த்தம் என்னவென்றால், நம்முடைய விருப்பங்கள் எல்லாம் தேவனது விருப்பத்தைச் சார்ந்ததாகவும், அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் இருக்கவேண்டும் என்பதே.

இந்த வசனம் கிறிஸ்தவவாழ்வில் மிகவும் முக்கியமான பங்கை வகித்தே ஆகவேண்டும். காரணம், எண்ணங்களால் சூழப்பட்ட நம்மில், பல எண்ணங்கள் நம் வாழ்வில் அவை உண்மையாகவே இருந்தாலும், அல்லது மிகவும் நல்லவையாகவோ தோன்றினாலும், அவை சத்தியத்திற்கு உட்பட்டதாக – அதாவது தேவ அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டிய அவசியமேயில்லை. மறுவார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், நம் விருப்பங்கள் யாருக்கும் பாதகமாக இல்லையென்றாலும், அல்லது நம் நினைவுகள் தீமையானதாக இல்லாவிட்டாலும், அவையெல்லாம் தேவனால் அங்கீரிக்கப்பட்டதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்டவைகள் உடனடியான பாவமாக பளிச்சென இல்லாவிட்டாலும், காலப்போக்கில் அபாயகரமனதாக மாறும் என்பதுதான் உண்மை. 

இதற்கு நல்ல உதாரணம் நம்மில் தேங்கி நிற்கும் நம்மைக் குறித்த சிலவகைப் பெருமிதங்கள்! பெருமிதங்கள் தவறானதாக இல்லாமல், அல்லது உண்மையாகக் கூட இருக்கக்கூடும். ஆனால், இவை வெறும் பெருமிதங்களாக இருக்கும் சூழலில சறுக்கி பெருமைகளாக மாறும். இவைதான் வீண் தர்க்கங்களாகவும், மேட்டிமைகளாகவும் வெளிப்படும். இந்தப் பெருமிதங்களுக்கும் சில உதாரணங்கள் கூறலாம். அது – நான் தமிழன் என்கிற உணர்வு. இதுபோல், நான் இந்தச் சபைக்காரன் என்கிற உணர்வு. இந்த ஊர்க்காரன், இவ்வளவு ஜெபிப்பவன், பைபிள் தெரியும், பரம்பரைக் கிறிஸ்தவன், பலமணி ஜெபிப்பவன என்று பலப்பலப் பெருமிதங்கள்.! இவை நல்லவைகளாக அல்லது பெரிய பிரச்சனை எதையும் உண்டாக்காதவையாக இருந்தாலும், இவற்றையும் கிறிஸ்து இயேசுவுக்குள் சிறைபிடிக்க முடிந்தால் மட்டுமே, அவற்றைக் குறித்த சரியான புரிதலுக்கு வரமுடியும். நம் எண்ணங்கள் தேவனுடைய சித்தத்திற்கு உகந்தததா என்றும், இந்த நினைவால் அல்லது விருப்பதால், அல்லது செயல்பாட்டால் தேவனுடைய நாமம் மகிமைப்படுமா என்று அறிந்து உணர்ந்து அவருக்குக் கீழ் கொண்டுவருதல்தான் கிறிஸ்து இயேசுவுக்குள் சிறைபிடித்தல். ஆனால், பெரும்பாலான பெருமிதங்களே கிறிஸ்துவுக்குள் சிறைபிடிக்கப்பட்டால், அவை அவரது அங்கீகாரம் இல்லாமல் அடைபட்டேபோகும். அவர் அவற்றை அனுமதிக்க வாய்ப்பில்லை. இப்படி, அவரது விருப்பதிற்குக் கீழ் நம் விருப்பங்களைக் கொண்டுவருவதே அவர் விருப்பம் சார்ந்துவாழ ஒரே வழி! அதுவே அவர் எண்ணங்கள் நம்முள் வருவதற்கான வாசல். ஆக, நான் கிறிஸ்துவால் மீட்கப்பட்டவன் என்கிற ஒரு எண்ணத்தைத் தவிர வேறு அடையாளங்கள் வெளிப்பட வாய்ப்பில்லை. காலப்போக்கில் ‘கிறிஸ்துவின் அச்சடையாளங்களைத்’ தரித்துக் கொள்ள இந்த விருப்பம் வந்தே ஆகவேண்டும்.

இப்படி, எல்லா எண்ணங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் அவருக்குள் சமர்ப்பித்து, அவரது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து அனுமதிக்கப்படுபவை மட்டுமே இனி என் வாழ்வுக்கானது என்று கொண்டுவருவது, கிறிஸ்துவாக வாழ்வதின் வழிமுறையாகும்.

மீட்பை ருசிபார்த்திராத காலங்களில் எல்லா எண்ணங்களுக்குள்ளும், உலகத்துக்குள்ளும், நமக்குள்ளும், எதிரிக்குள்ளும் சிறைபிடிக்கப்பட்டு நம்மை அடிமையாக வைத்திருந்த சூழல் இருந்தது. அதற்கு நேர்மாறாக இன்று அவை உன்னதமானவருக்குள் சிறைபிடிக்கப்பட்டே ஆகவேண்டும். முன்னது அடிமைத்தனம் மட்டும். பின்னதில், அடிமையானவனே பிள்ளையானவனாகவும்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *