ஆவியானவரும் ஆவிகளும்

கிறிஸ்தவமே ஆவிக்குரியது. தேவனும் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24). நாமும் ஆவிக்குரியவர்கள். ஆனால், ‘ஆவி’ – என்பதைக் குறித்த போதனைகள் மிகவும் தெளிவாகக் கற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது பலவித வஞ்சனைகளுக்கு நேராகவே பெரும்பாலோனோரை நடத்திச் செல்கிறது. நான் ஆவிக்குறிய சபைக்குச் செல்கிறேன் என்று சொல்லும் – பழம் தின்று கொட்டைபோட்ட கிறிஸ்தவர்களாக தங்களைக் காண்பித்துக் கொள்பவர்களும்கூட, இந்தச் சவாலில் தோற்றுப்போய், ஏமாந்து, ஆட்டம் போடும் ஆவிகளையெல்லாம் பரிசுத்த ஆவியானவர் என்று நம்புவதே நடக்கிறது. ஆட்டம் போடாவிட்டால் ஆவியானவர் அவனில் இல்லை என்று போதிக்கும் போதனைகளும் மலிந்து கிடக்கின்றன.

எப்படியோ இருந்துட்டுப் போகட்டும். நமக்கெதற்குப் பொல்லாப்பு, இந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதற்கு, பேசாம இருந்து கவனிப்போம். இல்லையென்றால், நாமும் அந்த வைபிரேஷனின் கொஞ்சம் ஆடிவைப்போம் என்ற எண்ணம் புதைகுழியில் தள்ளும் அபாயம் இருப்பதை உணரமறுப்பதற்க்குக் காரணம் வெரி சிம்பிள். வேத வசனம் ஆவியானவரைப்பற்றியும் அசுத்த ஆவிகளைப்பற்றியும் காட்டிக் கொடுப்பதை தியானித்ததே இல்லை என்பதுதான்.

ஆவிகளைக் குழப்பிக் கொள்ளுதல்:
இதற்குக்காரணம் ஆவியானவரின் மகத்துவத்தையும் அவரது செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளாமலும், ஒருவேளை ஆவியானவரைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டால் அந்தப்பாவம் மன்னிக்கப்படாதே என்ற ஒரு வசனத்தை மட்டும் (மாற்கு 3:29) அறிந்து பயந்து நடுங்கி எல்லாத்தந்திர ஆவிகளையும் அவரென்றும் நம்பத் துணிவதுதான். ஆவியானவரைச் சரியான வகையில் அறியாவிட்டால் – பரிசுத்த ஆவியின் ஞானஸ்னானம் எங்கே, அவர் நம்முள் வாசம் செய்வது எப்படி? நம் வாழ்க்கை ஆவிக்குறிய வாழ்க்கையாகத்தான் மாறுவது எப்படி? இப்படி எல்லா ஆவிகளையும் நல்லாவி என்று குழப்பிக் கொண்டிருபோமானால், எப்படி ஆவிக்குறிய வாழ்வில் ஜெயம் பெறுவது?

இதற்கு மேல் புண்ணில் தண்ணீரை ஊற்றுவதுபோல, “இந்தக் குத்தாட்டங்களை குறைசொல்லத் துணிந்தயோ? இனி நீ ஸ்ட்ரெயிட்டா நரகம்தான்”, என்று சபிக்கிற ஆவிகள் வேறு வந்து உட்கார்ந்துகொள்ளும் வஞ்சகமும் இணைந்துவிடுகிறது.

பிறமதத்தவராலும் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு தூஷிக்கப்படுவதில் சபைக்குள் ஆட்டம் போடும் காணொளிகளில் ஆடும் ஆவிகளுக்குப்பேர் பரிசுத்த ஆவியென்றால், நம்மையெல்லாம் இன்னமும் கிறிஸ்துவைபோல மாற்றவும், அவருக்கே மகிமைசேர்க்கவும், வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் நடக்க எச்சரிக்கும் ஆவிக்குப் பெயர் என்ன?

பரிசுத்த ஆவியானவர் யார்?
பரிசுத்தஆவியானவர் நமக்குள் வசித்து, நமக்கு நல் ஆலோசனை தந்து நம்மை வழிநடத்துபவராக இருக்கிறாரே அன்றி, நம்மை ஆட்கொண்டு, நம் சிந்தையை முற்றாக ஆக்கிரமித்து நம் சரீரத்தையும் அவர் கையில் எடுத்து, நம்மை மீறி தான் விரும்பும் வேலையைமட்டும் நடத்திவிடுபவராக வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16:13 என்று தன் சீஷ்ர்களிடம் தெளிவாகப் போதித்தார் இயேசுநாதர்.

அதாவது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து வாசம் செய்து நமக்கு உதவிசெய்கிறார். பிதாவின் கட்டளைகளை நமக்கு விளங்கப்பண்ணி, எப்போதெல்லாம் நாம் சுய சிந்தனையில் தவிக்கிறோமோ அப்போது அருகில் நின்று ஒரு நண்பன் அறிவுரை அளிப்பதுபோலப் பேசி செல்லவேண்டிய பாதையைக் கற்றுத்தருகிறார். அவர் தேவனுக்குறியவைகளை உங்களுக்கு அறியச் செய்கிறவர். தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். I கொரிந்தியர் 2:10. ஆனால், அவர் ஒருநாளும் தன் இஷ்டத்தை நம்மேல் திணிப்பதில்லை. முக்கியமாக, நம் சரீரத்தை தன் கையில் எடுத்து தன் இஷ்டத்திற்கு ஆட்டம் போடச் செய்வது என்பது அவர் குணாதிசயத்தில் இல்லாத ஒன்று.

இதற்க்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம்: ஆவியின் கனியில் “இச்சையடக்கம்” என்பது நம்மில் இருக்கவேண்டியதாக வேதம் சொல்கிறது. அதாவது ஆவியானவர் நம்முள் இருந்தால், நாம் இச்சையை அடக்க அவர் ஆலோசனை தருகிறார். அதற்குக் கீழ்படியும் யாவரும் அந்தக் கனியை வெளிப்படுத்துகிறார்கள். இச்சையையை அடக்காமல் அவரது ஆலோசனையை ஏற்காமல் புறக்கணிப்பவர்கள் அவரைத் துக்கப்படுத்துகிறார்கள். இது தொடர்சியான பயிற்சியாக நடைபெறுவதால் அவருக்குக் கீழ்படிவோர் ஆவிக்குறிய முதிர்ச்சியையும், புறக்கணிப்பவர்கள் தேவனைவிட்டு விலகவும் செய்கிறார்கள். மாறாக, இங்கு ஆட்டம் போடும் ஆவிகளோ, சபைக்கு வருவோரில் சிலரை தன் இஷ்டத்திற்கு எடுத்து உருட்டிப்பிரட்டுகிதே. என்ன ஒரு முரண்பாடு?

ஆவியானவர் யாரையும் கையைப்பிடித்து இழுப்பதுமில்லை, கீழேதள்ளுவதுமில்லை, உருண்டு புரண்டு ஆட்டம்போடச் செய்வதுமில்லை. வேதத்தில் ஒருஇடத்திலாவது அப்படி அவர் யாருக்கும் செய்ததில்லையே. அவரை மிகவும் தன்மையானவராகத்தானே நாம் வேதத்தில் அறிகிறோம். இன்னும் சொல்லப்போனால் ஆவிகளிலேயே அவர்தான் மோஸ்ட் ஜெண்டில்! சாதுவான புறாவைப்போல இறங்கினார். கொத்திக் கொல்லும் வல்லூறைப் போல அல்ல. அவர், கிறிஸ்துவுக்குள் வாழ்வோரின் மாண்பை உயர்த்தி, இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர்களாக மாற்றும் தேற்றரவாளன். அல்லாமல், நம்மை கேவலப்படுத்தி உடைகள் கிழிய, அங்கங்கள் தெரிய, பைத்தியம் பிடித்தவர்போல ஆடவைத்து அசிங்கப்படுத்துபவர் அல்லவே அல்ல.

அசுத்த ஆவிகள் யாவை?
மாறாக இத்தகைய அவலச்செயல்களைச் செய்வது அந்தகார லோகாதிபதியின் ஏஜண்ட்டுகள். தன் ஊழியம் எங்கும் பிசாசுகளை இயேசுவானவர் விரட்டும்போது, அசுத்த அவிகள் அலறி ஓடின. அப்படிப்பட்ட அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின (மாற்கு 5:13 ). சரீரத்தில் காதுகேளாமையையும் வாய்பேசமுடியாதவராக கட்டிவைத்திருந்தன. (மாற்கு 9:25). கல்லறைத் தோட்டதில் உயிருள்ளோரைப் பேய்போல் உலவவிட்டன (மாற்கு 5:2) . அசுத்த ஆவிகளால் வாதிக்கிறவைகளாக இருந்தன (அப்போஸ்தலர் 5:16).

வெளியில் சரி, சர்ச்சுக்குள் எப்படி அசுத்த ஆவிவரும் என்கிறீர்களா? சபையில் உஷுஉஷ் என்று ஓலம்போடும் பாஸ்டரின் சபையில் எப்படி பேய்கள் வரும் என்று உறுதியாக இருக்கிறீர்களா? நீங்கள் இன்னமும் வேதத்தை வாசிக்கத் துவங்கவில்லை! உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது வேதத்தில். இயேசுகிறிஸ்துவின் காலத்திலேயே அந்த அசுத்த ஆவிகள் ஜெப ஆலயத்திலேயே இருந்தன. (மாற்கு 1:23, லூக்கா 4:33 ) என்பதுதான் அது. அதாவது நீங்கள் செல்லும் ஒரு சபைக்குள்ளேயே அசுத்த ஆவியால் ஆட்டம்போட, போடவைக்க அதற்கு வல்லமை உண்டு என்பதுதான். அவைகளுக்கு இடம்கொடுத்தால் அங்கும் அவைகள் முற்றாக ஆக்கிரமித்து தன் ஆதிக்கத்துக்குக் கொண்டுவர முடியும்.

ஆவிகளைப் பகுத்துணர்தல்
இதை வாசிக்கும் சகோதர சகோதரிகளே, உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்றும், அசுத்தஆவிகள் அநேகம் பேரால் நிறைந்துகிடப்பதையும், வேதத்தின் நிழலில் தியானியுங்கள். அதேசமயம், பரித்த ஆவியானவர் ஒருவரே என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பரிசுத்த ஆவிகள் இல்லை என்பதையும் அறியுங்கள். நமக்கு அருளப்பட்டவர் அவர் ஒருவரே! எனவே, ஆவியானவரின் பண்புகளையும், செயல்பாடுகளையும் வாஞ்சையாய்த் தேடுங்கள். வேதத்தின் வெளிச்சததில் பிசாசுகளின் தந்திர உபாயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் தினசரி கிறிஸ்தவ வாழ்வே போராட்டமாகவும், ஞாயிற்றுக் கிழமை ஆராதனைகளே வஞ்சனைகளுக்காக உங்கள் வாழ்வில் ஒதுக்கப்பட்டதாகவும் மாறிபோகும் அபாயமேனது, உங்கள் முதுகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும். கிறிஸ்தவ வாழ்க்கையே கசக்கும்.

அப்படியானால் என்னதான் செய்வது?
இப்படிப் பரிசுத்த ஆவியானவ்ருக்கும், அசுத்த ஆவிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லையென்றால், ஒரே வழி அதற்காக ஜெபிப்பதுதான். அது வேத வசன தியானத்துடன் துவங்க வேண்டும். பரித்த ஆவியானவரிடம் ஆவிகளைப் பகுத்தறியும் வரமோ, இல்லையென்றால் அப்படி வரம்பெற்றவர்களில் ஐக்கியமோ கிடைக்க ஜெபியுங்கள். அப்பொழுது பிதாவிடம் இருந்து புறப்பட்டு வந்த அந்த ஒரிஜினல் “ஒரே” பரிசுத்த ஆவியானவர் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுப்பவராக இருப்பவராக அவர் இருக்கிறபடியால், உங்களையும் அப்படியே கிறிஸ்துவின் மகிமைக்குச் சாட்சியாக மாற்றுவார். ஆவிக்குறிய வாழ்வு வாழ்பவராக இருப்பவர் முன் இருக்கும் தீர்வு இது ஒன்றுதான்.

யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *