நம் ஆண்டவருக்கு மிகப் பெரிதான சந்தோஷம் என்னவாக இருக்கும்?
பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும், அவருக்குள்ளும் சிருஷ்டிக்கப்பட்டிருக்க அதென்ன பெரிதான சந்தோஷம் கிறிஸ்துவுக்கு என்று புதிதாக ஒன்று இருக்கமுடியும்? அதுவும் மரணத்தைக் குறித்த துயரத்தையும் ஒதுக்கிவைக்கக்கூடிய அளவுக்கு?
பாவத்தில் உளலும் தன் மணவாட்டியாகிய சபையைத் தன் பரிசுத்த இரத்தத்தைத் தந்து, கழுவி, ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளுக்காக, அவள்பால் கொண்ட தன் எல்லையில்லா அன்பினால் ஆயத்தப்படுத்தும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் அந்தப் பணியே அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.
அதாவது தமக்காகத் தம்மைக் கொண்டு அவரோடு நித்தியமாக இருக்க செய்த அந்தப் பணி, தன் பாடு மரணத்தையும் கூட பொருட்டாக எண்ண விடாமல் இருக்கும் அளவுக்குச் சந்தோஷமாக!.
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். எபிரெயர் 12:2
வேதவசனங்கள் அல்லது சத்திய வார்த்தையின் துணையின்றி பரிசுத்த ஆவியானவர் செயல்படுவார் என்று நாம் நினைக்க இடமேயில்லை. காரணம் ஆவியானவரின் அருளால் எழுதப்பட்டதே வேதம். வேதத்தை, அதாவது அவரது வார்த்தையை விடுத்து வேறுவழியாக அவர் இறங்கிவருகிறார், அசைவாடுகிறார், பொழிகிறார் என்பதை ஏற்பதற்கில்லை.
சத்திய ஆவியானவர் அவர்; அவர் மொழியே வேதவாக்கியங்கள்!
அது ஏன்?
போதகர் A.W. டோஸர் சொல்கிறார் “சத்தியத்திற்கு விரோதமான பிழையான உபதேசங்களுக்கு விலகி வாழ, நம் ஆத்தும வளர்ச்சிக்குறிய விசுவாசத்தோடு ஆரோக்கிய வசனமும் வேண்டும்” என்று.
தெரியாமல் அல்ல தெரிந்தே செய்யும் பிழை இது. வார்த்தை தெரியாத, அதற்குக் கீழ்படியாத ஆவிக்குறிய வாழ்வு என்பது, வெற்று ஆட்டம் போடும் உணர்ச்சி தூண்டப்பட்ட வாழ்வுமட்டும்தான். வேத வசனங்கள் ஒழுங்காய்ப் போதிக்கப்படாமல், வெறும் ஆரவாரங்கள் எல்லாம் ஆவிக்குறிய வாழ்வில் வளர்ச்சி என்றால் அது நம்மைநாமே ஏமாற்றிக் கொள்வதேயன்றி வேறில்லை. ஆனால் அந்த ஏமாற்றத்தை உணரும்போது நாட்கள் கடந்திருக்கக்கூடும்.
வீட்டில் பொருட்கள் குறைவுபடுகிறது. சிறுவனைக் கடைக்குச் செல்லப் பணித்தால் அவன் கீழ்ப்படிய மறுக்கிறான். வீட்டில் உணவு சமைக்க இயலாத நிலையை உண்டாக்கியவன் சிறுவன். பெரியவனை அழைக்கிறார். அவன் கீழ்ப்படிந்து வாங்கிவருகிறான். சமையல் நடக்கிறது. உணவும் தயார். அண்ணன் வாங்கிவந்து சமைத்தது எனக்குவேண்டாம் என்று சிறுவன் சொன்னால் அவன் பட்டினி. ஏற்றுக் கொண்டால் நல்ல உணவு, குடும்பத்திலும் மகிழ்ச்சி.
கீழ்படியாமைக்கு நீதிக்கேற்ற தண்டனையை அவர் செலுத்தினார், நம் கீழ்படிதல் நிறைவேறத்தக்கதாக. (2 கொரி 10:6)
நம் தேவன் உணர்வுப்பூர்வமானவர். உங்கள் உணர்ச்சிகளை அறிந்தவர். ஆனால், அவர் நம்மைப்போலவே உணர்ச்சி வசப்பட்டு காரியங்களை நடப்பிக்கிறவர் அல்லர். நாம் உணர்ச்சிவசப்பட்டு எதிர்பார்க்கும், நடத்தும் செயல்களை எல்லாம் அவர் அங்கீகரித்து நம்மைபோல அவரும் உணர்ச்சிவசப்பட்டு ஆதரிப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாந்துபோக நேரிடும்.
அவர் நம் உணர்வுகளை மதிக்கும் தேவன், நம்மை ஆதரிப்பவர் தான் – இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும் அவர் சித்தம் மாறாத தேவன் என்பதை நாம் மறக்காமல் இருந்தால், அவர் நமக்கு அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்றெல்லாம் தேவனுடன் எரிச்சல்பட்டுக் கொண்டு கேள்விகளுடனும், வருத்தங்களுடனும் கிறிஸ்தவாழ்வில் விரக்தியாக இருக்கமாட்டோம்.
ஒருவேளை நீங்கள் தேவனுக்காய் முழு நேரமும் ஊழியத்தில் செயல்படுபவராகவே இருந்தாலும், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவரும் உங்களோடு செயல்படத்துவங்க வேண்டும் என்று நினைப்பதால் வருத்தங்களைச் சந்திக்க நேரிடலாம். “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, என்வழிகள் உங்கள் வழிகள் அல்ல” என்று அவர் சொல்லியிருப்பதை மறக்கலாகாது.
அவருடன் நீடித்த நிலையான உறவு, அவரை இன்னமும் அறியவேண்டும் என்கிற தாகம், அவர் செயல்களை உணர்ந்து இரசிக்கும் மனப்பக்குவம் என்று அனுபவத்தில் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுக் கொண்டிருப்பது ‘அவர் சித்தம் மாறாத, உணர்வு வசப்படாத, அன்பின் தெய்வம்’ என்பதை அறிந்து அகமகிழ உதவும். அப்போது ஏமாற்றங்கள், சீற்றங்கள், முறையிடல்கள் மங்கிக் காணாமலேயே போகும்.