தாங்க மாட்டீர்கள் – பாகம் 5 – சபை

தாங்கமாட்டீர்கள் பாகம் 5

[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4]

கர்த்தராகிய கிறிஸ்து ஊழியத்தில் முதலாவது செய்த வேலை தனக்கென பன்னிரெண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்ததுதான். பொதுவாகவே தேர்ந்தெடுப்பு என்பது வித்தியாசமானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது என்பவர்களைத் தேவன் தெரிந்துகொண்டதன் பின்னணியைக் கவனித்தீர்கள் என்றால், அவர்களுக்கென எந்த விசேஷமான திறமைகள் இருந்ததாகத் தெரியவில்லை என்பது விளங்கும். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் தெரிந்துகொண்டதும் இப்படித்தான். அவர்கள் பெரிய இனமாக இருந்திருக்கவில்லை. மிகவும் கொஞ்ச ஜனங்கள் என்று எளிய பின்ணனி கொண்டவர்களாக இருந்தபோதிலும் தேவன் அவர்களைத் தெரிந்துகொண்டது ஆச்சரியம்தான்.  ஆனால், அவர்களை தேவன் தனக்கென தகுதிப்படுத்தினார். 

ஒரு வேலைக்கு ஆளெடுத்தாலும் சரி, ஊழியத்தில் ஒரு பொறுப்பாக இருந்தாலும் சரி, திறமையானவர்களைத்தான் தேர்தெடுப்பவர்கள் நாம். அனுபவம் இல்லாதவர்களைத் தேர்தெடுக்கவே பல இண்டர்வியூக்கள் இருக்கும் இவ்வுலகில் தனக்கென தேவன் தெரிந்துகொண்டவர்கள் அனைவருமே ‘எதற்காக என்னை?’ என்று ஆச்சரிப்படுத்துபவர்கள்தான். இதை யோசித்தால்தான்  “இன்று தேவன் என்னைத் தெரிந்துகொண்டதும் அவருடைய தீர்மானத்தின்படி மட்டுமே, இதற்குக்குக் காரணம் நான் அல்ல” என்பதைத் தாழ்மையாக ஒத்துக்கொள்வோம்.

தேவனது இப்படியான தேர்ந்தெடுப்புகள், அவர் பூமிக்கு வந்து சென்றதும்தான் நமக்கு விளங்கவந்தது. கிறிஸ்துவின் சிலுவை மீட்பின் திட்டம் நிறைவேறியதும், அதை முழுமைப்படுத்த அவர் தேர்தெடுத்ததுதான் சபை. ஆனால், இந்த முறை அவரது தேர்தெடுப்பு நமக்கு நமக்கு விளக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. “இரட்சிக்கப்பட்டவர்களை”த் தான் தேவன் தன் சபையில் சேர்த்துக்கொண்டு வருகிறார் என்று. தன்னுடையை அழைப்புக்குக் கீழ்படிபவர்கள் மட்டுமே சபையில் அங்கமாக்குகிறார். இயேசுக்கிறிஸ்துவைத் தன் இரட்சகர் என்று ஒத்துக்கொண்டு அவருடைய ஆளுகைக்கீழ் வரவிரும்புவோர் மட்டுமே சபையில் இணையமுடியும். 

இந்த சபை என்பதைக் குறித்து, சபையில் இணைக்கப்பட்ட அனைவருக்கும் ஆழமான புரிதல் இருக்கவேண்டும். பொதுவாக சபை என்றவுடன் நாம் சிஎஸ்ஐ, லுத்தரன், பேப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே என்கிற எண்ணத்தில் போய்விடுகிறோம். இவைகள் எல்லாம் உண்மையில் கூடுகைகள் மட்டுமே. இப்படி நம்முடைய இணைப்பின் வசதிக்காக சிலராகக் கூடிவருவதும்  சபைதான் என்றாலும், இதுதான் சபை என்று நாம் முடிவுகட்டிவிடுவதால் உண்மையில் சபை என்பதன் ஆழம் பிடிபடுவதில்லை. ஆனால், சபை என்பது தேவனுடைய பார்வையில் மிகவும் விசேஷமானது.

  • சபை என்பது தேவனால் இரட்சிக்கப்பட்ட மக்கள் அவருடன் இணைவது. சபையை வேதம் ஒரு நபராக உருவகப்படுத்துகிறது. கிறிஸ்து அதற்குத் தலை. நாம் அனைவரும் அதன் அங்கங்கள் (உறுப்புகள்). அதுவும்  சபையைத் தன்னுடைய நிறைவு என்று கிறிஸ்து நினைப்பதெல்லாம் எப்பேர்பட்ட சிலாக்கியம் நமக்கு. ( எபேசியர் 1:23 )
  • அதேபோல், சபையை வேதம் ஆட்டு மந்தைக்கு ஒப்பிடுகிறது. கிறிஸ்து அதன் மேய்ப்பர். நாம் அனைவரும் அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். இதில் யூதரல்லாதவர்களும் அடக்கம். (யோவான் 10:15, 16)
  • சபை ஒரு குடும்பம். நாம் எல்லாம் அதன் உறுப்பினர்கள். கிறிஸ்துவினால் பிதாவின் பிள்ளைகளானவர்கள். கிறிஸ்து நம் சகோதரர். (கொலோசெயர் 1:18)
  • அதன்பின் இதன் உச்சபட்சமாக சபை மனைவி. கிறிஸ்து ஒரு திருமணத்தில் இணைக்கப்படப் போகும் கணவர். (எபேசியர் 5:23)

இவை எல்லாம் நமக்கு பல வசனங்களின் அடிப்படையில் உபதேசிக்கப்பட்டு வருபவைகளே என்ற போதிலும், இவை நம் மனதில் இருந்து பல சமயங்களில் நழுவிச்சென்றுவிடுபவை. ஆனால், இவ்வளவு விளக்கமாக போதிக்கப்படு இருந்தாலும், ஆண்டவர் தன் சீடர்களுக்கு இதைக் குறித்து விரிவாகப் போதிக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். ஓரே ஒருமுறைதான் அவர் சபை என்கிற வார்த்தையையே பயன்படுத்தினார். பேதுருவிடம், “மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” மத்தேயு 16:18. என்றார். 

“ஆண்டவரே, சபை என்றால் என்ன?” – என்று அப்போது சீடர்கள் கேட்கவில்லை.  அவர் சபை என்று சொன்னபோது அந்த வார்த்தையை எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று ஏற்றுக்கொண்ட பேதுருவுக்குத்தான் “சபை” என்கிற வார்த்தை சொல்லப்பட்டது.  இன்று அவரை “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும்தான் அவரது சபையில் அங்கமாகமுடியும். ஒருவேளை அன்று இவற்றை விளக்கினால் “தாங்கமாட்டார்கள்” என்று ஆண்டவர் விளக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், முழுமையாக வேதாகமம் தொகுக்கப்பட்டு கையில் கிடைக்கப் பெற்ற நாம் சபையைக் குறித்தும் சபையின் முக்கியத்துவம் குறித்தும் தெரியாமல் இருப்பது ‘அநியாயம்’! சபை என்கிற பெயரில் ஒன்றாய்கூடி நிற்பவர்கள் மனதளவில் பிளவுபட்டுக்கிடந்தால், நாம் அவருடைய அங்கம் என்பதை எப்படி நினைவில் கொள்ளமுடியும்? எத்தனைமுறை சத்தியத்தைக் கேட்டாலும் பிரிவினைகளை கண்டுகொள்ளாமல் செல்லும் குடும்பத்தில் உறுப்பினர்கள் என்று சொல்லிக்கொள்வது என்ன நியாயம்? மந்தையில் எப்படி ஆடுகள் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளவோ, புறக்கணிப்பதோ சரியாகும்?

கிறிஸ்து பூமிக்கு வந்து சென்ற காலம் வரை இன்றுவரை பலகோடி மக்கள் அவருடையை சபையில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். சபைக்குதான் தேவன் இன்று தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். சபையைத்தான் மீண்டும் தன்னுடன் கூட்டிச் செல்ல வருகிறார். அதில் யூதர், கிரேக்கர் என்கிற எந்தப் பிரிவினைகளும் இல்லை. அகில உலகிலும் அவரை ஏற்றுக்கொண்ட அத்தனை பேருக்கும் அவருடைய பிள்ளைகள் என்கிற அந்தஸ்தைத் தந்து தன்னுடைய மிகப் பிரமாண்டமான குடும்பத்தில் இணைத்துவருகிறார். இப்படி சபையில் மகத்துவத்தை அவர் ஏற்படுத்துகிற வண்ணமாக நாம் கண்டால் மட்டுமே, சபை சபையாகத் தன் வேலைகளைச் செய்யமுடியும். 

…கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும்… 1 கொரிந்தியர் 1:2.

இதில் எங்கும் தேவனுடைய நாமத்தைத் தொழுதுகொள்பவர்கள் என்று பவுலடியார் எழுதுகையில், உலகமெங்கும் சுவிசேஷத்தைச் சொல்லி தன்னுடைய சபையாகிய சரீரத்தின் பிரமாண்டத்தை தேவன் வெளிப்படுத்துவதை விளங்கிக்கொள்ள முடியும். அதைக்குறித்து விளக்கமாக அடுத்த பகுதியில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *