
ரோமன் கத்தோலிக்க வேதாகமத்தில் உள்ள 73 நூல்கள், புராட்டஸ்டண்டு வேதாகமத்தில் 66 என அனைத்தும் ஒன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவையே. புதிய ஏற்பாட்டின் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷம் கிறிஸ்துவின் சீடரான அப்போஸ்தலர் யோவானால் கிபி 68ல் அல்லது 96ல் எழுதப்பட்டது. (68 என்றால் யோவான் எழுதிய சுவிசேஷம் கடைசி நூலாக இருக்கக்கூடும்).
புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்துமே கிறிஸ்துவுடன் இருந்தவர்களால் எழுதப்பட்டது. இதில் மாற்கு பேதுருவின் சீடர், லூக்கா பவுலின் நண்பர். பவுல் கிறிஸ்துவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; பவுலின் எழுத்துக்கள் மற்ற அப்போஸ்தலர்களால் அன்றே அங்கீகரிப்பட்டவை. இவர்கள் எழுதிய நூல்களைத் தவிர பலரும் சுவிசேஷங்கள் எழுதியிருந்தாலும், பல்வேறு காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டன. அதற்கு முக்கியக்காரணம்: அவற்றின் நம்பத்தன்மை கேள்விக்குறியாக இருந்ததுதான். கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு மாறுபாடாக இருந்தவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. அதாவது கிறிஸ்துவைத் தலையாகவும், அவரை ஏற்றுக் கொண்டவர்களைச் சரீரமாகவும் வெளிப்படுத்தாத போதனைகள் வேதத்தில் இடம்பெறத் தகுதி இழக்கிறது. இதுபோக தனிப்பட்ட – சொந்த அனுபவங்களை எந்தப் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களின் இணைப்பு இல்லாமல் எழுதப்பட்டவைகளும் புறக்கணிக்கப்பட்டன.
கிறிஸ்துவைக் கண்ணாரக் கண்டவர்கள், அவரது அருகாமையை அனுபவித்தவர்கள், நேரில் அனுபவித்தவர்கள் மற்றும் அவரால் தெரிந்தெடுக்கப்படவர்கள் என சிலர் மட்டுமே அவரைக் குறித்த மற்றும் அவரது போதனைகளை உள்ளடக்கிய புத்தகங்களை எழுதத் தகுதி படைத்தவர்கள். ஒருவேளை பலநூற்றாண்டுகளாக அவருடன் இருந்திராத பலரும் எழுதத் துவங்கியிருந்தால், அவரைக் காணாத பலர் எழுதும்போது நிச்சயம் போதனைகள் மாற்றப்பட்டிருக்கும். எனவே, செவிவழிச் செய்திகள் கட்டுக்கதைகளாக மாறும் முன்பே வேதாகமம் முத்திரையிடப்பட்டது. இதனால்தான் ஒன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுதப்பட்ட புத்தகங்கள் எவையும் வேதத்தில் இல்லை.
வேதாகமம் இன்று நம்கையில் முழுமையாகக் கிடைத்திருப்பதற்கும், மாற்றப்படாமல் இருப்பதற்கும் காரணம், யார் எழுதிய வார்த்தைகள் வேதத்தில் இடம் பெறவேண்டும் என்று ஆவியானவர் தெளிவாகத் தன் தாசர்களுக்கு வெளிப்படுத்தியதால்தான். இறைவார்த்தை மாற்றப்படுவதை அவர் ஒருக்காலும் அனுமதிக்கவேயில்லை. இடைப்பட்ட காலத்தில் பலமுறை பலரைக் கொண்டு வேதாகமத்தைப் புரட்ட எதிராளி முயன்று கொண்டே இருந்தாலும், ‘ஒரு மனிதன் இறைவனை அடையச் சரியான வழி இதுவே’ என்ற வார்த்தையை அவனால் மாற்றவே முடியவில்லை.
வேதத்தில் இன்று இருக்கும் புத்தகங்கள் எல்லாம் பலமுறை, பலரால் கூடி ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. மூலப் பிரதிகளுக்கு முரண்பாடான பிரதிகள்கூட பிற்காலங்களில் தோன்றினாலும், அவைகளும் மிகுந்த கவனத்துடன் பலரால் கூடி விவாதிக்கப்பட்டுதான் ஏற்றுக்கொள்ளவோ, புறக்கணிக்கப்படவோ செய்யப்பட்டிருக்கின்றன.
‘நானும் இயேசுவைப் பார்த்தேன்’ என்று யாரும் பிற்காலத்தில் கூறிக்கொண்டு, வேதவார்த்தைகளைக் கொண்டு தங்கள் சொந்தச் சரக்குகளை வேதத்தில் இடம்பெறாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள தேவகிருபையும் ஞானமும் நம் முன்னோருக்கு அருளப்பட்டது. இதை விசுவாசிக்கும் நமக்குள் இன்றும் அவ்வார்த்தைகள் உள்ளத்தில் கிரியை செய்வதே இதற்குச் சரியான சான்று. இன்றுவரை வேதாகமத்தில் உள்ளவற்றைக் கூட்டவும் குறைக்கவும் பலரும் முயற்சித்தாலும், அவர்கள் சொல்வது வேதத்திற்குப் புறம்பானதா என்று தெளிந்தறியச் சொல்வதும் இதனால்தான். மார்மனின் புத்தகம் போன்றவைகள் தோன்றி சபைகளைக் குழப்பியதுதான் நடந்தது. எனவே, சபைப் பெரியவர்கள் இந்த விஷயத்தில் தெளிவாகவே இருந்திருக்கின்றனர். இறைஉதவியால், போலி வார்த்தைகள் உள்ளே நுழைந்துவிடாமல், இன்று நம்காலம் வரை நாம் கெடுபிடியாக – எச்சரிக்கையாகப்பதுபோல் அன்றும் இருந்து வந்திருக்கின்றனர். இன்று நம்மில் யாராவது புதிதாகப் போதித்தாலும், அதை உடனடியாக வேதாகமத்துடன் சரிபார்க்க நமக்கு இறைஞானம் அருளப்பட்டிருக்கிறது. பல மொழிபெயர்ப்புகளைத் தாண்டியும் வேதாகமம் தனிதன்மையுடன் இருக்க வேதாகமமே காரணம்! தன்னைத் தற்காத்துக்கொள்ளதும் தகுதி வேதத்திற்கு உண்டு. எவரும் எதையும் எப்போதும் மாற்றிவிட இயலாது. இது ஆண்டவர் மீண்டும் வருகைவரை இப்படித்தான்!
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16,17
ஆவியானவரால் ஏவப்பட்டு கிறிஸ்துவின் நேரடி தாசர்களால் எழுதப்பட்டு, மீண்டும் பல்வேறு தேவமனிதர்களால் பகுத்துணரப்ப்பட்டு, ஆவியானவரால் கடைசியில் முத்திரையிடப்பட்ட இந்த வேதாகமம் இன்று உங்களுடனும் என்னுடனும் பேசக் காரணம் நமக்குள் இருக்கும் அதே ஆவியானவர்தான்.
சுருக்கமாகச் சொன்னால், வார்த்தையாகிய தேவன் மனிதரிடத்தில் வெளிப்பட்டார். அவர் வந்து சென்றபின் அவர்வார்த்தை முத்திரையிடப்பட்டு மனிதகுலத்திற்கு அருளப்பட்டது.