
இந்த வாழ்வுக்கான வாக்குத்தத்தங்கள் – பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று வேதம் முழுவதுதிலுமே நமக்கென்று அருளப்பட்டிருக்கின்றன. வேதாகமம் வெறுமனே பரலோக வாழ்வுக்கு நுழையப் படிப்பதற்கான Entrace test coaching book அல்ல என்பது உண்மை. மறுமைக்கு மட்டுமல்ல, இந்த வாழ்வுக்கும் அவை உண்டு. அப்படி இல்லாவிட்டால், இந்த வாழ்வை உருப்படியாக வாழ இயலாது!
ஆனால், வாக்குத்தத்தங்களின் பிரதான நோக்கம், நம்மை அழைத்தவரை அறிகிற அறிவிலே வளரவும், அந்த வளர்ச்சியில் அவரது உறவைப் பேணவும், அந்த உறவில் கீழ்படிதலுடன் அவர் சித்தம் செய்யவும் மட்டுமே. இதை “தேவனுடைய வாக்குத்தங்கள் எல்லாம் அவை நிறைவேறும் வழிமுறைகளுடன் மட்டும்தான் வருகின்றன” என்பார் போதகர் சார்லஸ் அருமைநாயகம்.
சிலர் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்கள் எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு என்று சொல்லி ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வறட்சியில் ஓட்டிக்கொண்டிருப்பார்கள். மற்ற சிலர், இந்த ஓரத்திற்கு வந்து வாக்குத்தங்களை எல்லாம் ஒற்றை வசனங்களாக வந்து வாழ்வை அப்படியே செல்வச் செழிப்புக்குள் இட்டுச் செல்லும் என்று கற்பனையாகப் போதித்துக் கொண்டிருப்பார்கள்.
சரியாக வேதத்தை தியானித்தால் – அவரை அறிகிற அறிவில் மட்டுமே வாக்குத்தங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும். அவை முதலாவது தேவ பக்தியில் திளைக்க நமக்குத் தரப்பட்டுள்ளன. அத்துடன் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டே வாக்குத்தத்தங்கள் நம் கையில் அருளப்பட்டுள்ளன. இப்படி அவரை அறிகிற அறிவில் வளர்ந்து கேட்டுக்கு தப்பி வாழ்வுதான் செழிப்பான வாழ்வு. அதுதான் வாக்குத்ததங்களின் வல்லமை விளங்கும் வாழ்வு!
இந்த ஜீவியத்தில் அந்தச் செழிப்பை அறியவும் அனுபவிக்கவும் அவர் தருவது வாக்குத்தத்தங்கள். ஆனால், நடுவில் உள்ள அறிதல், உறவு, கீழ்ப்படிதல், இச்சைக்குத் தப்புதல் என்று எல்லாவற்றையும் விட்டுவிடுவதும், ஆசிர்வாதம் என்பதை பணம் என்று குறுக்கிவிடுவதும் வாக்குத்தத்தங்களை மந்திரக்கோல் போன்று பார்க்கச் செய்துவிடுகின்றன.
இப்படி கீழ்ப்படிதலுடன் இறைஉறவை விரும்புவோரால் மட்டும்தான் அவரது வாக்குத்தத்தங்களைச் சரியாக அடையாளம் காணவும் அனுபவிக்கவும் முடியும்.
(2 பேதுரு 1:3-4 – இந்த ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தியானித்தீர்கள் என்றால், வாக்குத்தத்தங்களில் நம் பங்கு என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்).