முரட்டுப் பக்தர்கள்

Legalism in Tamil

ஆங்கிலத்தில் லீகலிஸம் (Legalism) என்கிற வார்த்தை உண்டு. கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை இது. இதன் அர்த்தம் “கடவுள் இதைத்தான் செய்யச் சொல்கிறார் என்று அவர் சொல்லாத ஒன்றைச் செய்யச் சொன்னதாக நினைத்துக்கொண்டிருப்பது”. தமிழில் இதைச் சட்டவாதம் என்று சொல்லலாம். “இதைச் செய்தால் சரி, இதைச் செய்யாவிட்டால் உன் அபிஷேகம் அம்பேல். இப்படிச் செய்தால் இரட்சிப்பு போச்சி!” என்று சொந்த விருப்பங்களை வேதம் காட்டும் ஒழுக்க நெறிகளாகத் திணிப்பதே இந்தச் சட்டவாதம். பெந்தேகோஸ்தே சபைகளில்தான் இதை அதிகமாக இங்கே தென்னிந்தியக் கிறிஸ்தவத்தில் காணமுடியும். இவர்களைச் லீகலிஸ்ட்கள் (Legalists)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். 

வேதத்தைச் சட்ட புத்தகமாகப் பார்க்கும இவர்கள் செய்வது சட்டாம்பிள்ளைத்தனம். எல்லாச் சபைகளிலும் போதகர்கள் உட்பட பலர் இந்த வகையில் இருப்பார்கள். இவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் அல்ல. கிருபையைச் சரியாகக் கற்றுக்கொள்ளவேண்டியவர்கள். வேதம் நன்றாகவே தெரியும், ஆனால் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த வேண்டும்போது தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை நுழைத்துவிடுவார்கள். கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி முடித்ததை இன்னும் கொஞ்சம் அன்பின் கண்கள் கொண்டு பார்க்க வேண்டியவர்கள். செல்லமாகச் சட்டநாதர்கள். 🙂 திருந்த இயலாதவர்கள் அல்ல. 

நன்றாக கவனித்தால் நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில், சில சமயங்களில் சட்டநாதர்களாக இருந்துவிடுகிறோம். குறிப்பாக பிள்ளைகளைப் பெற்றவர்களே பிள்ளை வளர்ப்பில் தேவ கிருபைக்கு இடமளிப்பதில்லை. மாறாக, அதீத அன்பும் அக்கறையும் சட்டாம்பிள்ளைகளாகப் மாற்றிவிடுகிறது. ஒழுக்கம் என்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒழுக்கமின்மையைக் கண்டித்தல் மட்டும் ஒழுக்கத்தைக் கொண்டு வந்துவிடாது என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ளாதலால், மன்னிப்பு, இரக்கம், கிருபை போன்ற தன்மைகளை ஓரங்கட்டிவிடச் செய்கிறது.  பிள்ளைகளைத் திருத்தலில் முக்கிய அம்சம் தண்டனை மட்டுமல்ல, மன்னிப்பும் அன்பும். இது சபைக்கும், சரீரமாகிய கிறிஸ்துவின் அங்கத்தில் இணைந்தவர்களுடன் நாம் கொள்ளும் உறவுக்கும் பொறுந்தும். 

இந்தச் சட்டவாதம் என்கிற லீகலிஸம் வேதாகமம் கற்பிப்பதற்கும் மேலாக சில ஒழுக்க நெறிகளை அவசியம் என்று போதிக்கிறது. வேதம் காட்டும் ஒழுக்கத்தைப் போதிக்க கிறிஸ்துவின் சிலுவையைத் தாண்டிப் பல தார்மீக நடத்தைகளுக்கான அவசியத்தை நுழைக்கிறது . பின்னர் அவற்றையெல்லாம் பின்பற்றுவதைச் சார்ந்துதான் நம்முடைய உண்மையான ஆன்மீகம் அமைகிறது என்று கிரியைகளைச் சார்ந்து வாழ்பவர்களாக மாற்றிவிடுகிறது. இதைச் செய்தால் பரலோகம், இதைச் செய்யாவிட்டால் நரகம் என்றெல்லாம் வரும் கோபம் நமக்கு அவசியமில்லாதது. இது கிறிஸ்துவுக்கே இல்லாத கோபம்! அவரே எளிமையாகக் கையாளும் பலவற்றை நாம் முரட்டுத்தனமான அணுகுவது இந்தச் சட்டவாதம் இருதயங்களை இறுக்கமாக மாற்றிவிடுவதால்தான்.

உதாரணம் சொன்னால் இந்தச் சட்டவாதம் விளங்கும். ஜெபம் என்பது இறை உறவு சம்பந்தப்பட்டது. அது இயல்பானதாக மாற்றுவதே தேவ உறவுதான். அதன் அவசியத்தை வேதம் காட்டும் வெளிச்சத்தில் அறிந்துகொள்ளாமல் 40 நாள் உபவாசம் இருக்கவில்லையென்றால் இந்தப் பிரச்சனை நீங்காது என்று அடித்து விடுவது சட்டநாதர்களின் உபதேசம். 

இன்னொரு உதாரணம், உடை உடுத்துவது கண்ணியமாக இருக்கவேண்டும் என்பதைத் தாண்டி உடைகளுக்கான சட்டங்களை நுழைப்பது ஒருவகையான சட்டவாதம்தான். ஒருவர் என்னிடம் நான் புத்தகங்கள் எல்லாம் படித்து நேரத்தை வீணடிப்பதை விட வேதம் மட்டுமே வாசிக்கவேண்டும் என்றார். ஆனால், எத்தனையோ இறை மைந்தர்களுக்கு தேவன் தந்த வெளிப்பாடுகளை அவர்கள் எழுதி வைத்திருப்பதை நாம் வாசிப்பது தேவ கிருபை என்பதை அவர் மறந்துவிட்டார். 

நல்ல உடை ஒருவர் உடுத்துவது தேவன் அவருக்குத் தந்த அனுக்கிரகம். அவர் பணத்தை வீணடிக்கிறார் என்று சட்டநாதராக முடிவு செய்வது அவசியமில்லாதது. தேவன் கிருபையாக அளித்த ஒன்றை எதிர்த்து, இந்தச் செலவு செய்வதற்குப் பதில் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்வது சட்டவாதம். 

இந்தச் சட்டவாதம் நாம் எதை ஏற்றுக்கொள்ளவேண்டும், எதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்கிற ஏற்றுக்கொள்ளலின் எல்லைகளை அமைக்கிறது. அதன் மோசமான வடிவம் என்னவென்றால் தான் கற்றுக்கொண்டிருக்கும் இறை அறிவை மற்றவர்கள் மீது  கட்டாயப்படுத்துவதாக அமைவது. அவர்களது அறிவு முழுமையான இறைஅறிவாக இல்லாமல், தங்கள் சுய விருப்பங்களைக் கலந்து போதிக்கும் போது அது வெறும் முரட்டுப் பக்தியாக மட்டுமே வெளிப்படுகிறது.  

கிறிஸ்தவத்தில் எந்த வகையிலும் முரட்டுத்தனத்திற்கு இடமில்லை. அன்பின் வழி என்பதே கிறிஸ்துவின் வழி. கிருபையை வீணடிக்கிறார்கள், தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று யோசிப்பது இறைவேலை. நாம் நம் கண்கள் கொண்டு சரியாகப் பார்ப்பது கடினம். அப்படியே செய்துவந்தால், வெறும் நஞ்சு நிறைந்த நெஞ்சம் இருப்பதை உணராத கடினமனம் மட்டுமே இருக்கும். ஆண்டவர் இந்த பூமியில் இருந்தபோது கண்டித்தவைகள் கூட அன்பின் வழிகளில்தான். மக்கள் சுமக்கமாட்டாத சுமைகளைச் சுமத்திய பரிசேயச் சட்டநாதர்களைத் தான் அவர் இங்கு அதிகம் கண்டிக்க வேண்டியதாயிற்று. 

எதைச் சுட்டிக்காட்டினாலும், வேதத்தின் எந்தப் பகுதியின் படி அதைத் தவறென்று சொல்கிறீர்கள் என்பதைக் காட்டியே அதை விளக்குவது மட்டுமே அன்பின் வழி.  அன்பால் செய்யப்பட வேண்டிய ஒன்றுக்கும் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கும் சம்பந்தமில்லை. கிறிஸ்துவும் அவர் சிலுவையில் செய்து முடித்ததும் மட்டுமே இங்கு எந்த ஒழுக்க நெறிகளுக்கும் அடிப்படை. அதைச் சுற்றித்தான் நம் வழிகாட்டல்களும் சுட்டிக்காட்டல்களும் அமைவது அவசியம். 

தேவனுடைய சித்தம் என்பது நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான முப்பரிமாணம் கொண்டது. அவரைப்போல மருரூபமாவதலைக் கற்றுத்தருதல் வழியாக மட்டுமே அவர் சித்தம் செய்யக் கற்றுத்தரமுடியும். தொடாதே, ருசிபாராதே, என்றெல்லாம் இறைக் கிருபையின் அவசியத்தை உணராத முரட்டுப் பக்தியைக் காட்டவோ திணிக்கவோ அவசியம் இங்கில்லை. தேவகிருபை போதிக்கவேண்டியதை நம்முடைய நம்விருப்பங்களோ, அதைத் திணிப்பதோ போதித்துவிடாது. எனவே, இங்கே முதலில் கற்றுக்கொள்ளவேண்டியது அவர் கிருபையைத்தான்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *