நீங்களும் இறையியலாளரே!

Who is a Theologian

(குறிப்பு: இந்தக் கட்டுரை இறையியல் கல்லூரி செல்வது அவசியமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல)

இறையியல் (Theology) என்றால் நமக்கு உடனடியாக மனதில் வருவது மதுரை அரசரடி, சென்னை குருகுல் மற்றும் பெங்களூரின் பிரபல இறையியல் கல்லூரிகளாக இருக்கக்கூடும். அதேபோல் இறையியலாளர் (Theologian) என்கிற வார்த்தையைக் கேட்டால் நினைவுக்கு வருவது இறைக்கல்வி பெற்ற பாஸ்டர்கள், குருமார்கள் தான். இது சரியே என்றாலும், இறைக்கல்வியை கல்லூரியில் சென்றுதான் படித்தாகவேண்டும் என்றும், அப்படிப் படித்தவர்கள்தான் இறையியலாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிருப்பது சரியல்ல. நாம் வேதம் வாசிப்பதே இறையியல் கல்வி என்றும், நம் கையில் இருக்கும் வேதாகமமே இறையியல் கல்விக்கூடம் என்றும் நாமே ஒரு இறையியலாளர் என்கிற எண்ணம் வருவதுதான் சரியானது.

வேதத்தைத் தன் அனுதின வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக்கொண்டு, வேத தியானத்தை வாஞ்சையோடு செய்யும் எவரும் இறையிலாளர்தான். அல்லது நன்றாக வேதாகமம் கற்றுக்கொடுக்கும் ஒரு போதகரால், நண்பரால் அல்லது பெற்றோரால்  கவனமாகப் போதிக்கப்படுபவர் நீங்கள் என்றால், கற்றுக்கொள்ளும் நீங்களும் ஒரு இறையிலாளராகத்தான் இருக்கவேண்டும்! ஒரு சபையாகவோ, அல்லது குழுவாக, நண்பர்களாக, குடும்பமாக என்று  நீங்கள் தியானித்துக் கற்பது எதுவுமே இறையியல் தான். அப்படிக் கற்பவை சரியான புரிதல்களோடு மட்டுமல்லாமல், தவறானதாகவோ மற்றும் ஒழுங்கற்றோகூட  இருக்கலாம். மேலும், எல்லாக் கிறிஸ்தவருக்குமே குறைந்த அளவாவது இறையியல் அறிவு உண்டு.  இன்னமும் சரியாகச் சொன்னால், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் இறையியல் அறிவு உண்டு.

இறையியல் என்பதென்ன?

இறைவனைப் பற்றிய கல்வி – இறையியல் (இறை+ இயல்). ஆனால் அது ஏட்டுச் சுரைக்காய் அல்ல. அப்போஸ்தலராகிய பவுலின் வார்த்தைகளில் சொல்வதானால், தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளும் எவரும் இறையியலாளரே (கொலோசெயர் 1:10).  அறிதல், அதன்படி நடத்தல் இரண்டும் இணைந்தது இறையியல். கிறிஸ்தவ இறையியலில் இன்னும் மேலான ஒரு அம்சம், அறிந்ததன்படி நடக்க இறைவனது உதவி என்ன என்பதையும் அறிந்திருத்தல். இந்தக் கடைசிப் பகுதியான இறை உதவி என்பது அவரோடு நாம் கொண்டிருக்கும் உறவு. இப்படி உறவைப் பெற்றிருப்பதை அறிவதும் இறையியலில் மிகவும் அவசியமானது.

முறையாக இறைச்சித்தத்தின்படி வாழவிரும்பும் எவரும் இறைவனைப் பற்றி அறியாமல், அல்லது வேதத்தைக் கற்காமல் இருக்க இயலாது. தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைவது ஒவ்வொரு கிறிஸ்தவருக்குமானது. இது நிற்காத அனுதினக் கல்வி.  

இறையியல் கல்லூரிக்கல்வி என்பது பாஸ்டர்களுக்கானது என்று வைத்துக்கொண்டாலும், தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவு (தீத்து 1:3 ) என்பது, அது இரட்சிப்பின் அனுபவத்துடன் தொடங்கிவிடுகிற ஒன்று. இதில் யாருக்கும் விலக்கு இல்லை. மாறாக, தேவனை அறிகிற அறிவில் வளராத எவரின் பெயக்கும் இடம் வலம் என்று எத்தனை பதவி பட்டங்களைச் சூடிக்கொண்டாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. 

எல்லோருமே இறைவனை ஒரளவுக்கு அறிவர் என்றாலும் கிறிஸ்தவத்தில் ஓரளவு என்கிற அரைகுறை அறிவு என்பது அபாயமானது. தேவனை யார் என்பதும் அவர் யார் இல்லை என்பதும் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்று முழுமையாகக் கற்றுக்கொண்டே இருப்பதுதான்  இறையியல் அறிவின் பெருக்கம். ஆனால், பெரும்பாலானோருக்கு தேவனை யார் என்பது தெரிந்திருக்கும் அளவுக்கு அவர் யாராக இல்லை என்பதைக் குறித்த அறிவு இருப்பதில்லை. அதென்ன அரைகுறை அறிவு?

  • தேவன் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதும் எதை எதிர்பார்ப்பதில்லை என்பதையும் அறிந்திருப்பது இறையியல் அறிவு. ஆனால், தேவன் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பது தெரிந்திருக்கும் அளவுக்கு அவர் எதை நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதைக் குறித்த அறிவு இருப்பதில்லை.
  • நாம் கிறிஸ்துவுக்குள் யாராக இருக்கிறோம், அவர் நம்மை யாராகப் பார்க்கிறார் என்பது இறையியல் அறிவு. ஆனால், நாம் யார் அவருக்குள் யாராக இல்லை என்பதை அறிந்திருப்பதும் இறையியல் அறிவுதான்.
  • தேவன் எதைச் செய்கிறார் எதைச் செய்வதில்லை என்று இரண்டையுமே அறிந்திருப்பது கிறிஸ்தவர் அனைவருக்குமான இறையியல் அறிவு. ஆனால், முதல்பாதியோடு நின்றுவிடுபவர் அனேகர். 
  • தேவன் தன்னை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைக் கற்பது இறையியல். அதோடு மட்டுமல்லாமல் அவர் எப்படி தன்னை வெளிப்படுத்தவில்லை என்பதும் இறையியல் அறிவுதான். அதையும்தான் வேதாகமம் போதிக்கிறது.

இப்படிச் அரைகுறை அறிவைக்குறித்துச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அரைகுறை அறிவிற்கு முதல்காரணம் சபைகளில் வெறும் பாதி இறையியல் மட்டும் போதிக்கப்படுவது!. அதுவும் அது பாதிதான் என்பதுகூடத் தெரியாமலேயே! தேவன் யார் என்று சொல்லித்தரும் சபைகளில் ‘தேவன் யார் இல்லை’ என்பதைப் போதிப்பதில்லை. அவர் யார் இல்லை, அவர் எதை விரும்புவதில்லை, அவரது நோக்கம் எது இல்லை என்பதையெல்லாம் விளக்குவதில்லை. உதாரணமாக கிருபையைக் கற்றுக்கொடுக்க நினைக்கும் அளவு, எது கிருபை இல்லை என்பதைப் போதிக்காமல் இருப்பது. கிறிஸ்துவின் முதலாம் வருகையின் நோக்கத்தையே போதிக்காமல் இரண்டாம் வருகையின் இரகசியங்களை மட்டுமே போதிக்கும் சபைகள் அதிகம்.  

இறையியல் தெரியாமல் இல்லை. ஆனால் முறையான இறையியல் அறிவு அவசியம் என்பதையே அறிந்துகொள்ளாமல் இருப்பதும், பிரச்சனைக்குறிய வகையில் – தப்புத்தப்பாக – அதை அறிந்திருப்பதும் கிறிஸ்தவ வாழ்வின் துயரங்கள்.  பாதி அறிந்திருப்பது, தவறானதைக் கற்றுவைத்திருப்பது, செவிக்குத் தினவுள்ள போதனைகளை மட்டும் ஆர்வமாகக் கேட்பது, வெறும் வரலாறு, புவியியல், வேதத்துக்குப் புறம்பான வெளிப்பாடுகள் என்று ஆச்சரியமூட்டும் தகவல்களை மட்டும் விரும்பிக் கேட்பது என்பதெல்லாம் பிரச்சனைக்குறியவைகளே. 

இதுபோக கற்பதற்கும் கற்றவைகளில் நிலைத்திருப்பதற்கும் பரிசுத்த ஆவியானவர் அவசியம் என்பதை அறிந்திருத்தல் அவசியம். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ வாழ்வை மிகவும் சோர்வுக்குள்ளும், சுய முயற்சி பெரும அயற்சிக்குள்ளும் கொண்டு சென்றுவிடுகிறது.  சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் என்று ஆண்டவராகிய இயேசு தம்முடைய இந்த உலகின் ஊழிய நாட்களிலேயே குறிப்பிட்டு விட்டார். (யோவான் 16:13). நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம் என்று அப்போஸ்தலனாகிய பவுலும் குறிப்பிடுகிறார். தேவனையும் அவர் நமக்கு அருளுபவற்றையும், கற்றுக்கொள்ளவும், போதிக்கவும் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே முடியும். 

இதற்கு நேர்மாறாக, பரிசுத்த ஆவியாவனரைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெறும் வெளிப்புற உணர்ச்சி வசங்களுக்கும், தவறாக வேத வியாக்கியானக்களுக்கும் பெயர்’போன’ சபைகள் ஏராளம். இதன் விளைவு,  தேவன் அதைச் செய்வார், இதைச் செய்வார் என்றெல்லாம் தவறான எதிர்பார்ப்பில் சென்று, பின்பு அப்படி நடைபெறாத பல விஷயங்களால், கிறிஸ்தவ வாழ்வு சுவாரசியமற்றதாகவும் இனிமை இல்லாத ஒன்றாகவும் மாறிவிடுகிறது. பலரும் வெறும் வாரத்துவக்கக் கிறிஸ்தவர்களாக இருந்து விடுவது முறையான இறை அறிவு இல்லாததால்தான். வாரத்தின் நடுவில் வார்த்தையும் இல்லாமல், வார்த்தையால் நடத்த பரிசுத்த ஆவியானவர் உதவியும் இல்லாமல், உலகத்தின் நெருக்கடி அவர்களைத் திகைப்புக்குள் கொண்டு சென்றுவிடுகிறது.

தேவனை அறிய அறியத்தான் அவருடன் நேசமும் உறவும் வளர்கிறது. தேவ உறவு அவரை அறிந்துக்கொண்டே இருப்பதில்தான் வளர்ந்து பலப்படுகிறது. தம்மை அறிய அவர் தன்னைத் தம்முடைய வார்த்தைகளில்தான் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், தலைமுறைக் கிறிஸ்தவர்கள்கூட கடவுள் நாம் நல்லது செய்தால் நல்லது செய்வார். தீமை செய்தால் தண்டிப்பார் என்கிற அளவில்தான் அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஒருசாராருக்கு இப்படி என்றால் இன்னோரு சாரார் இன்னொருவிதம்: கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாயிற்று; நான் பாவியாக இருந்தேன்; தேவன் என்னை மன்னித்தார்; தம் பிள்ளையாக மாற்றினார் என்கிற அறிவையும் அடைந்தாயிற்று. இவற்றில் எல்லாம் எந்தச் சந்தேகமும் அவர்களுக்கு இல்லை என்றாலும், இந்த உலக வாழ்வு அப்படியே எளிய வகையில் வெறும் அடிப்படை நம்பிக்கைகளுடன் தொடர்ந்து, ஆழமான நம்பிக்கைக்குள் பயணிக்கவிட்டு விடுவதில்லை. பெற்ற அறிவைக் கேள்விக்குள்ளாகும், சந்தேகத்துக்குள்ளாகும் பல எதிர்ப்புகள் நாளும் இவ்வாழ்வில் வந்துகொண்டேதான் இருக்கும். அந்த இக்கட்டான சூழல்களில் வெறும் இரட்சிப்பைக் குறித்த அறிவு மட்டும் நம்மைத் தப்புவித்துவிடுவதில்லை. ஆவிக்குறிய வாழ்வில் ஜெயித்துக்கொண்டே செல்ல தேவ உறவில் ஆழமான அனுபவம் அவசியம். அது வாழ்நாட்காலமெல்லாம் தொடரும் ஒன்று. போதிக்கப்பட்டு அறிந்திருப்பதைக் கொண்டுதான் விசுவாசத்தில் வளர்ந்து பெருகமுடியும். (கொலோசெயர் 2:7 ) என்று பவுல் குறிப்பிடுவது இதைத்தான்.

“நாம் பெற்ற இறை அறிவு மட்டுமே எந்தச் சூழல்களிலும், எப்படியோ சமாளித்தேன்! என்று  இருக்கவிடாமல், நம்மைச் சாதிக்கிறவர்களாக மாற்றும்”, என்பார் போதகர் சார்ல்ஸ் அருமைநாயகம். அதாவது, ஆழமான இறையியல் அறிவு கிறிஸ்தவ வாழ்க்கையை வெறுமனே ஓட்டிக்கொண்டு சென்று விடுவோம் நினைக்க விடுவதில்லை. மாறாக எல்லாச் சூழ்நிலைகளிலும் ஜெயம் பெற்ற கிறிஸ்தவர்களாக இருக்கவும், சவாலான சூழல்களிலும் விசுவாசத்தையும் அதனால் வரும் சந்தோஷத்தையும் இழக்காதவர்களாகவும் வாழ உதவுகிறது. சவால்களில் இருந்து தப்பித்தால் போதும் என்கிற மனநிலை இறையறிவு பெற்ற இறையாளர்களுக்கானதல்ல. அறிந்த சத்தியம் விடுதலையைப் பெற்றுத்தருவதால், கிறிஸ்துவுக்குள் சுதந்திரவாளிகளாக எந்த அடிமைத்தன நுகத்துக்குளாகவும் சென்றுவிடாமல் காக்கும்.

கொலோசெய சபைக்கு எழுதுகையில், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக என்கிறார் பவுல் அடிகள். நாம் எப்படியோ ஒருவகையில் கிறிஸ்தவர்களானவர்கள் அல்ல. வெறும் பிறப்பால் யாரும் கிறிஸ்தவரும இல்லை. பிறப்பு நம்மை உலகத்துக்கு வேண்டுமானால் கிறிஸ்தவராக அடையாளம் காட்டலாம். ஆனால், மறுபிறப்பு அடைந்தவர்களாக கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்களானவர்கள் தான் தேவனுக்குச் சொந்தமானவர்கள். இப்படி அவருக்குச் சொந்தமான நாம், அவரை அறிவதில் வளர்வதுதான் முறையானது. காரணம் அதுதான் நம்மை நிலைபெற்று வளரவும் தொடர்ந்து அவருக்குள் இயங்கவும் உதவும். 

இது மட்டுமல்லாமல், நம் நம்பிக்கை என்ன என்பதை நாளும் உறுதிபடத் தெரிந்து அனுபவித்துக்கொண்டே  இருப்பது நமக்கு அவசியம். யாராவது நம் நம்பிக்கையைக் குறித்த கேள்விகேட்டால் முறையான பதில் சொல்லவதற்குக் கற்றிருந்திருக்க வேண்டும். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் என்கிறார் அப்போஸ்தலனாகிய பேதுரு. (1 பேதுரு 3:11). ஆனால், நமக்கே நம்பிக்கையில் ஊசலாட்டம் என்றால் கேள்வி கேட்பவர்கள் எளிதில் சந்தேகத்தை விதைத்து வீழ்த்திவிட்டுத்தான் செல்வார்கள். 

மேலும் மிகமுக்கியமாக, இறையியல் அறிவு இல்லையென்றால் நம் ஜெபங்களும்கூட ஏனோதானோவென்றுதான் இருக்கும். இறை அறிவு இல்லையென்றால் மாம்சத்தின்படிதான் போர் செய்து, நாளுக்கு நாள் சோர்வடைந்துகொண்டே இருக்கவேண்டி வரும். பதில் கிடைக்காத ஜெபங்களின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே இருக்கும். வேதத்தை அறியாதவர்களது ஜெபம் தேவனுக்குப் பிரியமில்லாதது அல்லவா?. (நீதிமொழிகள் 28:9). எனவே, தினமும் மூச்சுத் திணறும் வாழ்வும் கிறிஸ்தவ வாழ்வல்ல. அவரது மூச்சைப் பெற்றிருக்கும் நான், அவருக்கு ஒப்பாக ஆவியானவரால் நாளும் உயர்த்தப்படும் உன்னதமான வாழ்வு.

இறையியல் கற்க முதல் தேவை பைபிள்தான்.

இறையியல் கற்க முதல் தேவை பைபிள்தான். தனிப்பட்ட தியானம், குழுவாக இணைந்து என்று கற்பது தொடங்கப்பட வேண்டும். ஆனால், பைபிள் ஸ்டடி என்கிற வார்த்தையைச் சொன்னாலே, எங்களுக்குத் தெரியாத பைபிளா? நாங்க படிக்காத வேதமா? என்கிற அலட்சிய சிந்தனையோடு முகத்தைத் திருப்பிக்கொள்பவர்கள் ஏராளம். மேலும் முறையற்ற வேத அறிவு இல்லாமலேயே எல்லாம் தெரியும் என்கிற நினைப்பில் வீண் தர்க்கங்களுக்குள் நுழைபவர்களும் உண்டு.  வேண்டாத தர்க்கங்களுக்குள்ளும், எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மேட்டிமையான சிந்தனையும் தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமானவை. (2 கொரிந்தியர்10: 3-5). தாழ்மை இறையியலின் முதல் அவசியம்!. இறைவனை மூளை வீங்கக் கற்க இயலாது. ஆனால், தாழ்மைச் சிந்தையோடு வேதத்தில் வெளிப்படும் இறைவனைக் கற்கத்துவங்கிய சில காலத்திலேயே  இருதயம் வேத அறிவால் நிரப்பப்படும். வாயும் வசனங்களைப் பேசும். உறவை உணர்ந்து அனுபவிக்கும். ஜெப நேரங்களும் அர்த்தமுள்ளதாகவும், உணர்வுள்ளதாகவும், கிடைக்கும் பதில்கள் திருப்தியானதாகவும் நிச்சயமாக மாறும்.

இறையியல் கல்லூரிகள்?

அப்படியானால், இந்த இந்த இறையியலைக் கற்க இறையியல் கல்லூரிக்கெல்லாம் செல்லவேண்டியதில்லையா? என்கிற கேள்வி வரலாம். நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொடுக்கும் போதகராக விருப்பம் கொண்டிருப்பீர்களானால், இறையியல் கல்லூரி செல்வது நல்லதே. ஆனால், அப்படி எந்தக் கல்லூரிக்கும் செல்லாமலேயே,  நல்ல  போதகருக்குக் கீழ் கற்பதே நீங்கள் இறையியல் கல்லூரிக்குச் சென்று கற்பதைப் போன்றதுதான். அப்படிப் பட்ட போதகர்களை, சபைகளைக் அறிய விருப்பமும், ஜெபமும் தேடலும் வேண்டும்.  அதன்பின் ஆவியானவர் அதற்கான உதவி அளிக்காமல் இருக்கபோவதில்லை.  நீங்கள்  நிச்சயம் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருக்க தேவன் உதவி செய்வார். மிகச் சிறப்பான வேத ஞானத்தையும், வியாக்கியானத தாலந்துகளையும் பெற்ற பல போதகர்களும் அவர்களது சபைகளும் உண்டு. தேடுங்கள். கண்டடைவீர்கள்.!

குறுகிய காலத்தில் அதிகம் கற்பதற்கு இறையியல் கல்லூரிகள் உதவியாக இருக்கும். ஆனால், சரியான கல்லூரியைத் தேர்ந்தடுப்பதும்கூட சவாலான ஒன்று தான். “தியாலஜி படிக்கச் சென்று கெட்டுப்போய்விட்டான்”, என்கிற கூற்றை என் காதால் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் போதகர்களாக ஆக விரும்பாவிட்டாலும் பட்டம் ஒன்றுக்காகப் படிக்காமல், தனிப்பட்ட வாழ்வில் வேத ஞானம் வளர படிப்பது ஒரு கல்லூரியில் இணைந்து கற்பது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று. அது உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்தது. அதுவே இறைச் சித்தமாக இருந்தால், அதுவும் கூடிவரும்.

வேதாகமக் கல்லூரிக்குச் சென்று வெறும் புரட்சியாளர்களாக வெளிவந்து சபையோரை கொஞ்சம்கூட வளரவிடாத வாய்ஜாலர்களும் உண்டு. இறையியலை முறையாகவும் சரியாகவும் கற்று இரட்சிப்பு, திருச்சபை வரலாறு, திரித்துவம், பழைய புதிய ஏற்பாட்டுப் புத்தகப் பின்ணனிகள், ஆவிக்குறிய விளக்கங்கள், வேத வார்த்தைகளை தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவமாக மாற்றுதல், கிறிஸ்துவைக் குறித்த அறிவு, இஸ்ரவேல்/யூத வரலாறு, கடைசிக்கால நிகழ்வுகள், நித்திய வாழ்க்கை, உலகின் தொடக்கம், மனிதனின் முடிவு, தூதர்கள், சபை, பாவம், நியாயப்பிரமாணம், கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், உயிர்த்தெழுதல், காலப் பிரிவுகள், உடன்படிக்கைகள், சபை மறுமலர்ச்சி என்று மிக ஆழமாக சபையில் போதிப்பவர்களும் உண்டு. இப்படிப்பட்ட சபையில் அங்கத்தினராக இருப்பீர்கள் என்றால் அதுவே ஆசிர்வாதமான ஒன்றுதான். தற்காலத்தில் ஆன்லைனில் பல போதகர்களின் போதகங்கள் இருப்பது ஆசிர்வாதமான ஒன்று. 

இறையியல் கற்பதில் நல்ல புத்தகங்களுக்கு நிச்சயம் மிகப்பெரும் பங்குண்டு. ஆனால், அதற்கு முதலில் வாசிப்பவர்களாக இருந்தாக வேண்டும். நான் எதையும் வாசிக்க மாட்டேன் என்பவர்கள் வேதத்தை மட்டும் வாசித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நம்ப கடினமானது. விதிவிலக்குகள் இருக்கலாம். தனிப்பட்ட நூலகம் ஒன்றை உருவாக்க முயல்வது இறையியலை தொடர்ந்து வாசித்துக்கற்பவர்களுக்கு இருக்கவேண்டிய விருப்பம். மேலும், இறையியல் கற்கும் ஆசையுள்ளவர்களுடம் இணைந்துகொள்ளுங்கள். அவர்களுடன் உரையாடுங்கள். சந்தேகங்களைக் கேட்பதற்கும் பதிலளிக்கவும் தயங்காமல் பழகுங்கள். வீடுகளில், குடும்பத்தில் வசனங்களைப் பற்றியும், கேட்ட போதனைகளைப் பற்றியும் உரையாடுங்கள்.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனிப்பட்ட வாழ்வில் இறையியலாளர்களாகத்தான் இருந்தாகவேண்டும். வேதத்தை நேசித்து, தியானித்து, விளங்கிக்கொண்டு, அனுபவமாக்கி, மகிழ்ந்து வளரும் எவரும் இறையியல் மாணவர்கள்தான். நாம் கடைசிவரை மாணவர்களாக இருப்பதும் பாக்கியம்தான்! இதற்கான முயற்சி வெளியில் இருந்து துவங்குவதில்லை. இறையியல் கல்லூரிகளில் துவங்குவதில்லை. மாறாக நம் கைகளில் இருக்கும் வேதத்தில் இருந்துதான் துவங்குகிறது. வேதத்தை நாளும் நேசத்தோடு பிரிக்கும் நீங்களும் இறையியலாளரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *