தாங்கமாட்டீர்கள் – பாகம் 3

தாங்கமாட்டீர்கள் பாகம் 3

(பாகம் 1) (பாகம் 2)

நான்கு சுவிசேஷ நூல்களிலும் நுழைந்து நன்றாக கவனித்தீர்கள் என்றால் இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில் அவர் போதிக்காத வார்த்தை ஒன்று “கிருபை”. இது ஆச்சரியமான விஷயம் தான். அவர் வாயில் இருந்து கிருபை என்கிற வார்த்தை வெளிப்படவில்லை. ஆனால், அதற்குக்காரணம் சாதாரணமானதே. கிருபை என்கிற – யூதர்கள் நன்றாக அறிந்திருந்த வார்த்தையை அவர் போதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவு வாழ்ந்துகாட்டினார். தன் ஒவ்வொரு செயல்களிலும் கிருபையை வெளிப்படுத்தினார். வருடக்கணக்கில் நோயுற்றுக்கிடந்தவர்களை நோக்கி அவரே சென்று  “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டுக் கொடுத்ததெல்லாம் கிருபையாலன்றி வேறென்ன. அவர் பூமியில் பாவிகளைத் தேடிவந்து மரித்தற்குக் காரணம் கிருபையைத் தவிர வேறேது? 

அதனால்தான் அப்போஸ்தலராகிய யோவான் எழுதுகிறார் கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின என்று! (யோவான் 1:17).

கிருபையின் ஆதாரமே அவர்தான். அவரின்றி கிருபை என்று ஒன்று கிடையாது.  ஆனால், அன்று அவர் சீடர்களுக்கு ‘கிருபை என்றால் என்ன’ என்று விளக்கிக் கொண்டிருக்கவில்லை. உவமைகளில் வழியாகவும் கிருபையை விளக்கவில்லை. ஆனால், இன்று உவமைகளை வாசிக்கும் நமக்கு கிருபையைப் புரிந்துகொள்வது எளிது. பரலோக இராஜ்ஜித்தின்  நீதியை வெளிப்படுத்தும் ஒரு உவமையில், வீட்டு எஜமான் பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்களுக்கும் ஒரு பணம் கூலியாகத் தந்ததன் அடிப்படையும் கிருபைதான். இன்னொரு உவமையில் ஒரு எஜமான் கொடுத்த  ஒரு தாலந்தைக்கூட சரியாகப் பயன்படுத்த தெரியாத பிரயோஜனமற்ற ஊழியக்காரனுக்குக் கொடுத்ததும் கூட கிருபைதான். தகுதியற்றவர்களுக்கு  அளிக்கப்படும் எதுவுமே கிருபையால்தான்.

இப்படியாகத் தன் வாழ்வு முழுவதும் – சொல்லிலும் செயலிலும் கிருபையை வெளிப்படுத்தியவராகவே சுற்றித் திரிந்தார் கிறிஸ்து. இன்றும் நாம் கிருபையைக் குறித்துப் பிரசங்கம் பிரசங்கமாக கேட்கிறோம். அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் கிருபை பாடல்களில் இடம் பிடித்துவிடுகிறது. பல தவறான உபதேசங்களிலும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒன்றாகவே கிருபை பயன்படுத்தப்படுகிறது. 

கிருபை என்பது கிறிஸ்துவின் பாடுமரணங்களுக்குப் பின்னர் முழுமையாகப் போதிக்கப்பட்டாயிற்று. அதன் முழுமையான விளக்கம் சிலுவையில் கொடுக்கப்பட்டாயிற்று.  எனவே, அன்று அவர் மக்கள் புரிந்துகொள்ளாததுபோல் இன்றும் நாம் கிருபையை புரிந்துகொள்ளாமல் இருப்பது தகாது!  ஒருமனிதன் பாவத்தில் இருந்து இரட்சிப்பைப் பெறுவது கிருபையால் மட்டுமே அதுவும் கிறிஸ்துவால் மட்டுமே. சிலுவையில் மரித்த கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத எவருக்கும் அவர்களை இரட்சிக்கும் கிருபை என்பது கிடைக்காது!

தேவன் தன் கிருபையை என்றுமே வெளிப்படுத்தியவண்ணம்தான் இருக்கிறார். சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள் என்று உபாகமத்திலேயே இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தெரிந்துகொள்ளுதல் என்பதே கிருபையின் அடிப்படையில்தான், திறமையின் அடைப்படையிலோ அல்லது நற்செயல்களின் அடிப்படையாலோ அல்ல என்பது உணர்த்துவிக்கப்பட்டிருந்தது. 

ஆதாமை பாவம் செய்த அன்றே கொல்லாமல் விட்டது கிருபைதான். ஆனால், கிருபை இப்படி வெறுமனே தப்புவிக்க மட்டுமல்ல, வாழவைக்கவும் அவசியமானது.  நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது என்று சொல்வதில் இருந்து கிருபையின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளலாம். தேவன் நம்மேல் பாராட்டும் அன்பின் அடிப்படியில் மட்டும் அவராகவே காட்டும் ஒன்றுதான் கிருபை என்று அறிந்துகொள்ளலாம். அதன் பின் தன் அழைப்பை விசுவாசித்த ஆபிரகாமுக்கு தன்னால் நீதிமான் என்று அறிவிக்கப்பட்ட மேலான அந்தஸ்த்தை அளித்ததும் அவரது கிருபைதான்.

பிற்காலத்தில் இதைத் தெளிவாக விளக்கியவர் அப்போஸ்தலனாகிய பவுல் என்றாலும், கிருபை எந்நாளும் செயல்பாட்டில் இருந்தேவந்தது. அதை தேவமக்கள் உணர்ந்தே இருந்தார்கள். தாவீது அதற்கு மிகப் பெரும் உதாரணம். இன்று கிறிஸ்துவின் சிலுவையின் கீழ்ழ் சங்கீதங்களை வாசிக்கும் நமக்கு கிருபை தாங்கமாட்டாத உபதேசம் அல்ல. புரிந்துகொள்ள இலகுவானதே. 

இவற்றை எல்லாம்தான் ஆண்டவர் சீடர்களுக்கு விளக்கவில்லை. ஆனால், உயிர்த்தெழுதலுக்குப் பின் அந்த நிலை மாறியது.  அவர்கள் தெளிவாக எழுதுமாறு அவர்களுக்குப் போதித்தார். நாம் இன்று ஆராய்ந்து அனுபவித்துமகிழும் அளவுக்கு அவர்களைக் கிருபையைக் குறித்து எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனால், ஆண்டவர் சொல்லியும் சீடர்கள் விளங்கிக்கொள்ளாதவைகளும் உண்டு. அது சத்தியத்தைப் பற்றிய சத்தியம். அது அடுத்த பாகத்தில்.

முந்தைய பாகங்கள்: (பாகம் 1) (பாகம் 2); அடுத்த பாகம் (பாகம் 4).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *