தாங்கமாட்டீர்கள் பாகம் 6 – சுவிசேஷம்

தாங்கமாட்டீர்கள் பாகம் 6

 [பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4] [பாகம் 5]

“ஓ, இதுதானா அது” என்கிற ஆச்சரியமான அனுபவம் இல்லாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை.  பலவருடங்கள் படித்துப் பரிட்சைகளில் பாஸாகி இருந்தாலும் அவற்றின் உண்மையான விளக்கங்கள் பிற்காலங்களில் கிடைத்த அவை புரிகிற காலத்தில் கிடைத்திருக்கும். “இதைத்தான் படிக்க அப்போது திணறினோமா?” என்று நினைக்கவைக்கும் தருணங்கள் அவை.

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில், தன் சீஷர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாகப் போதித்துவிடவில்லை. அவர் இறைத்தன்மை கொண்டிருந்தவர் என்றபோதிலும் சீஷர்களின் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக – அதாவது – புரிந்துகொள்ளும் சக்திக்குத் தக்கதாகதான் போதித்தார். மிகவும் மெதுவாகத்தான் அவர்களும் புரிந்துகொண்டார்கள். மூன்று வருட டிகிரி என்பதுபோல சிலவருடப் படிப்பு என்று அவசர அவசரமாக அவர் எல்லாவற்றையும் அவர்கள் மனதில் திணிக்க முயற்சி செய்யவில்லை. பிற்காலங்களில் அவர்கள் தொடர்ச்சியாகப் போதிக்கப்பட்டு இயல்பாகவே ஆழமான முதிர்ச்சிக்குள் செல்ல அனுமதித்தார். நமக்கும் இன்று அப்படியே. நாம் கற்றுக்கொள்ளும் சீஷத்துவ மனப்பான்மையில் இருந்தால் போதும், வேண்டிய அறிவு வேண்டிய மட்டும், வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.

அவர் பூமியில் இருந்தபோது ஆழமாகச் சென்று விளக்காத ஒரு விஷயம் – சுவிசேஷம். தரித்திரருக்கு – அதாவது சொல்வதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும், திறந்த மனதுடைய தாழ்மையான எளியவருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது என்றார் மத்தேயு 11:5.  அதன்பின் சுவிசேஷம் உலகமெங்கும் பிரசங்கிப்படும் என்றும் சொன்னார். அவர் விடைபெறும் முன் சகல ஜாதிகளுக்கும், அதாவது, உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தை அறிவிப்பதை சீஷர்களின் கடமையாக கட்டளையிட்டும் சென்றார். 

ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் (மத்தேயு 24:14) தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார் (லூக்கா 8:1) என்றும் வாசிக்கிறோமே ஒழிய நற்செய்தி என்றால் என்ன என்றோ, சுவிஷேசம் என்றால் என்ன என்றோ அவர் தனியாக விளக்கம் அளித்துப் பிரசங்கவில்லை. இதற்குக்காரணம் எளிது. யூதர்கள் நற்செய்தியை அல்லது சுவிசேஷத்தை எதிர்பார்த்துக்காத்திருந்தார்கள். அது மேசியாவாக – நபராக வரும் என்பதை அறிந்திருந்தார்கள். அடிமைத்தனத்தின் நுகத்தில் அடிக்கடிப் பிணைப்படுக்குக் கிடந்த யூதர்களுக்கு எப்போதுமே ஒரு இரட்சகர் தேவைப்பட்டிருக்கிறார். கிறிஸ்து வந்த காலமும் ரோமருக்குக் கீழ் அடிமைப்பட்டிருந்த காலம்தான் என்பதால், சீஷர்களுக்கு அவரை மேசியாவாக ஏற்றுக்கொண்டு, அவரை நற்செய்தியை உண்டாக்கப் போகும் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கவில்லை. ஆனால், அவரை இந்த பூமியில் ரோமர்களிடம் இருந்து விடுவிக்கப்படும் இராஜாவாக எதிர்பார்த்திருந்தவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் இராஜாவாக அவர் வரவில்லை. எனவே, அவர்தான் நற்செய்தி என்றோ, அவரே மீட்பர் என்றோ அவர்கள் புரிந்துகொள்ளாமல் போனதில் ஆச்சரியமில்லை.

சீடர்களும் அவரை முழுமையாகப் புரிந்துகொண்டு மெய்யான மீட்பே இரட்சிப்பு என்பதை அன்று விளங்கிக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், கிறிஸ்துவின் சிலுவைப் பாடும் உயிர்தெழுதலும், அதன்பின்னரான ஒரு 40 நாள் ஆழமான பயிற்சியும் நிலையை அடியோடு மாற்றின. அவர்தான் சுவிசேஷம் என்று அறிந்துகொண்டு அதன்பின் ஆழபடுவதுஅவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. அதன்பின் எழுதப்பட்ட சீஷர்களின் எழுத்துக்கள் வழியாகத்தான் நாம் இன்று சுவிசேஷத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்கிறோம்.

“இயேசு எனக்காக  மரித்தார் பிரதர்!” இதுதானே நற்செய்தி என்று நாம் இதற்கு மேல் செல்வதில்லை. மற்றவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல விரும்பும் கிறிஸ்தவர்களும் கூட நற்செய்தியின் ஆழத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் நமக்குள்ளே இருக்கும்  கெட்ட செய்தியின் தாக்கத்தைப் பற்றித்தெரிந்திருந்தால் நற்செய்தியின் மேன்மையை விளங்கிவதும் எளிதாகும்.

வேதம் நல்லவர்கள் ஒருவரும் இல்லை என்கிறது. எல்லோரும் பாவம் செய்து ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். பாவத்தின் அடிமைகள் என்கிறது. எனவே, நம்மை நாமே விடுவிக்கக்கூடாமல் பெலனற்றவர்களாக இருந்ததால் தொடர்ந்து அபப்டியே அக்கிரமக்காரராக இருந்தோம் என்கிறது. அதுமட்டுமல்லாமல், நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருந்தோம். கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் நாம். தேவ கோபாக்கினைக்கு உள்ளானவர்கள் என்றெல்லாம் சொல்லும் வேதம் (ரோமர் 5:6,8,9,10,19), அதன் உச்சமாக நாம் அக்கிரமத்தில் மரித்துக்கிடந்த செத்தவர்கள் (எபேசியர் 2:1) என்கிறது. இவை எல்லாம் நமக்குத் தீய செய்திகள்.  இவற்றில் இருந்து நம்மை நாமே விடுவிக்க இயலாத இயலாமை இன்னும் மோசமான செய்தி. இப்படியாக மனுக்குலத்திற்கு இதைவிட கெட்ட செய்தி வேறொன்றும் இருக்க இயலாது.

ஆனால், நமக்கு கிறிஸ்து சுவிசேஷமாக வந்தார். தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் என்று பிற்காலத்தில் அப்போஸ்தலராகிய பேதுரு நற்செய்தியைப் புரிந்துகொண்டவராக விளக்குகிறார்.  பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது என்று நற்செய்தி மனித முயற்சிகளால் அல்ல (1 பேதுரு 1:12), அது தேவ பெலத்தில்தான் அறிவிக்கவும்படுகிறது என்று தாழ்மையாகத் தெரிவிக்கிறார். 

இன்று நமக்குப் புரிந்திருக்கும் நற்செய்தி நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானோம் என்பதுதான். இந்த நற்செய்தி நம் வாழ்நாள் முழுவதும் நம்முடம் இருக்கும் நற்செய்தி. ஒரு நாளில் இரட்சிக்கப்பட்ட அன்று நின்றுப்போவதில்லை. இதை உணர்ந்த அப்போஸ்தலனாகிய யோவான் சொல்கிறார்:

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.! இது ஒவ்வொரு நாளுக்கும் தேவைப்படும் நற்செய்தி.

இதுதவிர கிறிஸ்து சீஷர்களுக்கு விளக்கிச் செல்லாதவைகள் உண்டா? அடுத்த பாகத்தில்.

முந்தைய பாகங்கள்: [பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4] [பாகம் 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *