
நல்ல ஆசிரியர்களுக்கென்று சில அடையாளங்கள் உண்டு. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது குறைந்தகாலம்தான் அவர் வகுப்பெடுத்தார். ஆனால், பள்ளியில் அந்த ஒரு ஆசிரியர் கற்பித்த விதம் மட்டும் இன்றும் நினைவில் இருக்கிறது. தான் எடுக்கப்போகும் பாடப்பகுதியை முதலில் ஒரு 10 நிமிடம் வாசிக்க நேரம் தருவார் அதன் பின் சில கேள்விகளைக் கேட்பார். அல்லது கேள்வி கேட்கச் சொல்வார். கடினமான பாடம் என்றால் என்ன புரிந்துகொண்டீர்கள் என்று கேட்பார். இந்த நேரம் முடிந்தவுடன்தான் அவர் அந்தப் பாடத்துக்குள் நுழைவார். இந்தப் போதனைமுறை பல சமயங்களில் சிறப்பாகவே இருந்தது. சிந்திக்க வைத்த ஆசிரியராக அவர் இன்றும் என் நினைவில் இருக்கிறார். இந்த பூமியில் அவர் இருந்த காலங்களில், நம் ஆண்டவரும் ஒரு நல்ல போதகராக இருந்தார். தன் சீடர்கள் மேல சுமைகளை ஏற்றவேயில்லை.
அப்போது அவர் போதித்த விஷயங்கள் எல்லாம் எளிமையாக இருந்தது. இன்றும் சுவிசேஷங்கள் வாசிக்க எளிமையாகவும், கிறிஸ்துவை அறியாதவரும் அறிந்துகொள்ள விரும்புமாறு நல்ல துவக்க நூலாக இருக்கக்காரணம், அவர்தான்! அவர் பேசியவையெல்லாம் ஆராய்ச்சிக்கு உட்படும் அளவு ஆழமானவை என்றாலும், எவரும் புரிந்துகொள்ளுமாறும் இருப்பது ஆச்சரியமான ஒன்றே. தன் சீஷர்களுக்கு அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார் என்று அப்போஸ்தலராகிய மாற்கு குறிப்பிட்டிருக்கிறார் (4:33). அவர் கற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் மிகவும் எளிமையான பின்னணியைக் கொண்டிருந்தவர்களையே தெரிந்துகொண்டார். அதன்பின், அவர்களின் அன்றைய முதிர்ச்சியின் அளவுக்கு ஏற்பதான் ஆண்டவர் போதித்தார். எளிய விஷயங்களைக்கூட சில நேரங்களில் விளக்கிச் சொல்ல வேண்டி இருந்தது. ஆனாலும், பொறுமையாக அவர் கற்றுக்கொடுக்கத் தவறவில்லை.
இப்படி இருக்க – ஓரிடத்தில் அவர் சொன்னதைக் கவனிக்க வேண்டும் “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்” என்று! (யோவான் 16:12.)
அவர் சொன்ன அந்த தாங்கமாட்டாத விஷயங்கள் என்ன? என்ன இரகசியங்கள் அவை? ஏன் அவர் எல்லாவற்றையும் விளக்கவில்லை? அப்படியானால், தாங்க இயலாதவைகள் என்று போதனைகள் இருக்கின்றனவா? அவைகள் என்னவாயிற்று? தொடர்ந்து கவனிக்கலாம்.
(பாகம் 2) ->
Benny Alexander