சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?

சுயமுன்னேற்றப் புத்தகங்களும் கிறிஸ்தவமும்

ஒரு காலத்தில் எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘உன்னால் முடியும் தம்பி’. ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. தற்காலத்தில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகக் கண்காட்சி கண்காட்சியாக அவை அலைவதையும், அவற்றை வாங்கி ‘முன்னேறிவிட’ மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் காணலாம். ஆனால், ஒரு கிறிஸ்தவராக இந்த சுய முன்னேற்றப்புத்தகங்களை வாசிக்கலாமா, இல்லை தேவையில்லையா என்று கேட்டால், கிரேங்கர் ஸ்மித் தரும் ஒரு பதிலையே தரவிரும்புகிறேன். 

“சுய முன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் பிரச்சனை வெளியில் இருப்பது போலவும் தீர்வுகள் எல்லாம் நம்முள்தான் இருப்பதுபோலவும் காட்டுகின்றன். ஆனால், வேதம் போதிப்பது அதுவல்ல. பிரச்சனை இருப்பது நமக்குள். அதற்குத்  தீர்வு வெளியே இருந்துதான்! இது தான் வேதம் காட்டும் வழி”

அதாவது பிரச்சனைகள் எல்லாம் வெளியில் இருந்தான் வருகிறன. எனவே நம்முள்ளே புதைந்துகிடக்கும் திறமைகளைத் தட்டிவிட்டு, பல வழிகளைக் கற்றுக்கொண்டு நாமே தீர்வுகளாக மாறவேண்டும் என்று போதிப்பவை இந்தச் சுய முன்னேற்றப்புத்தகங்கள். ஆனால், பிரச்சனையே நாம்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். நமக்குள்தான் பிரச்சனை இருக்கிறது என்பதை  நாம் நினைக்க விரும்புவதில்லை. எனவே, தீர்வுகள் தரும் வழிகள் என்று ஒரு சில நம்மிடம் இருந்தாலும், அவையெல்லாம்கூட உண்மையில் உதவாத அளவுக்கு தரும் அளவுக்கு நாம் பிரச்சனை மிகுந்தவர்கள். 

மேலும், பல பிரச்சனைகளை நாமே உருவாக்கிவிடுகிறோம். இப்படி நம்மிடம் இல்லாத தீர்வுகளை நாமே உருவாக்கிக்கொள்ளும் முயற்சியிலும் நாம் திணறுகிறோம் என்பதால், வெளிப்புறத்தில் இருந்துதான் உதவி வந்தாக வேண்டும். அது கிறிஸ்துவால் மட்டுமே முடியும் என்பதுதான் வேதம் காட்டும் வழி. 

அப்படியானால் சுய முன்னேற்றப் புத்தகங்களை வாசிக்கவே கூடாதா என்றால், அது நீங்கள் எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது. சில அருமையான ‘டிப்ஸ்’கள் தரும் புத்தகங்கள் உண்டு. ஆனால், அவற்றைக் கண்டறிவது சுலபமல்ல. பெரும்பாலான புத்தகங்கள் காட்டும் வழி நாம் மேலே பேசிய வழிதான் என்பதால், உங்களால் அவற்றை அடையாளம் காண முடிந்தால் மட்டுமே அவற்றைப் புரட்டிப்பார்ப்பது தகும். இல்லையென்றால், விட்டுவிலகுவதே சரி. வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலர் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதி கோடி கோடியாகக் பணம் குவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் குப்பைகள். சமீபத்தில் ‘Rich Dad Poor Dad” என்கிற பொருளாதார உதவிப்புத்தகம் எழுதியவரே பண மேலாண்மையில் தோல்வியுற்றுக் கடனில் சிக்கி இருப்பதைக் செய்தியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எனவே, நாம் பிரச்சனைகளை வேதத்தின் வழியாக, கிறிஸ்துவின் கண்கொண்டு பார்ப்ப முடிந்தால் மட்டுமே தீர்வுகளைப் பெறமுடியும். சிலவகைகளில் நம் அனுபவத்தில் நாமே சில தீர்வுகளை ஏற்படுத்தவும் முடியும். என்றாலும். அனைத்திற்கும் அடிப்படை நமக்கு சத்திய வேதம் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *