
நமக்குள் இருக்கும் கெட்ட விஷயங்கள் பளிச்சென்று தெரிந்துவிடும். ஆனால், பல இடங்களில் நல்ல விஷயங்கள், நாம் அறியாத வகையில் நமக்கு இடைஞ்சலாக இருக்கும்!
இதற்கு சுயபரிசோதனை அவசியம். ஏனென்றால், நல்ல பழக்கவழக்கங்கள் என்பவை இயல்பில் நல்லவைகளாக இருப்பதால், நம் இருதயம் அதில் மகிழந்து நின்றுவிடும். எனவே, ஒரு கட்டத்தில் நல்லபழக்க வழக்கங்களே நம்மை நல்லவர்களாக ஆக்கிவைத்திருப்பதாக நினைக்கத் துவங்குவோம். விளைவு, நம்மிடம் நம்மைபோல இல்லாதவர்களை, நல்லவர்கள் அல்ல என்றும் கருதம் அபாயம் உண்டு.
கிறிஸ்தவர்களாக நாம் அப்படிச் சில நல்ல பழக்க வழக்கங்களை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தால் வருந்தத்தக்க வகையில் தோல்வி அடைவோம். அப்படித் தவறும்போதெல்லாம் சுயபச்சாதாபம் வரும். மாறாக கிறிஸ்தவர்களாக நாம் வெளிப்படுத்த வேண்டியது கிறிஸ்துவை. அப்படிக் கிறிஸ்துவை வெளிப்படுத்த நினைத்தால், வெறும் நல்ல பழக்க வழக்கங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மேலானவர்களாக மாறுவோம்.
எதற்காக சர்சுக்குப் போகிறோம், எதற்காக ஆராதிக்கிறோம், எதற்காக ஜெபக்கூட்டம் வைக்கிறோம், எதற்காக ஊழியம் செய்கிறோம், எதற்காகக் கொடுக்கிறோம் என்பதில் இருந்து எதற்காக பைபிள் வாசிக்கிறோம், எதற்காக ஜெபிக்கிறோம் என்பதுவரைகூட அறிந்திருப்பது அவசியம். இந்த ஆவிக்குரிய நல்ல விஷயங்கள்கூட நம்மை சட்டவாதிகளாக/லீகலிஸ்டுகளாக, சுய பெருமைக்காரராக, மாற்றிவிடும் அளவுக்கு மிகவும் நுட்பமானவை.
உதாரணமாக காலை எழுந்து ஜெபிப்பது ஒரு நல்லபழக்கம்தான். ஆனால், அதையும் எதற்காகச் செய்கிறோம் என்று அறிந்தருப்பது அவசியம். காலை எழுந்து என் தேவனோடு முதலாவது சஞ்சரிப்பதை நான் விரும்புகிறேன் என்றால் அது கிறிஸ்துவை வெளிப்படுத்தும் செயல். அதற்கு மாறாக காலை எழுந்து தொழுது கொண்டால்த்தான் ஆசிர்வாதம் என்றும், லேட்டாக எழுவது ஒழுக்கக்கேடு என்றெல்லாம் நினைக்கத்துவங்கினால், அப்படி எழாத போதெல்லாம் குற்ற உணர்ச்சி வரும்! அல்லது காலை ஏழு மணிக்கு எழுபவர்களைப் பார்த்தால், “இவரெல்லாம் தேவ பிள்ளையா?” என்கிற அளவுக்கு யோசிக்க வைக்கும். கிருபையில் நிற்காமல் சுயபலத்தில் நிற்பதில் வரும் பிரச்சனை இது.
நம்மிடம் உதிக்கும் நல்லவைகள் நல்லவைகளாகவே இருக்க கிருபை அவசியம். நல்லொழுக்கங்கள் இறை உறவின் விளைவாக மனம் புதிதாவதினால் மரூபம் அடைபவர்களாக இருக்கும்பட்சத்தில் தானாகவே வெளிப்படும். நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்துவோம். அம்மாற்றங்களுக்கான முழுக் ‘கிரடிட்டை’யும் தேவ கிருபைக்கே தருபவராக இருப்போம்.