
சமீபத்தில் ஒரு பிரசங்கம். அதில் பேசுபவர் ஒற்றைக்காலில் ‘முட்டிபோட்டு’ தான் ஜெபித்த விதத்தை விளக்கிக்கொண்டிருந்தார். மூட்டு இரண்டும் ‘காப்பு காய்த்து’ விடும்வரை ஜெபம் பண்ணுவாராம். அதாவது கடவுளை ‘இரங்க’ வைத்து இறங்கி வரச் செய்தல்.! இது ஒற்றைக்காலில் கிடுகிடு மலை உச்சியில் நின்று தவம் செய்வது போன்று; அதாவது அவரது கடினமான இந்த முயற்சிகளின் பலனாக, கடவுளின் மனதை இளக வைத்து, குளிரவைத்து – ஐஸ் வைத்து… அவர் விரும்பின காரியத்தை நடத்திவிடும்!
தமிழ்க் கிறிஸ்தவத்தில் அதிகமாகப் பேசப்படாத ஆனால், அனைவரது இருதயத்திலும் கொஞ்சமாவது “உட்கார்ந்து இருக்கிற”, நமக்குள் இருக்ககூடாத ஒரு விஷயம் சட்டவாதம்! நமக்குள் இருக்கும் ஒன்றை – இந்த வார்த்தையையே – நாம் பிரசங்கங்களில் யாரும் பேசிக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இது உதாரணங்களுடன் விளக்கப்பட்டால் மட்டுமே புரியக்கூடிய விஷயம்.
நீங்கள் தேவ கிருபையால் மீட்கப்பட்டவர்கள் என்று நம்புவீர்களானால், இந்த சட்டவாதம் என்கிற தவறான எண்ணத்தையும் செயல்பாட்டையும் அறிந்து களைவது நல்லது. எல்லாக் கிறிஸ்தவர்களிடமும் கொஞ்சமாவது சட்டவாதம் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதால் நீங்கள் எந்த அளவு லீகலிஸ்ட் என்பதைத் தற்பரிசோதனை செய்யவே இந்தக் கட்டுரை.
சட்டவாதத்திற்கான ஆங்கில வார்த்தை லீகலிஸம் (Legalism). லீகல் என்றால் சட்டப்படியான, இசம் என்றால் அதன் அடிப்படையில்லான கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் சட்டவாதம் என்பது கிருபைக்கு மாற்றாக வைக்கப்படுவது. (இதை பரிசேயத்தனம் என்றும் சொல்லலாம். ஆனால், பரிசேயர்கள் என்பவர்கள் வேலை உண்மையில் அது அல்ல என்பதால், அந்த வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது என்று நம்புகிறேன்.) ஆனால், கிருபையையே சரியாகப் புரிந்துகொள்ளாத கிறிஸ்தவர்கள் சட்டவாதத்தையும் புரிந்துகொள்வது கடினம்.
கிறிஸ்தவத்தில் சட்டவாதம் என்பது, தேவனைக் குஷிப்படுத்த வேதம் முன்வைக்காத விஷயங்களைக் கையில் எடுத்து நாமே முன்வைப்பது. அவரை மகிழ்விப்பதற்கும் அவரது அன்பைப் பெறுவதற்கும் நிறைய கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும்போது நமக்குள்ளே உற்பத்தி ஆகிவிடுவதுதான் இந்தச் சட்டவாதம்..! ‘நற்செயல்கள் செய்து, மதச் சட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிப்பதே கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படும் வழி’ என்று முரட்டுத்தனமாகவே நம்புவது. கிருபை என்பதையே புரிந்து கொள்ளாத நிலை இது.
கிருபை என்பது இறைஅன்பும், நம்மை அவர் ஏற்றுக்கொள்ளுதலும் நாம் சிலபல விதிகளை மிகக் கடினமாக பின்பற்றுவதால் கிடைப்பது அல்ல. மாறாக தாராளமாக அவரால் வழங்கப்படும் ஒன்று!. நாம் தவறு செய்யும் போதும்கூட கடவுள் நம்மை நேசிக்கிறார் என்றும், மனம்திரும்பி வந்தால் உடனே மன்னிக்கிறார் என்றும் அறிந்திருப்பது தான் கிருபையைச் சரியாக அறிந்துகொள்ளுதல்.
உங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் இரண்டு பேர். பிரதர் ஜான் மற்றும் சிஸ்டர் மேரி என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஜான் சட்டவாதத்தில் நம்பிக்கை கொண்டவர். தினமும் சரியாக ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும், ஒவ்வொரு சபைக்கூடுகையிலும் கலந்து கொள்ள வேண்டும். ‘தப்புத்தண்டா செய்துவிட்டால் முடிந்தது கதை’ என்று ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையாக அல்ல, பயத்துடன் வாழ்கிறவர். இந்த விஷயங்களையெல்லாம் செய்யத் தவறினால், தன்னுடன் இருக்கும் கடவுள் மகிழ்ச்சியற்றவராகத்தான் இருப்பார் என்று அவர் நம்புகிறார். இதோடு விட்டாரா? தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவர் ஒரு ஆவிக்குரிய டெரர்!. கொஞ்சம் ‘அப்படி இப்படி’ இருப்பவர்களைக் கண்டால் வைய ஆரம்பித்துவிடுவார். மற்றவர் பார்வையில் இவர் ஒரு அதீத பக்திமான்! எனவே, சுற்றி இருப்பவர்களுக்கும் இவரைக் கண்டால் பயம்தான். ஆனால், நம் பிரதர் ஜான் வகையினர் ஒரு வகை அவஸ்தையோடு வாழ்பவர்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கூட சரியாக நிதானிக்கத்தெரியாத ஆட்கள். கர்த்தருக்குள் சந்தோஷப்படுவதைக் கூட அறிந்திராத வறண்ட ஆசாமிகள்.
சிஸ்டர் மேரி கிருபையில் நம்பிக்கை கொண்டவர். ஜெபிக்கவும், சர்ச்சுக்குச் செல்லவும் அவர் முயற்சி செய்கிறவர்தான், ஆனால் சில சமயங்களில் ஜெபத்தைத் தவறவிட்டாலோ அல்லது தவறு செய்தாலோ தேவன் தன்னை நேசிப்பதை நிறுத்தப் போவதில்லை என்பதை அவர் அறிவார். சில நாட்கள் இரவு வேலையல்லாம் முடிந்தபின் அதீத களைப்பில் ஜெபிக்க மறந்து தூங்கிவிட்டால், மறுநாள் குற்ற உணர்ச்சியுடன் எழும்புவதில்லை. தேவன் கிருபையாய்த் தந்த நல்ல தூக்கத்திற்காக நன்றி என்று எழுவார். பிள்ளைகளைக் கரித்துக்கொட்டுவதில்லை. தன்னைக் காத்த கிருபைதான் இன்று அவர்களையும் வளர்க்கிறது என்று நம்புவார். அதீத வார்த்தைகளால் தன் ஜெபம் கேட்கப்படும் என்று அரற்றுவதில்லை. சொல்பிறவாதத்தற்கு முன் தேவன் தன் தேவையை அறிவார் என்பதை ஆழமாக நம்புகிறார். கடவுளின் அன்பும் மன்னிப்பும் தன்னுடைய சரியான நடத்தையைச் சார்ந்தது அல்ல என்பதை அவர் நம்புவதால், சமாதானம் அவர் உள்ளத்தை ஆளுகை செய்கிறது.
இப்போது கிருபைக்கும் சட்டவாதத்திற்கும் இடையில் இருக்கும் பொருத்தமற்ற தன்மை புரிந்திருக்கும்.
சட்டவாதம் பார்க்க ஒழுக்கமான விஷயமாகத்தான் தெரியும். இப்படி இந்தச் சட்டவாதத்தைச் சிலர் ஆவிக்குரிய ஒழுக்கத்துடன் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான் நம் பிரச்சனையே. மேற்பார்வைக்கு இறை ஒழுக்கம்போல் தெரிந்தாலும், கிருபையை நீக்கிவிட்ட வறட்சியான செயல்பாடுகளால் ஆனதுதான் இந்தச் சட்டவாதம். கிறிஸ்து பூமியில் இருந்தபோது பரிசேயர், வேதபாரகர்களை – அவர்கள் சட்டவாதிகளாக இருந்ததால்தான் கண்டித்தார். அவர்கள் இறை அன்பின் மெய்யான ருசியை மக்கள் அறியவிடாமல் செய்து வைத்திருந்ததைத்தான் சுட்டிக்காட்டி உபதேசித்தார். வருத்தப்படுவோருக்கு இளைப்பாறுதல் தருவது கிருபை. அவர்கள்மேல் ஒழுங்கு என்கிற பெயரில் சுமக்கமுடியாத சுமைகளை ஏற்றுவது சட்டவாதம். மாறாக தேவன் நம்மில் விரும்பும் ஆவிக்குரிய மெய்யான ஒழுங்கே கிருபையால் மட்டும்தான் நம்முள் உண்டாகும் ஒன்று.
சுருக்கமாக, சட்டவாதம் என்பது கடவுளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சட்டதிட்டங்களை நாமே போட்டு வைத்து அதைமட்டும் பின்பற்றுவது பற்றியது. அதே நேரத்தில் கிருபை என்பது தேவனின் நிபந்தனையற்ற அன்பையும் மன்னிப்பையும் நம்புவது பற்றியது. கிறிஸ்து சிலுவையில் பெற்றுத்தந்த விடுதலையைச் சார்ந்திருப்பது. இதை கற்றுக்கொள்ளத் துவங்குங்கள்.
நீங்கள் எங்கெல்லாம் உங்கள் வாழ்விலும், உங்கள் பிள்ளைகள், மனைவி, கணவர், நண்பர்கள் என்று சுற்றத்தார் மீதெல்லாம் சுமைகளை ஏற்றிவைத்திருக்கிறீர்கள் என்பதை நிதானித்து அறியுங்கள். கிருபை இலகுவாக்குவதை உங்கள் சட்டவாதம் கடினமாக்காமல் வாழும் உன்னதமான இன்பவாழ்வு இந்தக் கிறிஸ்துவின் வாழ்வு என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
Benny Alexander