
நீங்கள் எந்தச் சபைக்குச் செல்வோராக இருந்தாலும் அங்கே சும்மா ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்று உட்கார்ந்து எழுந்துவரும் கிறிஸ்தவராக இல்லாமல் – கிறிஸ்துவின் சீஷராக இருக்க சில விஷயங்களைக் குறித்த அறிவும் செயல்பாடும் அவசியம். (அவைகளை “குறைந்தது” ஏழு வகையாக கீழே பிரிக்க முயல்கிறேன்.)
- கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்கள் (உதாரணம்: உலகத்தின் தோற்றம், பாவம், மீட்பு, முடிவு)வேதாகமத்தின் பின்னணி, நூல்களின் பின்ணனி, எழுதியவர்கள், அதிகார வசனங்களின் பின்னணி
- இறையியல் – அல்லது இறையறிவு அல்லது தேவனின் இயல்புகள், குணாதிசயங்கள் (தேவன் எப்படிப்பட்டவர், எதைச் செய்வார், செய்யமாட்டார் என்பவை)
- உபதேசங்கள் (உதாரணம் – திரித்துவம், கிறிஸ்துவின் வருகை, விழுந்துபோன தூதர்கள் etc)
- திருச்சபை வரலாறு, உபதேசங்களின் பின்னணி, சபை மறுமலர்ச்சி/சீர்திருத்தம், கள்ள உபதேசங்கள் குறித்த அடிப்படைகள்
- கிறிஸ்தவரின் உலகக் கண்ணோட்டம்/பார்வை, நிகழ்கால பிரச்சனைகளை அணுகும் விதம்
- தனிப்பட்ட வாழ்வில் வேதாகமம் மற்றும் ஜெபம் உண்டாக்கும் அனுதின பாதிப்பு/மாற்றம்/உருமாற்றம்/ஊழியம்/இறைநோக்கம்
இவற்றில் பெரும்பாலான விஷயங்களை தவிர்த்துவிட்டு – பணச் செழிப்பு, ‘எங்கே விழுந்தீர்களோ அங்கேயே உயர்த்துவார்’, இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்..சுகம், என்பதான வார்த்தை ஜாலங்கள், ஆட்டம் பாட்டம் என்று பொழுதுபோக்கு என்றிருந்தால் மேலே குறிப்பிட்டவையெல்லாம் உங்களுக்கு அந்நியமாகத்தான் தோன்றும்.
மாறாக ஒரு கிறிஸ்தவனாக நீங்கள் இருக்க அல்லது வளர இவற்றை கூர்ந்து கவனிப்பது உங்களுக்கு நலம்! ஏனென்றால் உண்மையில் கிறிஸ்தவர்கள் மட்டும்தான் உண்டு. ‘கிறிஸ்தவக் கிறிஸ்தவர்கள்’ என்று ஒரு ஸ்பெஷல் கூட்டம் இல்லை. இரட்சிப்பின் அனுபவத்தில் இறை உறவில், மேலே உள்ள விஷயங்கள் அனைவருக்குமே பொருந்தும்.