நானே ஜீவ ஊற்று என்று சொன்னவர், நான் தரும் தண்ணீரை அருந்துபவன் ஒருக்காலும் தாகமடையான் என்று சொன்னவர் – எப்படி தாகமாயிருக்கிறேன் என்று சிலுவையில் சொல்லியிருக்கமுடியும். இது கிறிஸ்துவை அறியாதவருக்கு மட்டுமல்ல, அறிந்தவருக்கே புதிர்தான்.
சிறுவயதில் நான் நினைத்ததுண்டு: இயேசுவுக்கு சிலுவையில் வலிதெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் இறைவன் என்பதால் வலியை உடலில் இருந்து எடுத்துப் போட்டிருக்க அவரால் இயலும் என்று. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, மாறாக உண்மையாகவே தன் சரீரத்தில் வேதனைகளை அனுபவித்தார் என்பது புரிய காலங்கள் ஆனது. அவர் உண்மையுள்ளவர் என்பதால், அவர் மரணம்வரை உண்மையுள்ளவராகவே இருந்தார் என்பது தாமதமாகத்தான் புரிந்தது.
உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. (சங்கீதம் 89:8). உமது உண்மை பெரிதாயிருக்கிறது புலம்பல் 3:23. என்ற வார்த்தைகளை நினைவில் கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.
தீர்க்கதரிசன நிறைவேறல்:
கிறிஸ்து இந்தப்பூமியில் இருக்கும்வரை தன்னைப்பற்றி முன்னுரைக்கப்பட்ட ஏராளமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். அவர் உயிரோடிருந்தபொழுது சுமார் 360 தீர்க்கதரிசனங்களையும், குறிப்பாக சிலுவைப்பாடு மரணத்தின் கடைவி 12 மணி நேரத்திற்குள்ளாக சுமார் 44 தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றினார் என்று பாஸ்டர் Paul Prabhakar தகவல் தருகிறார்.
இயேசுவின் சீடர்களில் சிலுவையின் அருகில் யோவான் ஒருவர் மட்டும் அருகில் இருந்து கவனித்தவர். இளங்கன்று பயமறியாது என்பதனால் அவர் ஓடாமல் இருந்திருக்கலாம். அவர் (நான்) தாகமாயிருக்கிறேன் என்று இயேசு உரைத்ததைக் குறிப்பிடுகிறார். ஆனால், இயேசுவால் ஜீவதண்ணீரையே தரமுடியும் என்று அவரே சொல்லியிருக்க (யோவான் 4:10 ) அவர் எப்படி சிலுவையில் இப்படிக் கேட்டிருப்பார் என்ற ஆச்சரியம் சிலருக்கு. அவரை இறைவனாகப் பார்க்கத் தெரிந்த நமக்கு, அவர் பூமியில் மனிதனாகவே இருந்தார் என்பதை பார்க்கத் தெரியாததால், ஏதேதோ விளக்கங்கள் தரப்படுகிறது “தாகமாயிருக்கிறேன்” என்று அவர் சொன்ன இந்த வார்த்தைக்கு.
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான் 19:28 ).
இந்த வசனத்திலேயே மிக முக்கியமான பதில் கிடைத்துவிடுகிறது. அதாவது, சங்கீதம் 69:21 வேதவாக்கியம் நிறைவேறத் தக்கதாக இவ்வாறு சொன்னார் என்று. இதில் அவர் கசப்பு கலந்த காடியை (அல்லது மிகவும் புளித்த திராட்சை இரசத்தை) பருகும்படி போர்ச்சேவகர்களால் கேலி செய்யப்பட்ட நிகழ்வு நிறைவேறியது. அதாவது, குடிக்கத் தண்ணீர் வேண்டும் அவர் கேட்காமல் தாகமாயிருக்கிறேன் என்று தன் உணர்வைமட்டுமே வெளிப்படுத்தியிருந்தாலும், பழைய ஏற்பாட்டுச் சங்கீதம் இங்கு அவரால் நிறைவேற்றப்பட்டது.
சரீரத்தில் முழுமையாக இருந்தார்:
அவரது சிலுவை வாக்கியங்களை நன்றாக கவனித்தால், முதன் மூன்று வாக்கியங்களை அவர் மற்றவருக்காகவும், அடுத்த மூன்று வாக்கியங்களை தனக்கானதாகவும் சொல்லியிருப்பதையும் கவனிக்கலாம். (கடைசிவாக்கியமாகத் தன் ஆவியை ஒப்படைப்பதாக பிதாவிடம் சொல்லி முடித்தார்) இதில் தாகமாயிருக்கிறேன் என்ற ஆறாவது வாக்கியம் சொன்னது அவரைக் குறித்ததானது.
இந்த வார்த்தையில், அவரது தாகம் என்ன என்று பலரும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து பல பிரசங்கங்கள் செய்துகொண்டிருப்பதால அவர் நம் நடுவில் அவர் மனிதனாக இருந்தார் என்பதை மறந்துவிடுவதுதான் நடக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அவர் அதையும் பருகவில்லை. மனித உடலான அவர் உடலில் இருந்த ஏராளமான இரத்தம் வெளியேறிவிட்டது. 70 சதம் நீராலான உடலில் இருந்து அலைக்கழிப்புகளால் வெளியேறிய வியர்வை நிச்சயம் மிக அதிகமாக இருந்திருக்கும். இப்பொழுது எந்த மனிதனானாலும் தான் தாகமாயிருக்கிறேன் என்று நிச்சயம் அரற்றியிருக்கவே செய்வான்.
வேதனையின் உச்சத்தை அவர் தன் சரீரத்தில் முழுமையாக அனுபவித்தார். இதில் எந்தக் குறைக்கும் இடமில்லை. பிதாவாலும் (என் தேவனே) பரிசுத்த ஆவியராலும் (என் தேவனே) கைவிடப்பட மிகக் கொடுரமான நிலைமை. இவை சரீரத்தில் நடந்தேறும்போது தாகம் ஏற்படுவது இயற்கை. அதை அவர் இயற்கைக்குமாறாக அகற்றவோ மறைக்கவோ முயற்சிக்காமல் உண்மையாக வெளிப்படுத்தியதின் விளைவே “தாகமாயிருக்கிறேன்” என்ற சொல்.
எல்லாவற்றிற்கும் ஆவிக்குறிய விளக்கம் என்று ஒன்றைக் கண்டறிய முயலும் சிலருக்கு இத்தகைய எளிய நேரடி விளக்கம் ஏற்றுக் கொள்ளமுடியாமலும் போதாமலும் இருக்கலாம். ஆனால், இவ்விளக்கத்தில் கிறிஸ்துவின் உண்மைத் தன்மையையும் அவரது வேதனையின் உச்சத்தையும் சரீரத்தில் இருக்கும் நம்மாலும் உண்மையாகவே உணரமுடியும்.