கிறிஸ்தவநாடு என்று இவ்வுலகில் எதுவும் கிடையாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரவேல் உட்பட. அவற்றைக் கிறிஸ்தவநாடுகள் என்று சொல்வது இந்தியா மதநல்லிணக்க நாடு, இங்கு அனைவரும் சமம் என்று சொல்வதைப் போன்ற நகைச்சுவை. பொதுவிலும், அரசு ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் தாராளமாக எழுதி இப்படி அறிவித்துக் கொள்ளலாம். ஆனால், நம் இந்தியா இன்று எப்படி இருக்கிறது என்பதை அறியாதோர் இருந்தால் அவர் பல வருடங்களாக நினைவின்றி இருந்திருக்கவேண்டும்.
எப்படித் தம்மைக் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வோரெல்லாம் கிறிஸ்தவர் இல்லையோ அதேபோல் கிறிஸ்தவநாடு என்று அறிவித்தநாடுகள் எல்லாம் கிறிஸ்தவனாடு இல்லை. யாரவது ஒரு நாட்டைக் கிறிஸ்தவநாடு என்றால் அவர் உண்மையில் இயேசு தன் நாட்டைக் குறித்துச் சொன்னவற்றின் பொருளை இன்னமும் தியானிக்கவில்லை என்றுதான் கருதவேண்டும்.
உண்மையில் கிறிஸ்தவநாடு என்பது எது? அது எங்கே உள்ளது?
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் போதனையைக் கைக்கொண்டு அவர்வர யாரெல்லாம் பேராவலுடன் காத்திருக்கிறார்களோ அவர்களுள் இருக்கிறது கிறிஸ்தநாடு என்னும் கிறிஸ்துவின் நாடு. அவர்கள் ஐக்கியத்தில் இருக்கிறது அதன் செயல்பாடு.
சீனாவில் வெளியேதெரியாமல் முடங்கிக் கிடந்து எழுப்புதலைக் காண்பவர்கள், சென்னையில் ஒரு பிளாட்பாரத்தில் வேதத்தை தியானிப்பவர்கள், ஆப்ரிக்காவில் கொதிக்கும் பாலைவனத்தில் குடிசைக்குள் ஆராதிப்பவர்கள், ஓரிஸ்ஸாக் காடுகளில், பல்கேரியச் சிறைகளில், வளைகுடா நாடுகளின் இரும்புப்பிடியிலும், சமூகத்தின் ஓரஞ்சாரங்களில் என்று … இப்படி எங்கெங்கெல்லாமோ இருக்கிறது அந்த உன்னத நாடு. வெறுமனே ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட பேராலயங்களிலும், கோட்டு சூட்டு போட்ட கோமான்களிடமும்தான் இருக்கும் என்றில்லாமல், உண்மையாய் தம்மைப்படைத்தவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றும் அதற்காக உயிருடன் எரிக்கக்கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருப்பவர்களிடமும் தான் இருக்கிறது தேவனுடைய இராஜ்ஜியம் என்கிற அந்தக் கிறிஸ்தவநாடு.
‘பாவம் என்னும் நாட்டில் நான் பாவியாக இருந்தவன், எனக்கு விடுதலை அளித்தது புதிய குடியுரிமை அளித்து தன் நாட்டின் குடிமகனாக்கியது கிறிஸ்துவின் இரத்தம்’ என்று உரக்கச் சொல்வோரின் இணைக்கப்பட்ட இருதயங்களே அந்த நாடு.