
ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார். இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான்.
அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது அவரது நீட்சியைப் போன்றது.
“தேவர்களைபோல ஆவீர்கள்” என்று சொன்னதைக் கேட்டு மயங்கியதன் விளைவாக மனிதனிடம் டேமேஜ் ஆனது இந்தச் சமநிலை. புதிதாக ஒருவன் ஒன்றைச் சொன்னபோது, உடனடியாக ஆதாம் “இதைச் சாப்பிடும் நாளில் சாகவே சாவீர்கள்” என்று சொன்ன வார்த்தையை தன் முன் கொண்டு வந்து சிந்தித்திருக்கவேண்டும். அப்படி சிந்தித்திருந்தால் தன்னை உருவாக்கியவரது குரலே மேலானது என்றும் அவருக்குச் செவிசாய்ப்பதே சரியானது என்பதும் நினைவுக்கு வந்திருக்கும். பாவம் நுழைய ஆதாம் அன்று காரணமாக இருந்திருக்கமாட்டார். ஆனால், பிசாசின் குரலுக்குச் சாய்ந்ததில் அவர் இழந்தது தேவன் வைத்திருந்த அந்தச் சமநிலை.
பாலூட்டிகளில் மனிதன் மட்டுமே இரண்டு காலில் சமநிலையாக இருக்கமுடிபவன். அதாவது சரீரத்தில் சமநிலை. நம்மால் இரண்டு என்ன ஒரு சக்கர வாகனத்தைக் கூட ஓட்ட முடியும். ஒரு குச்சி இருந்தால், கயிற்றில் நடக்கக்கூட உடலைச் சமநிலைப் படுத்த இயற்கையின் விதிகளை எளிதாகக் கையாளமுடியும். ஆனால், பெரும்பாலும், நம் ஆவி சமநிலையில் இல்லாமல் போவதால், ஆத்துமாவில் சமநிலை இல்லாமல் – எண்ணங்கள் ஒருபுறம் சாய்ந்து ஒதுங்கி விடுகின்றன.
எனவே தான், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனுக்கு மட்டும் உள்ளே வைக்கப்படும் புதிய ஆற்றல், ஆவியில் சமநிலை. ஆனால் அதையும் நம்மால் சரிவரக் கையாள முடியாது என்பதால் அதை நம் ஆவியுடன் இணைந்து பரிசுத்த ஆவியானவர் செயல்படுத்த உதவுகிறார். பிற்பாடு, வேத வசனங்களையே ஆதாரமாகக் கொண்டு தொடர்ந்து இந்தச் சமநிலையைக் கற்கவும் பயிற்சித்து வாழவும் தொடர்ந்து அவரே கற்றுத்தருகிறார்.
எனவே நாம் கண்ட போதனைகளுக்குள்ளும் விழுந்துவிடாமல் காப்பது இறைவார்த்தை வழிக் கற்ற அந்தச் சமநிலைதான்.
அன்று அவர் வார்த்தையை அசட்டை செய்ததால் இழந்த சமநிலை இன்று அதே வார்த்தைக்குச் செவிகொடுப்பதால்தான் நம்முள் மீண்டு வருகிறது; மீண்டும் வருகிறது! ஆக, எந்த அளவு நாம் கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவில் கிறிஸ்துவின் பக்கம் சாய்கிறோமோ, அந்த அளவு நம் வாழ்வின் சமநிலை மீட்கப்படும். மெய்யான சிந்தனையும், அறிதலும் அதன்படி நடத்தலும் நம்முள் வரும். வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாமல் நடப்போம்.
இதற்கு வெறுமனே வசனங்களாக வேதத்தைக் கற்காமல், வசனங்கள் இணைந்த உபதேசங்களாகக் கற்பது அவசியம். உபதேசம் என்பது தன்னுள் சமநிலையோடு வரும். மாறாக ஒரு சில வசனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு உபதேசத்தை உண்டுபண்ணிக் கொண்டோமானால், அங்கே இழப்பதுதான் சமநிலை.
சில உதாரணங்கள் மட்டும் உங்கள் சிந்தனைக்காக இங்கே:
நாணயத்திற்கு இரண்டுபக்கமும் தேவை, அதாவது. சமநிலை!. – அதுதான் வேதம் காட்டுவது. நம் பிரச்சனையும் இந்தச் சமநிலை தவறுவதுதான். உதாரணத்திற்கு நாம் கேட்கும் சில உபதேசங்களை எடுத்துக்கொள்ளலாம். கிருபை! இந்தக் கிருபையைச் சரியாக உணர தேவ கோபாக்கினையின் தன்மையையும் அறிந்திருப்பது அவசியம். அதே சமயம் தேவ கோபாக்கினையை மட்டும் அறிந்திருத்தல் என்பது பயத்துக்குள்ளும் விரக்திக்குள்ளும் தள்ளிவிடும் என்பதால், தேவ கிருபையையும் முறையாகக் கற்றிருக்க வேண்டும்.
ஏழ்மையே ஆசிர்வாதம் என்று வறுமையை மையப்படுத்திய உபதேசத்தை சில பத்து வருடங்களுக்கு முன்புவரை போதித்தார்கள். அதை மாற்ற இன்று செழிப்பு உபதேசத்தை இன்று கையில் எடுத்திருக்கிறார்கள். “உன்னைப் பணக்காரனா ஆக்குவதுதான் இங்கே அந்தப் பணம் படைத்த தேவனின் வேலை!” என்பதே அவர்கள் உபதேசங்களில் அடிநாதமாக இருக்கும். எங்கே சுற்றினாலும் அங்கேதான் வந்து நிற்பார்கள்.
இன்னொரு உதாரணம், தேவ கிருபையும் தேவ பயத்தையும் சமநிலையாகப் பார்க்காமல் இருப்பது. தேவ பயத்துக்கு மாற்றாக சிலர் கிருபையை வைக்கிறார்கள். “கிருப இருக்கு பிரதர். என்னவேணா செய்யலாம்! அவர் ஏற்கனவே உங்கள மன்னிச்சிட்டாரு” என்பது. இன்னொரு சாரார் கடவுள் பயம் என்கிற பெயரில் மிரட்டல்களை வைக்கிறார்கள். ‘இதச் செய்யலீண்ணா…அதச் செய்யலீண்ணா…” என்று இவர்கள் ஆதாயம் பெற எதையெதையோ சொல்லி பயம் காட்டுகிறார்கள். ஆனால் இதல்ல தேவ பயம். !எனவே கிருபையையும் தேவ பயத்தையும் குறைத்த உபதேசங்களை முறையாகக் கற்றுக்கொண்டால், வீணாக பயப்படவும் தேவையில்லை. கிருபை என்கிற பெயரில் தான் பொறுப்பற்ற நடக்கைக்குள் இடற வேண்டிய அவசியமும் இல்லை.
“இப்படியால்லாம் செஞ்சா எங்க பரலோகம் போவ? உனக்கு நரகம்தான்!” என்று பரலோகம் போவதற்கு நரக பயம் காட்டுவது ஒருபுறம் என்றால், “நரகம் என்று ஒன்றெல்லாம் இல்ல சகோ..தேவன் அன்பாவராச்சே” என்று எதையுமே அறியாமல் பேசுவதும் சமநிலை அற்றபோக்குதான்.
லீகலிஸம் (Legalism) என்கிற ஆங்கிலப் பதம் ஒன்று உண்டு. தமிழில் சட்டாம் பிள்ளைத்தனம். அதாவது தானே சட்டத்தைக் கையில் எடுத்து முரட்டுப் பக்தர்களாக மாறிவிடுவது. தேவன் தன் கிருபையின் கண்கொண்டு பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை நினைக்க இயலாமல், இவர்களே நியாயத்தீர்ப்பு சொல்லிவிடுவார்கள். “ஏ, நண்பனுக்கு தீவாளி வாழ்த்துச் சொல்லீட்டயா…அடப்பாவி! நேரா நீ நரகம்தான்டே” என்று இவர்களே நியாத்தீர்ப்பின் நாளை நெருக்கி நம் கண்முன் கொண்டுவரப் பிரயத்தனப்படுவார்கள்.
சிலர் ஜெபம், ஜெபம் என்று ஜெபத்தை மட்டுமே போதிப்பார்கள். பிரச்சனையைச் சொன்னால் “தம்பீ..நீங்க சரியா ஜெபம் பண்ணல..” என்று தாட்டி விட்டுவிடுவார்கள். ஆனால், ஜெபிப்பவர் எதை ஜெபிப்பது என்று தெரியாமல் திகைப்பார். காரணம் வேதம் தெரியாது. வேதத்தின் அடிப்படையில் ஜெபிப்பது என்பதை அவர் அறிந்திரார். சிலர் வேதத்தைக் கரைத்துக் குடித்திருப்பார்கள். ஆனால், ஜெபிக்க நேரம் ஒதுக்குவதில்லை. காரணம் அவர் செல்லும் சபையில் இரண்டொரு வரி ஜெபித்துவிட்டு நிறைய நேரம் பேசுவது மட்டுமே இருக்கும். அங்கும் சமநிலை மிஸ்ஸிங்!
சரீரத்தில், இரண்டுகாலில் நிற்க மனிதனை மட்டுமே படைத்த தேவன், ஆவியிலும் சமநிலையில் நடக்கவே அழைக்கிறார். எல்லாம் அவரே என்பதில் எத்தனை உண்மை இருக்கிறதோ. செழிப்பு உபதேசம், ஹைப்பர் கேல்வினிச அபாயம், மற்றும் ஹைப்பர் கிரேஸ் உபதேசம் என்று ஹைப்பர்கள் எல்லாமே கோணலாக நடப்பதுதான்.
அதுபோல போதிக்காமல் விட்டுவிடும் உண்மைகளும் சமநிலை அற்றுப்போகச் செய்துவிடுகின்றன. தங்களுக்குப் பிடித்த ஏரியாக்களை மட்டும் போதித்துவிட்டு மற்ற பகுதிகளைத் தொடுவதே இல்லை. சிலர், வெளிப்படுத்தின விசேஷத்தை மட்டுமே போதித்து மக்களைப் பயங்காட்டிக்கொண்டே இருப்பார்கள். சிலரோ, இங்கேதான் சிறப்பான வாழ்க்கை என்பதுபோல பாவித்துப் அதற்கேற்ற வசனங்களை வசதியாக வளைத்துக் கொண்டிருப்பார்கள்.
சரியாகக் கற்றுக்கொண்ட உபதேசங்கள்தான் வாழ்வில் நம்மைச் சரியாக நடக்க உதவிசெய்யும்.
நாம் திருவசனத்தைக் கேட்பவர்கள் மட்டுமல்ல. அதன் படி நடப்பவர்கள். போதனைகளும் நடக்கைகளும் இணைந்ததுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. அதேபோல், நடப்பதற்குக் கேட்டல் அவசியம். கேட்பவர்களாக மட்டும் இருந்தால் கனிதராத பயனற்ற வாழ்வு வாழ்வோம். மாறாக வசனமே தெரியாமல் கீழ்படிய நினைத்தால், எதையெதையோ தேவனுக்குப் பிரியமான செயல் என்று நினைத்து நடந்து விரக்தியான வாழ்வு அல்லது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிற வாழ்வு வாழ்வோம். எனவே இங்கும் தேவை சமநிலை.
இதுபோன்ற பல சமநிலையற்ற பல போதனைகள் உண்டு. மேலே சொன்னவை சில உதாரணங்கள் மட்டுமே. காணிக்கை கொடுத்தல், ஊழிய அழைப்பு தொடங்கி வேதாகமப் புத்தகங்கள் சிலவற்றைப் புறக்கணிப்பது வரை சிறிதும் பெரிதுமான பல சமநிலையற்ற போதனைகள் இங்கே உண்டு. இன்று சமநிலையற்ற இப்படிப்பட்ட நூதனப் போதனைகளால்தான் சபைக்குள் (சரீரமாகிய) கூட பிசாசு புகுந்து விளையாடுகிறான். எனவே, இன்று வேதத்தைக் கையில் வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் தேவன் தன் சாயலான சமநிலையை நம்முள் வைத்து வளர்ப்பதைக் கவனித்து வளர்வதே அவசியம். சரியான உபதேசங்கள் மேல் பசிதாகமாக இருந்தே ஆகவேண்டும்.
சத்தியம் என்பது மட்டுமே எப்போதும் நடுநிலையானது. உபதேசங்களும் சத்தியத்தின் அதாவது வேத வசனஙின் அடிப்படையில் இருப்பதால் அதுவும் நடுநிலையில்தான் இருக்கும். இது குறித்து போதகர் ஜான் ஸ்டாட் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது: உண்மை என்பது வலது கடைசியிலும் இருக்கிறது. இடது புறத்தின் கடைசியிலும் இருக்கிறது. நாம் இரண்டிலும் இருந்து உண்மையை எடுத்துக்கொள்வதில்தான் உபதேசத்தின் சமநிலை அடங்கி இருக்கிறது!
எனவே, ஒருபுறம் சாய்ந்து ஒருபக்கம் ஒதுங்கினாலும் சத்தியம் முழுமையாக நம்மில் இருக்காது. அறைகுறையாகத்தான் இருப்போம். எனவேதான் நம் ஆண்டவர் சொன்னார், “வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்” என்று. வேதாகமம் சமநிலையானதுதான், அதன் போதனைகள் எதுவும் சமநிலையானதுதான். ஆனால், வாசிக்கும் நாம் இன்னும் நூறு சதம் எல்லா நேரங்களிலிலும் எல்லா விஷயங்களிளும் சமநிலையாக இல்லை. ஆனால், வாசித்து சிந்தித்து கற்றுக்கொள்ளும் நாம் சமநிலையான அந்தச் சத்தியத்தைக் கற்று சமநிலையை உள்ளுக்குள் வாங்குகிறோம். பிரதிபலிக்கிறோம். இதை மனதில் கொண்டு வாசித்ததையும் கேட்பதையும் சிந்திப்போம். செயல்படுவோம். செருப்புகள் நீண்டகாலம் உழைக்கட்டும்.