வெள்ளைச்சாமி என்பவர் கருப்பாக இருப்பார். ஆரோக்கியசாமி ஆஸ்பத்திரிக்குப் போவார். பெயருக்கும் ஆளுக்கும் அல்லது குணத்திற்கும்கூடச் சம்பந்தம் இருக்காது. பெஞ்சமின் என்று எனக்கு என் தாத்தாவின் பெயரை இட்டார்கள். பெஞ்சமின் (அல்லது பென்யமின்) என்பதற்கு தெற்கின் மகன் அல்லது வலது கரத்தின் மகன் என்று பொருள். திருநவேலி வலது கைக்காரனுக்கு இந்தப்பெயர் கொஞ்சம் பொருத்தமாக இருப்பது தெரிகிறது.
முதலிலேயே நமக்குப் பெயரிடப்பட்டுவிடுவதால் (சிலருக்குப் பிறக்கும் முன்பே) , குணத்திற்கு, நிறத்திற்கு, ஆளுக்கு என்று பொருத்தமற்ற பெயர்கள் நமக்கு அமைந்துவிடுகிறது. இதற்கு நம்மைக் குற்றம் சொல்லமுடியாது. பெற்றோரும் ஆசையாக எதையாவது வைத்துவிடுகின்றனர். ஆனால், பெயருக்குப் பொருத்தமாக பட்டப் பெயர்கள் பள்ளிகளில் குறும்பர்களால் பலருக்கும் வைக்கப்படுகிறது. சிலசமயம் வெளியே சொல்லமுடியாத ரேஞ்சுக்கு; சமயங்களில், மிகச்சரியான பட்டப்பெயர்களும் நண்பர்களால் வைக்கப்படுவது சகஜம். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் பெயர்கள் பல விபரீதமானவைகளாக இருக்கும். நான் படித்த கல்லுரியில் முன்னாள் முதல்வர் ஒருவருக்குப் பெயர் “நெஞ்சிருக்கும் வரை”.
பெயர்கள் கூப்பிடமட்டும் வசதியாக இடப்பட்டாலும், வெகு சிலருக்கு மிகப் பொருத்தமாகவும் இருக்கும். என் ஜூனியர் ஒருவன் பெயர் சாந்தகுமார். சாலப் பொருத்தமான பெயர். (அவனையும் ஊமையன் என்றும் சாந்தா என்றும் கூப்பிட்டுத் தொலைத்தார்கள்). ஆனால் கடற்கரைச் செல்வம் என்ற நண்பன் ஒருவன், நான் கடலையே பார்த்ததில்லை என்றான்.
ஆனால், இந்தப் பேரண்டத்தின் வரலாற்றில் பெயரே வைக்கப்படாதவர் ஒருவரே! அவர் மட்டுமே அப்போது இருந்ததால், அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட ஆள் இல்லை. எவ்வளவுகாலம் அவரை அழைக்கக்கூட ஆள் இன்றி இருந்தாரோ தெரியாது. பின்னர், அவரால் படைக்கப்பட்ட அவரைச் சூழ்ந்தவர்கள் அவர் பெயரைக் கேட்கத் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை. அதற்குப் பயம் காரணமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், அவர்கள் எல்லோருமே அவரால் படைக்கப்பட்டவர்கள்; சிறியவர்கள். எனெவே அவரது இயல்பு மட்டுமே அவரைச் சூழ்ந்திருந்தவர்களுக்குத் சிறிது தெரிந்திருந்தது. அதில் மிக முக்கியமான அந்த இயல்பு – இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பதுதான். அது அவர் இயல்பு மட்டுமல்லாமல், அவரது உன்னதம், மாட்சி, தகுதி என்று எல்லாவற்றையும் பறைசாற்றுவதாக இருந்தது. நாமெல்லாம் அவருக்குப் பொருந்தமான பட்டப் பெயராக வைக்க அவர் நம்மை அனுமதித்திருப்பாரானால், இதைவிடப் பொருத்தமான பெயராக அவருக்கு வைக்க உலகின் தலைசிறந்த ஞானியாலும் முடியாது.
அவர் எப்போதும் இருந்தார், இருக்கிறார், இருப்பார்; அவர் மாறாதவர்; அவர் இருக்கிறவராகவே இருக்கிறார். ‘மாற்றம் என்பது மாறாதது’ என்று ஹெரக்லிட்டஸ் (கி.மு 500) என்ற தத்துவஞானி முதன் முதலாகச் சொன்னார். ஆனால், இவரோ, மாற்றம் என்பதே என்னிடம் இல்லை என்ற மாறாத தன்மை உடையவராக இருக்கிறார்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுகூட அவர் பெயரை விசாரித்ததில்லை. ஒரு மனிதன் அவர் பெயரைக் அவரிடமே கேட்டது ஓரேப் பர்வத சந்திப்பில்தான். அப்படி மோசே அவரிடம் பெயரைக் கேட்டபோது அவர் உடனடியாகச் சொன்னது “ இருக்கிறேன், அல்லது, இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்கிற தன் தன்மையைத்தான். மேலும், “இருக்கிறேன்” என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றும் திரும்பச்சொன்னார்.
சிறுவயதில் இது எனக்கு விளங்கவில்லை. இதென்ன பெயர், இப்படியெல்லாமா இறைவன் தனக்குப் பெயர் வைத்துக் கொள்வார். ராஜா, குமார் என்றெல்லாம் பெயர் இருக்கலாம். இப்படி ஒரு பெயர் இருக்குமா என்று ஆச்சரியப்பட்டதுண்டு. இயேசு என்றுகூடத் தன்பெயரை ஏன் சொல்லவில்லை என்றெல்லாம் யோசித்ததுண்டு. ஆனால், அவர் பெயரே மிக ஆழமாகச் சிந்திக்கவேண்டிய ஒன்று என்பது பின்னர்தான் புலப்பட்டது. தன் பெயர்காரணத்தை முற்றும் பொருத்தமாகக் கொண்டவர் அவர் ஒருவரே.
ஆரோக்கியசாமி இன்று ஆரோக்கியமாக இருக்கலாம், நாளை சுகவீனப்படலாம், அடுத்தமாதம் மீண்டும் தன் பெயருக்குப் பொருத்தமாக சுகமாகலாம். ஆனால், இருக்கிறவராகவே இருக்கிறவர், என்றும் மாறாதவராக “இருக்கிறார்”. மாட்சிமை தாங்கிய தன் பெயரை, அல்லது நாமத்தை, என்றும் மாறாமல் வெளிப்படுத்துகிறவராகவே இருக்கிறார். ஒரு இமைப்பொழுதும் மாறாமல் இருப்பவர். இனி எக்காலத்திலும் அப்படியே இருக்கப்போகிறவர்.
(கூடுதல் தகவல்: இருக்கிறவராகவே இருக்கிறேன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் I AM THAT I AM என்று KJV மொழிபெயர்ப்பிலும் எபிரேயத்தில் Ehyeh ašer ehyeh என்றும் வருகிறது. இதில் Ehyeh என்ற பெயரின் மருவூ YHWH (யெஹ்வேஹ்), சொல்ல எளிதாக யாவே என்று, ஆங்கிலத்தில் Yahweh, என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் பெயர் உருவாக்கங்களை மறுப்பவர்களும் உண்டு)