இயேசுவா? இயேசு கிறிஸ்துவா?

கிறிஸ்து இல்லாத இயேசு வேறு ஒரு இயேசு. நாம் சபைகளில் போதிக்கவேண்டிய இயேசு, வெறும் இயேசு அல்ல! — இயேசு கிறிஸ்து!!!

அதென்ன வித்தியாசம்? வெறும் இயேசு அன்பானவர்; நீங்கள் எப்படி இருந்தாலும் — “நீ நீயாக இரு!” என்பவர். உங்கள் வாழ்வில் உங்களுக்குப் பிடித்த எதற்கும் இடைஞ்சலாக இருக்கமாட்டார். மனது புண்படவே படாது!. அவருக்கு நீங்கள் சும்மா பாட்டுப்பாடி “நீரே, அவரே, இவரே” என்று ஆராதிப்பதாக நினைத்து உணர்ச்சிவசப்பட்டால் போதும். ஆட்டம் கூடப் போடலாம். செம ஜாலியாக இருக்கும். மேலும், பைபிளைத் திறக்காமலே கதைகளை அவிழ்த்துவிட்டால் அதுவே உங்களுக்குப் போதும். அதை நீங்கள் கேட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் குதூகலமாகிவிட்டு வந்து மறுநாள் உங்கள் வேலைகளைப் பார்க்கப் போய்விடலாம். அவர் உங்களைச் சங்கடப்படுத்தவோ, எதையும் குற்றப்படுத்தவோ மாட்டார். சும்மா நண்பர்களுடன் Chill பண்ணிவிட்டுவரலாம் ஞாயிறுகளில். இதை எவராவது சுட்டிக்காட்டினால் மட்டும்தான் நீங்கள் வெகுண்டு எழுவீர்கள். மற்றப்படி நீங்கள் கூல்! ஏனென்றால், இயேசுவுக்காக வாழ்தல் உங்களுக்கு இலகுவாக இருக்கும். ஒருவேளை ஏதாகிலும் பிரச்சனை என்றால் அதுவும் பணம் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்கும். எல்லாமே கிருபை என்று ரொம்ப comfortable-ஆகக் கடக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு இந்த இயேசுவைத் தெரியும். அன்பைப் போதித்தவர். அவரை அநியாயமாகச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். அடிடைத்தவனுக்கு அவர் மறு கன்னத்தை திருப்பிக்காட்டச் சொன்னார். அவ்வளவே. நீங்கள் செய்யும் எந்த இயேசுவின் வேலையிலும் கிறிஸ்து தெரியமாட்டார். உலகம்தான் தெரியும். செழிப்பு தருபவர். வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மற்றவர்களுக்கு டிரெண்டிங் என்பது உங்களுக்கும் இயேசுவின் பெயரால் டிரெண்டிங். இதில் ஓரே பிரச்சனை இந்த இயேசுவைக் கிறிஸ்துவாக அறிந்தவர்கள் மட்டும் உங்களை எதிர்ப்பார்கள். ஆனால், அதையும் உலகப் புகழில் நீங்கள் ஊதித்தள்ளிவிடலாம்! உங்களுக்கென இரசிக கோடிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்ததை இயேசுவின் ஊழியம் என்று செய்து கொள்ளலாம். அந்த இயேசுவும் நீங்கள் கேட்டதை எல்லாம் just தந்துவிடுவார்.

ஆனால், கிறிஸ்து எனப்படும் இயேசுக்கிறிஸ்து?

அவர் அப்படி அல்ல! உங்களை மீட்டுக்கொண்டவர். அவர் உங்களை லேசில் விடமாட்டார்! உங்கள் வாழ்க்கை upside down ஆக மாறும். முன்பு இருந்த பல மேட்டர்களுக்கு உங்கள் வாழ்வில் இடமிருக்க இனி வாய்ப்பில்லை. அடிக்கடி குற்ற உணர்ச்சி வரும். ஏனென்றால் தப்புத்தண்டா செய்யும்போதெல்லாம், கிறிஸ்துவும் அவர் நினைவும், சில சமயங்களில் நீங்கள் படித்த வசனமும்கூடவே வந்து இடைஞ்சல் செய்யும். அடிக்கடி மன்னிப்புக் கேட்கவேண்டும். காலையில் அவர் நினைவு வரும். பைபிளை எல்லா நாட்களும் வாசிப்பது மட்டுமல்லாமல், இருதயத்தில் நிறுத்தவும் வேண்டும். கஷ்டம்தான்.! எவராவது பாடினால், இதுக்கும் பைபிளுக்கும் சம்பந்தமிருக்கா என்றெல்லாம் நினைவுபோகும். சும்மா என்ஜாய் பண்ணாமல், பாடல்களில் குறை தெரியும். சரியான உபதேசம் எது என்று தேடத் தோன்றும். வேதத்தைத் திறந்தால் அது கண்டித்துப் போதிப்பது புரியும்.

கிறிஸ்து என்றவுடன் சிலுவை மட்டுமல்ல, அது அவர் தரும் மீட்புதான் முதலில் நினைவுக்கு வரும். மனம் திரும்புதல், கழுவப்படுதல், மனம் புதிதாவதால் மருரூபமாதல் போன்றவை எல்லாம் அவசியம் என்று தெரிந்து அவை, அடிக்கடி நினைவுக்கு வந்து போகும். கிறிஸ்து என்றால், என்னை மீட்டவர், என்னை மீட்ட இயேசுவுக்கு நான் எதையும் செய்து அவரைக் குஷிப்படுத்த முடியாது என்கிறபோது இனி என்னதான் செய்ய என்று நினைப்பீர்கள். அப்போதுதான் கிருபை என்பதே விளங்கும். அது மீண்டும் மீண்டும் எச்சரிக்கை, ஜாக்கிரதை உணர்வுகளைத் தூண்டும். பழையவைகள் ஒழியும். புதியவைகள் வரும். மிக முக்கியமாக, கிறிஸ்துவாகிய இயேசு, பழைய மொந்தையில் புதியவற்றை நிரப்பவிடமாட்டார். உங்களுக்குப் பிடித்த பழைய விஷயத்தைக் கிறிஸ்துவுக்குள் நுழைக்கமாட்டீர்கள். பொழுதுபோக்கு இயேசு வடிவம் பெறாது! மீட்பின் அடையாளம் உங்கள் உலகக் காரியங்களில பளிச்சிடும். நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல உங்களையும்கூடப் பின்பற்றுவார்கள். அதை அனுபவிக்காமல், அவரிடம் அந்தப் புகழைச் சேர்க்கவே முயற்சிப்பீர்கள். உங்களை எவராவது புகழ முயன்றால் உஷாராகிவிடுவீர்கள். தாழ்மை தடுக்கும். உங்களைச் ஆவியின் கனி என்பது சுற்றி உள்ளோருக்கு ருசிக்கும். தேவன் சும்மா இருக்கச் சொன்னால் அதைகூட ஊழியமாக ஏற்பீர்களே ஒழிய, உங்கள் விருப்பத்துக்கு அட்டூழியம் செய்ய இறங்க மாட்டீர்கள்.

அவருக்கு மகிமை என்பதில் தெளிவாக இருப்பீர்கள். இயேசுவை அறிந்தவர்களுக்கு அவரைக் கிறிஸ்துவாக அறிந்த நீங்கள் கோமாளிகள், பொறாமை பிடித்தவர்கள். குறை சொல்பவர்கள். உங்களைப் பிழைக்கத்தெரியாதவர்கள் என்று கூட அவர்கள் உள்ளுக்குள் நினைக்கலாம்.

ஆனால்,வேறொரு இயேசு இல்லை. (2 கொரி 1:4). வேறொரு சுவிசேஷமும் இல்லை. கலாத்தியர் 1:7.

வெறும் இயேசு எளிது. ஆனால் இயேசுக்கிறிஸ்து? போராட்டம். ஓட்டம். சிலுவை. பந்தயம். இன்னும் என்னென்னவோ உள்ளன; அவையெல்லாம் இயேசுக்கிறிஸ்துவை உடையவர்களுக்கு மட்டுமே. நீங்கள் யார் பின்னால்? இயேசுவா? இயேசுக் கிறிஸ்துவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *