அஸ்திபாரமும் ஐஸ்கட்டியும் 




ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஆர்டிக் பகுதியில் வசிக்கும் ஒரு எஸ்கிமோ குடும்பத்தைப் பற்றியது. ஆர்டிக், அண்டார்டிகா (-58°F), அலாஸ்கா என்றாலே நாம் குஷியாகிவிடுவதுண்டு அல்லவா?. அதற்கு அங்கிருக்கும் ஐஸ் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கை முறையும் கூட – அது மிகவும் வித்தியாசமானதும், ஆச்சரியங்களும் நிறைந்தது. 

ஆர்டிக் பகுதில் மேலே ஐஸ்கட்டியும், கீழே நீரோட்டமும் கொண்ட பகுதிகள் ஏராளம். இவ்வாறு நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தாலும், கீழே சில அடிகளுக்குப் பின் இருப்பது ஆழமான உறையவைக்கும் நீர்ப்பகுதிதான். (சூரியன் படும் மேல்பகுதி உறைந்திருப்பதும், கடும் குளிர் மிகுந்த அடிப்பகுதி நீராக இருப்பதும் கூட ஒரு அறிவியல் விந்தைதான், அதற்குக் காரணம் அதில் மிகுந்திருக்கும் உப்பு). 

இங்கு மேலே வசிக்கும் எஸ்கிமோக்கள், அடிப்பகுதில் இருக்கும் நீரைக் குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். ஆதலால், ஒரு ஐஸ்பரப்பைப் பயன்படுத்துமுன் சிறிய அளவில் வட்டமான துளைகள் இட்டு, அப்பகுதியில் அடியில் நீர் இருக்கும் ஆழத்தை அறிந்து கொள்கிறார்கள். அந்தத் துளைகள் குடிநீர் எடுக்கவும், மீன்களை வேட்டையாடவும் பயன்படுகிறது என்றாலும், அதன் மிகமுக்கியமான பயன்பாடு என்னவென்றால், அந்தப் பனித்தளத்தின் தன்மையை அறிவதே. அதாவது, தங்களைத் தாங்கும் பனியாலான நிலப்பகுதியின் ஆழத்தை அல்லது உறுதியை அறிந்த பின்புதான் அதன் மேல் சறுக்குவண்டியில்(sledge) செல்வதோ, ஒட்டுவதோ, வேட்டையாடுவதோ, இல்லை அந்ப்பகுதியில் வசிக்கலாமா, கூடாதா என்பதை முடிவுசெய்து இக்ளூ (Iglo) எனப்படும் பனிவீடுகட்டுவதோ கூடச் செய்கிறார்கள். 

தரைத்தளம் மட்டும் கொண்ட ஒரு வீட்டைக்கட்டி முடித்த வீட்டுச் சொந்தக்காரரையோ கான்ட்ராக்டரையோ இதற்குமேல் ஒருமாடி கட்ட இயலுமாவென்று கேட்டிருக்கிறீர்களா? ஒன்றென்ன, மூன்றுமாடி கூட அமைக்கலாம் என்று பெருமையாகச் சொல்வார்கள்.

வீட்டின் அஸ்திபாரமானாலும் சரி, ஐஸ்கட்டியானாலும் சரி, வாழ்வின் நம்பிக்கையானாலும் சரி, அதன் மீது மாடிகட்டவோ, இல்லை நிலைத்து நிற்கவோ அதன் ஸ்திரத்தன்மையை அறிந்திருப்பது மிகவும் அவசியம். அப்படி அறிந்த தெளிந்தபின்பு அதன் மீது நாம் வைக்கும் நம்பிக்கை உறுதியானதும் நிலைத்திருப்பதுமாய் இருக்கும். அது நாம் எண்ணி மகிழத்தக்கதாய் இருக்கவும், ஒரு பூகம்பத்தையோ, கடினமான சூழலோ உருவானாலும் அந்த நம்பிக்கை பயத்தைப் புறம்பே தள்ளுவதாகவும் செய்யும்.

நம் வாழ்வின் அஸ்திபாரம் – அதை யார் மேல் நம் நம்பிக்கையை வைத்திருக்கிறோம், எதற்காக வைத்திருக்கிறோம் அவர்மேல் ஏன் நம்பிக்கையாக இருக்க நம்மால் முடிகிறது என்று ஒவ்வொரு நாளும் தியானித்து வருவோமானால், ஒரு இடர்பாட்டில் இடறவேண்டியது இல்லை.

… தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. II தீமோத்தேயு 2:19

பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. மத்தேயு 7:25

திடுதிப்பென்று ஒருநாளில் எங்கிருந்தோ அந்த நம்பிக்கை வந்துவிடாது. கிறிஸ்தவ வாழ்வில் அது தொடர்ச்சியாக நடந்தேறவேண்டிய ஒரு வேலை.

கிறிஸ்துவைக் குறித்த ஆழமான அறிவும், வேத வார்த்தையில் தினமும் வளர்வதும், ஆவியானவரின் உதவியும் நம் அஸ்திபாரத்தை உறுதியாக்கும். அந்த அஸ்திபாரத்தில் வைக்கும் நம்பிக்கை மட்டுமே ஜெயம் கொண்ட வாழ்க்கைக்கு வழிநடத்தும். ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *