லாஜிக் இடிக்கிறது

கிறிஸ்தவ லாஜிக்

சமீபத்தில் ஒரு மேடையில் லாஜிக்கலான உளறல் ஒன்றை ஒருவர் சொன்னார்: “சினிமாவில் நடிப்பவர்களையே தேவன் கோடீஸ்வர்களாக ஆக்கி இருக்கிறார்கள் என்றால் உன்னை பெருங்கோடீஸ்வரனாக மாற்ற மாட்டாரா?” என்று. கீழே கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு, அவர் துள்ளித் துடித்து கத்திப் பேசியவுடன், “ஆமா..சரிதானே..” என்றுதான் தோன்றி இருக்கும். வெறும் லாஜிக்கலாக இருப்பதைச் சரியென்று நம்புவதால் வரும் அபாயங்கள் இவை.

ஆனால், வேதத்தில் பல விஷயங்கள் லாஜிக்கலாகவே (தர்க்கரீதியாகத்) தோன்றாது. உதாரணமாக, இயேசு முழு மனிதனாகவும் அதே சமயம், முழுக் கடவுளாகவும் இருந்ததாகப் புரிந்துகொள்கிறோம். அதாவது அவர் மனிதனாக மரிக்கவும் செய்தார் அதே நேரத்தில் உயிரோடும் அழியாதவருமாக இன்றும் இருக்கிறார். அது எப்படி சாத்தியம்?

காரணம், கிறிஸ்தவத்தில் வெறும் லாஜிக் பல இடங்களில் எடுபடாது. இதை “லாஜிக்கலாகச் சரியாகத் தோன்றுபவை எல்லாம் தியலாஜிக்கலாகச் சரியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிடுவார் கோவைப் போதகர் சார்லஸ் அருமைநாயகம். இதைச் சில உதாரணங்களுடன் பார்த்தால் அதில் உள்ள விஷயம் புரிந்துவிடும். 

‘கடும் தவம் புரிந்தும், சிரமப்பட்டும் நல்லவர்களாக வாழ்ந்தவர்களை அல்ல; பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து உலகத்துக்கு வந்தார்’ என்பது லாஜிக்கலாக சரியில்லையே. இதையே போதகர் ஒருவர் (ரேன்டி அல்கார்ன்) தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார் –  “நீங்கள் இருபத்தி நான்கு காரட் சொக்கப்பாவியாக இருந்தாலும் பரலோகத்திற்கென, உங்களைத்தான் தம் கிருபையால் இரட்சித்து மகிமைப்படுத்துகிறார்”. நம்முடைய எண்ணப்படிப்பார்த்தால், இந்த லாஜிக் இடிக்கவே செய்கிறது.

இப்படி மேலும் சில லாஜிக்கலாக ஒத்துவராத விஷயங்கள்:

நீங்கள் உங்கள் நண்பர்களை மட்டுமல்ல. உங்கள் எதிரிகளையும் கூட நேசிக்க வேண்டும்; 

நம்மில் முதல்வர்களாக இருப்பவர்கள் கடைசியாக இருப்பார்கள், கடைசியாக இருப்பவர்கள் முதலாவதாக இருப்பார்கள்; 

நீங்கள் உண்மையாக வாழ வேண்டுமானால் நீங்கள் மரிக்க வேண்டும்; 

கடைசியில் வேலைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் எஜமானன் முழுச் சம்பளம் கொடுத்தாரே?

வலிமையானவர்கள் அல்ல, சாந்தகுணமுள்ளவர்கள் உலகை ஆள்வார்கள் என்றல்லவா ஆண்டவர் சொன்னார்

… இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். 

எதையாவது விளக்க நினைத்து, அதில் நம்முடைய மனிதலாஜிக்கை எடுத்து உபதேசங்களுக்குள் திணிக்க நினைத்தால், பல இடங்களில் வேதத்திற்குப் புறம்பாகச் செல்ல நேரிடும். நான் கேட்ட அப்படி ஒரு கூற்று: “நீ சர்வத்தையும் படைத்த இராஜாவின் பிள்ளை, அதனால் வாழ்வாங்கு வாழ்வாய். எல்லாம் உன்னுடையது; கேட்டதெல்லாம் தருவார்” என்று. இப்படி ஒரு  சொந்த லாஜிக்படி செழிப்பைப் போதித்தால் அது தவறாக முடியும். காரணம், “கிறிஸ்துவுக்குள் தேவபக்தியாய் வாழ விரும்பும் எவரும் துன்பப்படுவார்கள்” என்றும் வேதம் சொல்கிறதே! ஆண்டவர் பூமியில் இருக்கும்போது பரிசேயர் ஒரு லாஜிக்கைச் சொன்னார்கள். அவர் பிசாசுகளைத் துரத்தும் போது, பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். இதில் லாஜிக் இடிப்பதை ஆண்டவர் உடனே சுட்டிக்காட்டி, சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும் என்று அவர்கள் சிந்தனைகளைத் தவிடுபொடியாகினார்.  

அப்படியானால் கிறிஸ்தவர்கள் லாஜிக்கலாக சிந்திக்கக்கூடாதா என்றால், நிச்சயம் அப்படியல்ல!. லாஜிக் என்பது ஞானமான விஷயம்தான். தேவன் சிந்திக்கும் மனிதனுக்குப் பயன்படுமாறு கொடுத்த இயல்பான ஒரு ஆசிர்வாதம். ஆனால்,  அவருக்குள் ஞானம், அறிவு என்கிற பொக்கிஷம் எல்லாம் அடங்கி இருக்கிறது என்பதால், நம்முடைய லாஜிக்கல் சிந்தனைகளே வேதத்தின் அடிப்படையில்தான் உருப்பெறவேண்டும். நாம் குறைவுள்ளவர்கள் என்பதால், தர்க்கரீதியான சிந்தனைகள் நிறைவான வேதத்தில் இருந்து வந்தால்தால் அவை சரியாக இருக்கும். தேவன் வேதத்தில் வெளிப்படுத்தும் லாஜிக்குள் ஆவிக்குரியவை என்பதால், உலகத்தின் சிந்தனைகளுடன் அவை ஒத்துப்போகாமல் இருப்பதைப் பல இடங்களில் காணலாம். 

ஆக, நம் மூளைக்கு முதலிடம் தராமல், இறைவார்த்தை என்ன சொல்கிறது என்று தேடி அறிந்தால் மட்டுமே இந்த வெற்று லாஜிக் எனப்படும் பொறிக்குள் விழாமல் இருக்கலாம். நாம் உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறோம் (1 கொரிந்தியர் 2:12) என்பதால் எங்கே லாஜிக் இடிக்கிறது என்பதை ஆவியானவர் காட்ட உடனே புரிந்து புறக்கணிப்பது அவசியம். 

(பின்குறிப்பு: லாஜிக் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நாம் தமிழில் பயன்படுத்தாத சொற்கள் ஏரணம் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல். இதுபோக பயன்படும் இன்னொரு சொல் தர்க்கம் – என்பதும் வடமொழிச் சொல்தான் என்று நினைக்கிறேன். வசதிக்காக இந்தக் கட்டுரையிலும் ‘லாஜிக்’ என்றே!).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *