பதினோராம் மணிக் கிருபை!

கிறிஸ்தவத்தில் கிருபை

அதிகாலை வேலைக்கு வந்தவர்களுக்கு எஜமானன் கொஞ்சம் அதிகம் கொடுத்திருந்தால் என்ன? எல்லாருக்கும் ஒரேபணம் கூலி என்பது நியாயமாகப்படவில்லையே என்று விஷயம் புரியாத நாட்களில் நான் நினைத்து உண்டு. அந்தப் பகுதியை தியானித்திருப்பீர்கள் என்றால் (மத்தேயு 20) நீங்களும் அப்படி உணர்ந்திருக்கலாம். காரணம், நாம் எல்லாருமே நம்மை அதிகாலையில் இருந்து வேலை செய்பவர்களாகக் கருதிக்கொள்ளவதுதான். இங்குதான் இறைநீதியும் நம் மனதில் தோன்றும் நியாயங்களும் ஒன்றல்ல என்பதைக் கற்றுக்கொள்ள முடியும்.

பகலில் உஷ்ணம் இருக்கும், கஷ்டம் இருக்கும், வெயில் இருக்கும் என்று முந்தி வந்தவர்களுக்கு தெரியும்! ஆனால் அதை மறந்து விட்டு அந்த எஜமான் ஏதோ அநியாயம் செய்தது போல எஜமானனைக் குற்றப்படுத்தத் துவங்கி முறுமுறுத்தார்கள். அவர்களுக்கு அன்றுவேலை கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், பதினொரு மணி வரை வேலை இன்றி சும்மா நின்று இருந்தவர்களைவிட நிலைமை மோசமாகி வேலையே இல்லாமல் வெறுங்கையையாய் வீட்டுக்குப் போகவேண்டிய நிலை வந்திருக்கலாம்.  

மாறாக நியாயமான கூலிக்கு வேலை கிடைத்து அவர்கள் அதற்கான கூலியையும் பெற்றுக் கொண்டார்கள்.  இருந்தபோதிலும், அதை மறந்துவிட்டு, எங்களுக்குப் பின்னால் வந்தவர்களுக்கு நீர் எங்களுக்கு சமமாக்கினீரே என்று சொல்லி வருத்தப்படத் துவங்கினார்கள். எரிச்சலாகி முறுமுறுத்தார்கள்.  இதற்குக்காரணம் அவர்களுக்கு எஜமானனின் கிருபை அனைவருக்குமே உண்டு என்பதைச் சகித்துக்கொள்ள முடியாததுதான். வேலை கிடைத்தது முந்தினோருக்குக் கிருபை என்றால், ஒரு பணம் கூலி பெற்றுக்கொண்டது பதினோராம் மணிக் கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் கிருபை. இங்கு எல்லோருமே கிருபை பெற்றவர்கள்தான். 

எப்போது இரட்சிக்கப்பட்டிருந்தாலும் சரி, எவ்வளவு காலம் ஊழியம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, நம்மை பதினோராம் மணிக்கு வேலைக்கு வந்தவர்களாகப் பார்க்கத்தெரிந்தால் மட்டுமே எந்தவிதப் பெருமையும் தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ள முடியும். இந்தப் பதினோராவது மணியில் வேலைக்கு வந்து அவர்களுக்கு தேவன் கொடுத்தது கிருபை. 

“உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்” என்று எஜமானன் சொல்வது கொஞ்சம் கடினமான வார்த்தைகளாகத் தோன்றலாம். நம் சொந்தக் குணத்தில் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால், முதிர்ச்சியுடன் கிறிஸ்துவின் கண்கொண்டு பார்த்தால், கிருபையின் பரிமாணம் எவ்வளவு விசாலம் என்பது புரியும். 

அந்தநாட்களில், ஒரு மனிதன் தன் குடும்பத்தை வாழவைக்க ஒரு நாளைய தேவை, ஒருபணம் என்று வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். இதை அறிந்திருந்த அந்த இரக்கமும் தயாள குணமும் மிகுந்த எஜமானன் தன்னிடம் வேலை செய்த அனைவருக்கும் தந்தார். ஆனால், அதற்குப் பின் இருப்பது எஜமானனின் தயாளத்தைப் புரிந்து கொள்ளாத வன்கண்!

நான் பரம்பரைக் கிறிஸ்தவன், நான் பெரிய ஊழியக்காரன், அதிகம் கொடுப்பவன்,  என் சபை மெகா சபை, செழிப்பானவன், என்றெல்லாம் பெருமை கொள்ளாமல் இருக்கவேண்டுமானால், கர்த்தரின் தயாளத்தைப் புரிந்துகொண்டவர்களாக, நானும் பதினோராம் மணிக்கு வந்த அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்றும், என்னை தேவன் தெரிந்தெடுத்தது மட்டுமல்லாமல் கிருபை பெற்றவனாக அழைத்தும் இருக்கிறார் என்பதை உணர்ந்து மகிழலாம். இல்லையென்றால் அதிகாலையிலேயே அழைத்தமைக்கு நன்றி என்று சரியான கண்கொண்டு பார்க்கப் பழகவேண்டும். 

ஒருவேளை இப்போதுதான் இரட்சிப்பிற்குள் வந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்கும் தேவன் அளித்திருப்பது கிருபை. அவர் தந்த எந்த வேலையாக இருந்தாலும் அது கிருபையாக அருளப்பட்ட பெரியவேலை. அதைப் புரிந்துகொண்டால், முன்பே இரட்சிக்கப்பட்டிருக்கலாமே என்று வருத்தப்பட அவசியமில்லை. ஒருவேளை இதுவரை இரட்சிப்பைப் புரிந்துகொள்ளாமல் சும்மா காலத்தை வீணடித்துவிட்டோமே என்று கவலை கொள்ளாமல் இன்று தேவன் தெரிந்துகொண்ட நோக்கத்தின் பின் வாருங்கள். கிருபை பெற்றவர்கள் அனைவரும் தேவனிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அவர் தயாளர் என்றும் புரிந்துகொள்ளலாம். 

பொறாமை, பெருமை என்கிற இரண்டையும் ஜெயிக்கிற கிருபையை அறிந்துகொள்ள தேவனே கிருபை செய்வாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *