சட்டம் ஒரு சங்கடம்

சட்டம் ஒரு சங்கடம்

“இதென்ன உன் இடம்ணு எழுதி வச்சிருக்கா?” பள்ளியில் மாணவர்கள் இடையே இடத்தகறாறு வரும்போது வரும் வார்த்தைகள் இவை. இப்படிக் கேட்பதற்குக் காரணம் எழுத்துக்கு அல்லது எழுதப்பட்ட வார்த்தைக்கு வலிமை அதிகம் என்பதுதான். நிலப்பத்திரம் நாமறிந்த ஒரு நல்ல உதாரணம். ஒரு விண்ணப்பத்தைக்கூட எழுத்தில் கேட்டால்தான் அதற்குண்டான மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறது.

துவக்கத்தில் தன் சாயலை தேவன் மனிதனுள் வைக்கும்போது அவருடைய பிரமாணங்களை இருதயத்தில்தான் வைத்தார். இருதயம் ஒரு எழுத்துப் பலகை. அதில் எப்போதும் விஷயங்கள் எழுதப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறன்றன. ஒன்றைச் செய்யாதே என்று தேவன் மனிதனின் இருதயத்தில் சொன்னதும் எழுதப்பட்ட ஒன்றுதான். வெறும் எழுத்தல்ல, இருதயத்தில் எழுதப்படும் எழுத்து உணர்வுப் பூர்வமானது. செயல்படும் ஆற்றல் கொண்டது. எனவே, ‘தான் சொன்னதை மீறக்கூடாது’ என்கிற உணர்வும், ‘இறைவார்த்தைக்குக் கீழ்படிய வேண்டும்’ என்கிற உணர்வும் முதல் மனிதனின் சேர்த்தேதான் இருதயத்தில் எழுதப்பட்டிருந்தது. இப்படி ஒரு ‘பாதை’யை அவர் கொடுத்ததே கிருபையால்தான். அதாவது, தேவன் தான் படைத்தவர்களின் இருதயங்களில் சட்டத்தை எழுதியது அவருடைய கிருபையால்தான். அப்படிச் செய்திராவிட்டால் ஆதாமுக்கு ஒரு சோதனையை வைத்திருக்கவே மாட்டார்.

தேவன் தான் படைத்தவர்களின் இருதயங்களில் சட்டத்தை எழுதியது அவருடைய கிருபையால்தான்.

விழுந்துபோன உலகில் தொடர்ந்து இருதயத்தில் எழுதப்பட்ட சட்டங்கள் மீறப்பட்டன. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது; அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக மாறினது. (ஆதி ) இருதயத்தில் இருந்த பிரமாணங்கள் கடுமையாக மீறப்பட்டு பாவம் பெருகினது. உதாரணமாக, ‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்கிற பிரமாணம் மனிதனின் இருதயத்தில் இருந்தது. அது தேவனால் துவக்கத்தில் எழுதப்பட்டது. அதை மீறிய காயீன், லாமேக்கு போன்றவர்கள் கொலைகளைச் செய்தார்கள். ஒருகாலத்தில் இருதயத்தில் சட்டங்கள் இருக்கின்றன என்கிற உணர்வே இல்லாமல் மனிதன் வாழ்ந்த காலத்தில் ஒரு முறை உலகளாவிய தண்டனையும் ஒரு பெருவெள்ளத்தில் கிடைத்தது.

ஆனால், தேவன் தான் படைத்த மனிதர்களை அப்படியே விட்டுவிடவில்லை. தனக்குக் கீழ்ப்படியும் மனதுள்ள ஒரு சந்ததியை (இஸ்ரவேலரை) மறுபடியும் தெரிந்துகொண்டு அவர்கள் இருதயத்தில் மட்டுமல்ல, கைகளிலும் வெளிப்புறப் பார்வைக்கு ஏதுவாக எழுதியும் தன் சட்டங்களைக் கையளித்தார். அத்துடன் அவற்றைச் சரியாகப் புரிந்து கீழ்ப்படியவும், மீறுவோருக்கான தண்டனையும், அவற்றில் இருந்து மீண்டு மன்னிப்பைப் பெற வழிமுறைகளையும் மிகவும் விளக்கமாகத் தந்தார். மேலும், தான் தெரிந்துகொண்ட சிலரைக் கொண்டு மீண்டும் மீண்டும் அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவும் அவர் தவறவில்லை. இஸ்ரவேலர்கள் அவற்றை கவனமாக மனப்பாடம் செய்து வந்தனர். சந்ததி சந்ததியாகக் கடத்தவும் செய்தனர்.

சட்டங்களை தேவன் தன்னுடைய தரத்திற்கு ஆதாரமாகக் கொடுத்தார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய சட்டங்களின் வழியாகவும் அறிந்துகொள்ளலாம். ‘பொய் சொல்லாதிருப்பாயாக’ என்று அவர் சொன்னார் என்றால் அவருக்குள் பொய் என்பதே இல்லை என்பதால்தான். ஆதிப் பெற்றோர் பொய் சொல்லி அவரது பிரசன்னத்தைவிட்டு வெளியேறியது பொய் இல்லா அவரது தன்மை அவர்களுக்குள் அதன்பின் கறைபட்டதால்தான்.

அவருடைய சாயலைத் தரித்துக்கொண்ட மனிதன் அந்தச் சாயலை அற்பமாக்கியபோது, மீண்டும் அவர் யார் என்பதையும், அவரது விருப்பம் என்ன என்பதையும், தான் படைத்த மனிதர்களின் ‘ஒரிஜினல் சாயல்’ என்ன என்பதையும் அவர் தன் சட்டங்களாகிய நியாயப் பிரமாணங்களை மோசேயிடம் அளித்ததன் மூலம் விளங்கச் செய்தார். பத்துக்கட்டளைகளிலும் இறைவனின் மனவிருப்பம்தான் வெளிப்பட்டிருக்கிறது. அவர் முதலில் நம்முள் வைத்த விருப்பமும் அவைகள்தான். இனியும் அவற்றைத்தான் விரும்புகிறார். இதனால்தான் சட்டம் எனக்குத் தெரியாது என்று சொல்ல இயலாதவாறு குறையற்ற வகையில் எழுதிக் கொடுத்தார்.

ஆனால், இந்தச் சட்டம் மனிதனுக்கு ஒரு சங்கடம். ஏனென்றால், சட்டத்தை மதித்து நடக்கும் விருப்பம் முதல் மனிதனிடம் இருந்தே இல்லாதிருக்கிறது. “அந்த ஒரு ரூமை மட்டும் எட்டிப் பாக்கவே பாக்கக்கூடாது” என்று ஒரு கட்டளைபோட்டால் பத்துக்கு ஒன்பது பேர் மனம் சஞ்சலப்படத் துவங்கும். எட்டிப்பார்க்காதவரை அந்தக் கட்டளை சங்கடப்படுத்தும். எந்தக் கட்டுப்பாடும் மனிதனுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், இருதயத்தில் அரைகுறையாக இருக்கும் சட்டமும், எழுத்தில் முன்னால் இருக்கும் சட்டமும் அவனை சட்டத்தை மீறும்போதெல்லாம் அவனைச் சும்மா விட்டுவிடுவதில்லை. குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு சட்டத்தை மீறிய சங்கடத்திற்கும் ஆளாகிறான்.

அப்படியானால் ஏன் சட்டத்தை தேவன் கொடுத்தார்? இதைத் தியானித்து அறிய அழைப்பதுதான் உண்மையில் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் சட்டத்தை எழுத்தில் கொடுத்தார். இந்தச் சட்டம்தான் எது தவறு எது சரி என்பதை உறுதிப்படுத்தும் கையேடாக இருந்தது. ஆனால், இந்தச் சட்டம் ஒரு மனிதனைச் சரிசெய்து பூரணமானவனாக, குற்றமே இல்லாத நல்லவனாக மாற்றுவதில்லை. சட்டத்திற்கு அந்த வல்லமை கிடையாது. அதேசமயம் சட்டம் இல்லாமல் ஒரு மனிதன் தன் தவறுகளை உணரவும் முடியாது. காரணம் சட்டங்களே இருந்தாலும் தான் அதை மீறுவதை நியாயப்படுத்தும் அளவுக்கு மனிதன் வீழ்ந்துபோனவன். அவனைத் தூக்கி நிறுத்த சட்டம் அல்ல, கிறிஸ்து வர வேண்டி இருந்தது. அவனை மன்னிக்க அவர் பலியாகவேண்டிய அவசியம் இருந்தது. அதுவரை சட்டம் அவசியமாக இருந்தது.

தேவன் சட்டம் தந்ததன் விளைவு அனைத்து மனிதர்களும் பாவிகளே என்கிற நிலையை அவர்களுக்கே காட்டத்தான். ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி மாதிரிதான் சட்டம் தரப்பட்டது. சட்டம் ஒரு மனிதனை “நீ பாவி” என்று காட்டும் என்பதால்தான் வேதம் சொல்கிறது “ நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” என்று!. யூதர் கிரேக்கர் மட்டுமல்லாமல் அகில உலக மக்கள் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை இந்தச் சட்டம்தான் காட்டியது. (ரோமர் 3). நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே என்று பவுல் சொல்வது என்று அப்போஸ்தலராகிய பவுல் குறிப்பிடுவது இதைத்தான். (ரோமர் 2: 18)

பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறது என்றபோதிலும், அந்தப் பிரமாணம் நம்மை நல்லவர்களாக ஆக்குவதில்லை. அறிந்தாலும் கீழ்படிகிறவர்கள் அல்ல மனிதர்கள் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இந்தப் பிரமாணம் நம்முள் செய்ய இயலாததைத்தான் கிறிஸ்து சிலுவையில் செய்தார். நம்மாலோ, நம்முள் இருக்கும் சட்டத்தாலோ நம்மை நீதிமான்களாக்க இயலாத சூழலில் கிறிஸ்து நம்மை நீதிமான்களாக்க தன்னைத் தீர்வாகத் தந்தந்தார். விளைவு, சட்டம் செய்யவேண்டியதைவிட மேலான வேலையை கிறிஸ்து செய்துவிட்டார். அதாவது, கிறிஸ்து வெறுமனே நல்லவர்களாக அல்ல, நம்மை அதற்கும் மேலாக அவரைப் போல மாற்ற தன்னையே தந்திருக்கிறார். இனி சட்டப்படி நடப்பது நமக்குச் சிரமமானது அல்ல என்பதோடு, சட்டமே நம் முன் இல்லாவிட்டாலும் நம்மால் சிறப்பாக நடக்க அவரே நம்முள் சிறப்பாக வாசம் செய்கிறார்.

ஆக, சட்டம் ஒரு ஆசிரியராக முதலில் தரப்பட்டது. ஆனால், இன்று அந்தச் சட்டத்திற்குக் கீழ் அல்ல, கிறிஸ்து என் பாவங்களைத் தீர்த்திருக்கிறார் என்கிற விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்பட்டதால் இனி நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்பட்டவர்கள். இனி நம்முடைய ஆசிரியர் சட்டங்கள் அல்ல, நம்முள் வாழ்ந்து கண்டித்துப் போதிக்கும் பரிசுத்த ஆவியானவர்! கிறிஸ்துவை ஏற்றவர்களுக்கு சட்டத்தைக் காட்டி வேதம் கண்டிப்பதில்லை. மாறாக கிறிஸ்துவை நம்முள் இருத்தி அவரைப்போல ‘ஒரிஜினல்’ தன்மையை மீண்டும் கொண்டுவர அவரே உதவியும் செய்கிறார். அந்த வகையில் பழைய ஏற்பாட்டு மக்களைவிட நாம் பாக்கியசாலிகள்தான். மேலும் சட்டத்தை மீறிய வகையில் அதை அறிக்கை செய்து மன்னிப்புக் கேட்டும் அடையாளமான பலியையும் நாம் செலுத்தும் அவசியம் இன்று நமக்கு இல்லை. இதுவும் அவரே பலியானதால் பாவ நிவாரணத்திற்க்காக நமக்குக் கிடைத்த ஒரு நிரந்தரத் தீர்வு.

விஷயம் இப்படி இருப்பதால், எவரும் பாவம் என்றால் என்ன என்று ஒருநாளும் அவரிடம் சொல்ல முடியாது. “தெரியாமப் பண்ணீட்டேங்க” என்று சொல்ல இடம் இல்லை. உலகில் இருக்கும் எல்லோரும் துவக்கத்திலேயே வேதப் பிரமாணங்களால் பாவிகள் என்று தீர்க்கப்பட்டாயிற்று. கிறிஸ்துவை ஏற்கும் அவரும் அந்தப் பாவப் பிடியில் இருந்து மீட்கப்பட்டுவிடலாம் என்கிற மேலான வாய்ப்பும் வழங்கப்பட்டாயிற்று. நானே சட்டப்படி நடப்பேன் என்று முயற்சி செய்து தோல்வி அடைந்ததும் நம் முன்னே இருப்பதால், எனக்கு நானே தீர்வு செய்கிறேன் என்றும் எவரும் சொல்ல இயலாது. ஒரு காலத்தில் சங்கடமாக இருந்த சட்டங்கள் அவரால் நிறைவேற்றப்பட்டதாலும், நிறைவேற்றியவரே நம்மில் இன்று நிறைவைத் தரத் தீர்வாக இருக்கிறார் என்கிற நல்ல செய்தி நமக்கு இருப்பதாலும் நம்முடைய வாழ்வு அவருக்குள் மேலானதாக இருக்கிறது. இப்படியாக, கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் நம் அனைவருக்குமே தேவனுடைய புத்திரர் என்கிற அந்தஸ்தத்தைத் தந்த அவருக்கே துதி கனம் மகிமை எல்லாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *