என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14) என்ற வசனம் சிறுவயதில் இருந்தே நமக்குப் பிடித்த வசனங்களுள் ஒன்றாக இருக்கும். என்னிடம் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று சிம்பிளாகச் சொல்லாமல், ஆரம்பத்திலேயே வருகிறதே ஒரு வார்த்தை. “என் நாமத்தினாலே…” என்று. அதென்ன? இயேசுவின் நாமத்தில் பிதாவே என்று தானே நாம் ஜெபித்துமுடிக்கிறோம். அப்படி முடிப்பதுதான் “என் நாமத்தினாலே” ஜெபிப்பதா?
இதற்கு பதில் தெரிய, எதைக் கேட்டாலும் செய்வேன் அல்லது தருவேன் என்பதை முதலில் கொஞ்சம் ஆராயவேண்டும். ‘எதைக் கேட்டாலும்’ என்றால் எதையும் கேட்டுவிடலாமா என்பது முதலில் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் அப்படிக் கேட்டதையெல்லாம் ஒரு (நல்ல) உலகத்தகப்பன் கூட வாங்கித்தரமாட்டாரே! பரமதகப்பன் மட்டும் எப்படி? அப்படியானால், இதை வாக்குத்தத்தமாக கொண்டாடி நம் விருப்பத்தையெல்லாம் தேவனிடம் ஊக்கமாகவோ போராடியோ உபவாசித்தோ ஜெபித்துப் பெற்றுவிடமுடியுமா? அவர்தான் எதைக்கேட்டாலும் என்று சொன்னதால் அதைத் தந்துவிடுகிறாரா?
இங்கே ‘என் நாமத்தில்’ என்கிற வார்த்தைகளில் இருக்கிறது ஒரு சூட்சும். என் நாமத்தில் என்றால் என் பெயரில் என்று அர்த்தம். அதாவது என் பெயரைச் சொல்லி என்று பொருள். அதுமட்டுமல்ல, என் பெயரைச் சொல்லி என்றால், என் பெயருக்கு உண்டான மரியாதையை அல்லது வல்லமையை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி என்றும், அதே சமயம், அதன் நன்மதிப்பைக் கெடுக்காமல் என்று விளங்கிக் கொள்ளல் அவசியம். அப்படியானால், அவர் பெயரைச் சொல்லி நாம் கேட்பவைகள் அவருக்கு அவரது மரியாதையைத் தொடர்ந்து தக்கவைப்பதாக இருக்க வேண்டும். அதைக் கெடுக்கும் விஷயங்களை நாம் ஜெபத்தில் கேட்க இயலாது. அதற்கு மாறாக அவர் நாமத்தில் நாம் கேட்பவை அவருக்குப் பெயர், புகழ் சேர்ப்பதாகத்தான் இருக்கவேண்டும்.
தெருமூலையில் உள்ள பெட்டிக் கடையில், “தம்பி, என் பெயரைச் சொன்னால் தருவார்கள்.. உனக்கு விருப்பமானதைக் கேட்டு வாங்கிக் கொள்!”, என்று உறவினர் ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். “என் பெயருக்கு ஒரு மரியாதை இருக்கிறது. நான் சொன்னேன் என்று என் பெயரைச் சொல்லி நீ கேட்டால் தருவார்கள். வாங்கிக்கொள்”, என்றுதான் அதற்குப் பொருள். உடனே இதைக் கேட்டவன் போய், உறவினர் பெயரைச் சொல்லி பீடி கேட்கமுடியுமா? அது அவர் பெயரைக் கெடுக்கவல்லவா செய்யும்? இதேதான் ஜெபத்தில் நம் கதையும்.
“உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு” என்று அவருடைய நாமம் பயங்கரமானது என்று ஓரிடத்திலும் (உபாகமம் 28:58), அவருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவோம் என்று பல இடங்களிலும் சொல்லியிருக்க, அவர் பெயருக்கான புகழை அவரை நோக்கி ஜெபிக்கற யாவரும் அறிந்திருப்பது அவசியம். அவர் யார் என்றும், அவரது பெயருக்கான, அதாவது நாமத்துக்கான மகிமை எப்படிப்பட்டது என்கிற அறிவும் அவசியம். அப்படி அறிகிற அறிவில் வளரவளர கேட்பவைகளின் தன்மைகளும் மேலோங்கும்.
தேவனுடைய பெயரைச் சொல்லிக் கேட்கும் எதுவும் அவருக்கு மரியாதையை, புகழை, இன்னும் நம் வேதாகம வார்த்தையில் புரியும் வகையில் சொன்னால் அவருக்கு ‘மகிமையை’க் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். அதாவது, என் நாமத்தில் எதைக் கேட்டாலும் என்று அவர் சொல்லி இருந்தாலும், அவர் விருப்பப்படி அது இருக்கவேண்டும் என்பதுதான் இதில் மறைந்திருக்கும் சத்தியம். அவருக்குப் பிரியாமானதை கேட்பதில்தான் அவர் நாமத்திற்குப் புகழ் சேர்ப்பவை அடங்கியிருக்கிறது. அவரை அறியும் உறவில் வளர்வதில்தான் அவருக்குப் பிரியமானதை அறியும் அறிவும் நம்முள் வளர்கிறது. அப்படி வளர்ச்சி பெறும் நிலையில் கேட்பதுதான் கிடைக்கவும் செய்கிறது. பலமுறை இந்த வாக்குத்தத்ததைச் அறிக்கையிட்டு ஜெபித்தும் கிடைக்கவில்லையென்று சோர்வுருவதைவிட, அவருக்குச் சித்தமானதை கேட்கிறோமா எனபதை அறிவதே சரியானதாகும்.
எனவே, பிள்ளைகளுக்கு இந்த வசனத்தைப் போதிக்கும்போதே இதையும் சேர்த்தே கற்றுக் கொடுங்கள். கேளுங்கள், தரப்படும்தான்! அதில் சந்தேமில்லை. காரணம் அவர் நம் தகப்பன். ஆனால், நாம் கேட்பது தேவ விருப்பம் ( அதாவது சித்தம்) சார்ந்ததாக இருந்தால் தான் அவர் நாமத்தையே நாம் பயன்படுத்த முடியும்!
தேவன் தன் புகழைக் கெடுக்கும் எதையும் செய்வதே இல்லை. அப்படிச் செய்வது அவர் இயல்பில் இல்லவே இல்லை! அவருக்கு மகிமை சேர்க்கும் எதையும் அவர் செய்வார். ஆனால், அவற்றை மட்டுமே செய்வார் என்பதே இந்த வாக்குத்தத்தத்தின் பின்னணி.