உன்னால் முடியும் தம்பி

Selfhelp and Christianity

ஒரு புதுவருடம் துவங்கினால் போதும்; ஒரு முயற்சிப்பட்டியலை கையில் தயாரித்து வைத்துக்கொள்வது துவங்கிவிடும். இரட்சிப்பின் அனுபவத்துள் இருப்பவரும்கூடச் செய்தும் தவறு – தங்கள் சொந்த முயற்சியில் அவர்களாகவே சரிசெய்யக் கிளம்புவதுதான். ஆனால்,   தேவனுடைய உதவியின்றி தேவையற்ற எந்த வேண்டாதவைகளையும் – அப்பட்டமாகத் தெரிபவற்றையும்கூட – நம்மால் நீக்கவே இயலாது.

நம்முடைய இயல்புகளை மாற்றிக்கொண்டால் வாழ்க்கையின் தரத்தையே மாற்றலாம் என்கிற எண்ணம் உலகத்தில் உண்டு. பல சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதப்படுவது இதன் அடைப்படையில்தான். உதாரணமாக, நீங்கள் கோபத்தை அடக்க 100 வரை எண்ணினால் கோபம் தணியும். அப்புறம் சில நாட்களில் நீங்கள் சாந்தக்காரராக மாறிவிடுவீர்கள் என்கிற ஆலோசனை! அப்புறம் உங்களைச் சுற்றி பாஸிட்டிவான ஆட்கள் இருந்தால், ஒரு பாஸிடிவ் வைப் இருந்தால் – நீங்கள் எல்லா எதிர்மறையான எண்ணங்களையும் விட்டுவிடுவீர்கள்! 

ஆனால், இவைகள் எல்லாம் உண்மை கலந்த பொய்கள். அல்லது பொய் கலந்த உண்மைகள். சுருக்கமாகச் சொன்னால் பொய்கள்!. ஏன்?

பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் கிறிஸ்து. பாவம் என்பது மனிதனை அடிமையாக வைத்திருக்கிறது – ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு தன்னைச் சுதந்திரமானவனாகவும் உணரவைத்து விடுகிறது. எனவே, பாவியான மனிதன் தன்னுடைய சுயமுயற்சிகளால் எதையும் பெரிதாகச் சாதித்துவிடமுடியாது. குறிப்பாகப் பாவத்தின் பிடியில் இருந்து விடுபடும் வல்லமை மனிதனுக்கு இல்லை! ஏனென்றால், அப்படி விடுபட வேண்டும் என்கிற ஆசையே மனிதனுக்குள் தானாகவோ, ஏதோ ஒரு முயற்சியிலோ தோன்றிவிடுவதில்லை. என்னாலே அன்றி உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று அருள்நாதர் சொன்னது இதன் அடிப்படையில்தான். முள்ளுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஆட்டுக்கு மேய்ப்பன் உதவி கட்டாயம் தேவை. தானாக வெளியேற முயற்சி செய்தால் சேதாரம் இன்னும் அதிகமாகக்கூடச் செய்யலாம். ஆடு ஏன் இரத்தம் சிந்த வேண்டும்… இரத்தம் சிந்திய மேய்ப்பன் இருக்க? 

வேதம் நம்மை வெறுமனே நல்லவர்களாக மாறவும் அதற்கான முயற்சியில் இறங்கவும் ஈடுபட அழைக்கவில்லை. ‘பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகியவர்கள்’ என்பதுதான் வேதம் நமக்குத் தரும் அடையாளம். 

ஆகவே.. கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்! (எபிரேயர் 3.1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *