எதற்காக “சிந்திக்கும் கிறிஸ்தவம்?”
படைக்கப்பட்டவைகளில் சிந்திக்கும் திறன் கொண்ட உயிரினம் மனிதன் மட்டுமே. இறைவன் சிந்திப்பவர். அதனால் அவரது சாயலில் அவரால் படைக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே சிந்திக்கும் திறன் இருக்கிறது. அதுவும் குறிப்பாக அவரைக் குறித்த சிந்தனை!
இறைவன் முதல் மனிதர்களிடம், ‘அதை நீ புசிக்கும் நாளில்…’ (ஆதியாகமம் 2:7) என்று அவர்களது சிந்தனைக்கு சுதந்திரம் அளித்துதான் வாழ்வளித்தார். அதாவது புசித்தால் என்ன நடக்கும், புசிக்காவிட்டால் என்ன நடக்கும் என்று சொல்லி அதைக் குறித்து யோசித்துச் செயல்பட சுதந்திரம் அளித்தார். எனவே நம் பிறப்பல்ல, நம் சிந்தனைதான் நாம் யாரென்பதை உருவாக்குகிறது!.
யோசிக்காமல், அதாவது சிந்திக்காமல் எவராலும் இருக்க முடியாது. குறைந்தபட்சம் ‘தப்புத் தப்பாகவாவது’ எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பவன் மனிதன்.
எனவேதான், “எதைச் செய்தாலும் யோசித்துச் செய்!” என்கிற அறிவுரையை ஒருமுறையாவது வாழ்வில் கேட்டிக்காதவர்கள் எவரும் இருக்க இயலாது. காரணம், யோசிக்காமல், அதாவது சிந்திக்காமல் எவராலும் இருக்க முடியாது. குறைந்தபட்சம் ‘தப்புத் தப்பாகவாவது’ எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பவன் மனிதன். உலகில் வாழும் உயிரினங்களில் மனிதனைத் தனித்து வித்தியாசப்படுத்துவது சிந்தனைதான். கடவுளின் சாயல் மனிதனில் இருப்பதன் மிகமுக்கியமான ஆதாரமே மனிதன் சிந்திக்கிறவவனாக இருப்பதுதான். அதன் விளைவாக எதையும் பேசும்போது, எழுதும்போது, படிக்கும்போது, உணரும்போது என்று எப்போதும், அவற்றைப் பகுத்தறிய அந்தச் சிந்தனைதான் மனிதனுக்கு உதவுகிறது.
ஆனால், மனிதன் வீழ்ந்தபின் இந்தச் சிந்திக்கும் திறன் வீழ்ச்சி அடைந்தது. நம் முப்பாட்டனும் பாட்டியும், ‘தேவர்களைப் போல ஆவீர்கள்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன், கொஞ்சம் சுதாரித்துச் சிந்தித்திருக்கலாம். விட்டுவிட்டார்கள். எனவே, இன்று நம்முடைய சிந்திக்கும் திறன், அதன் ஆதி ‘ஒரிஜினல்’ வடிவில் இல்லை. சிந்தனை முறையற்றதாகவும், சிந்திக்காமல் செயல்படுவதும் வீழ்ச்சியின் விளைவுகள். ஆத்திரப்படுதல், அவசரப்பட்டு முடிவெடுத்தல் எல்லாம் அதன் வடிவங்கள்.
நம் ஓவ்வொருவர் வாழ்விலும் நம்மைச் சிந்திக்கவைக்கும் தருணக்கள் நிச்சயம் ஏராளம். சந்திக்கும் நபர்கள், சம்பவங்கள், அனுபவங்கள், வாசிப்புகள், பிறர்கூறக் கேட்டவைகள் என்று!. அவற்றில் பலவற்றையும் நாம் மறந்திருப்போம் என்றாலும், முறையாக நம்மைச் சிந்திக்கவைத்தவை மனதின் ஓரத்தில் எங்காவது கிடப்பில்தான் போடப்பட்டிருக்கும். அவை பிற்காலங்களில் ஒரு குறிப்பிட்ட தருணங்களில் வெளிப்பட்டு, நமக்கு உதவியோ அல்லது தொந்தரவோ செய்யும்.
ஒரு வாசம், ஒரு பாடல், ஒரு வார்த்தை என்று ஒன்று போதும். நம் நினைவுகளில் என்றோ சிந்தித்துத் தேக்கி வைத்திருக்கும் தருணங்களைப் படமாக கண்முன் கொண்டு வருவதற்கு. அவற்றில் சில முறையானதாக – நல்லதாக இருக்கும். பலவும் வேண்டதாவைகளாக இருக்கும். “ அன்னைக்கு மட்டும் அவரு நேரத்துக்கு பணம் கொடுத்திருந்தால்…”. “1964ல் இதேநாள் தான்…”, “என்ன இருந்தாலும் அவ அப்படிப் பேசி இருக்கக்…” என்பவைகள் எல்லாம்!
ஒரு கிறிஸ்தவருக்கு, அவர் மறுபிறப்பின் அனுபவத்துக்குள் வரும்போது நம்தேவன் அந்தச் சிந்தனையை முறையானதாக மாற்றும் வழிவகைகளைத் திறக்கிறார். அதற்குத் துணை அவர் அருளிய வேதவார்த்தை!.
ஆனால் ஒரு கிறிஸ்தவருக்கு, அவர் மறுபிறப்பின் அனுபவத்துக்குள் வரும்போது நம்தேவன் அந்தச் சிந்தனையை முறையானதாக மாற்றும் வழிவகைகளைத் திறக்கிறார். அதற்குத் துணை அவர் அருளிய வேதவார்த்தை!. அத்துடன் அவர் நமக்குள் அருளியிருக்கும் பரிசுத்த ஆவியானவரும் போதித்து நடத்துகிறார். அவைகள் தேவசாயலான சிந்தனைகளை நம்முள் மீட்டுத் தருகிறது. அதன்பின், ஆவிக்குறிய வளர்ச்சியில் சிந்தனையின் வளர்ச்சியும் ஆக்கபூர்வமானதாக, அறிவுப்பூர்வமாக வளரத் துவங்குகிறது. கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர இந்தச் சிந்திக்கும் திறன்தான் உதவுகிறது. அதே பழைய நினைவுகள்தான், ஆனால் இன்று சிந்தனையில் நம்மை அவை பாரப்படுத்துவதில்லை. மாறாக அவை ஆழமான சிந்தனைகளாக, அவை நம்மை மேலும் ஆழமான அனுபவங்களுக்கு இட்டுச் செல்லும்.
ஆனால், சிந்தனை என்றால், மிகவும் ஆழமானதாகத்தான் இருக்கவேண்டிய அவசியமில்லை. நம் வாழ்வுக்குத் தேவையானவற்றைச் சிந்திக்க தேவனே உதவுகிறார். கிடைக்கும் வெளிச்சத்தில் சிந்திப்பவர்களாக நம்மை மாற்றுபவர் அவரே. நம் சிந்தனைகள் எல்லாம், பெரும்பாலும் நம் வாழ்க்கைமுறையை அடிப்படையாகக் கொண்டதே. அதனால், எளிமையாகவும் அதேசமயம் சுவாரசியமாகவும் நம் சிந்தனைகள் அமைவது இயல்பான ஒன்றே. எல்லோரும், சாக்ரட்டீசைபோல் சிந்திக்கவேண்டும் என்கிற அவசியமேயில்லை. உதாரணமாக அப்போஸ்தலராகிய பேதுருவின் கடிதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; அவைகள் மிகவும் எளிய சிந்தனைகள். ஆனால், மிகவும் ஆழமானவை. இயேசுவின் மலைப்பிரசங்கத்தைச் சிந்திக்கக் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டிய அவசியம்கூட இல்லை.
என்றாலும், கிறிஸ்தவனாகச் சிந்திப்பதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. (ஆனால், அவை நிச்சயமாக நல்ல கட்டுப்பாடுகளே!) கிறிஸ்தவச் சிந்தனைகள் வேதத்துக்கு முரணாகச் செல்ல இயலாது. நாம் சிந்தித்து எடுக்கும் முடிவுகளுக்கு நிச்சயம் வேத வசனத்தின் துணை இருக்க வேண்டும். மேலும், ஒரு கிறிஸ்தவனது உலகப்பார்வை (உலகத்தைக் குறித்த நமது எண்ணங்கள்) வேதத்துக்கு ஒத்ததாக மட்டுமே இருக்கவேண்டும். இதற்கு, வேதத்துடன் நம்மை இணைத்துச் சிந்திக்கும் பயிற்சி அவசியம். நம் வாழ்வின் அனுபவங்கள், நாம் கண்டவைகள், நம்முடன் பழகுபவர்கள் என்று பலவும் நம்மைச் சிந்திக்க வைத்தே தீரும். இந்த வாட்ஸ்அப் ஃபார்வேட் காலத்தில், வந்ததெல்லாம் நிஜம் என்று நினைக்கும் கிறிஸ்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினால், ஆழமான சத்திய அனுபவங்களுக்குள் நிச்சயம் செல்லலாம்.
இந்தத் தளம் உங்கள் சக கிறிஸ்தவனுக்கு அப்படி வந்த பல சிந்தனைகளின் தொகுப்பு. அவ்வப்போது எழுதப்பட்டது. ஒருசில கட்டுரைகள், சில நண்பர்களால் முன்பே வாசிக்கப்பட்டும் இருக்கின்றன. என்றோ நடந்த சம்பவங்களில் சிலவற்றை நம்மால் இன்றைய வேத வாசிப்புகளுடன் இணைத்துத் தொடர்புபடுத்த முயன்றால், அந்தக் கூட்டணியில் இனிமையான ஒரு சிந்தனை கிடைக்கும். அப்படிப்பட்ட பல இணைப்புகளே இக்கட்டுரைகள்.
இங்கு சில குறும், நெடும் கட்டுரைகளை என் சொந்த எழுத்துநடையில் இதில் நீங்கள் வாசிக்கலாம். இவை ஆழமான இறையியல் கட்டுரைகளாகவோ அல்லது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அல்லது வலு சேர்க்கும் எழுத்துக்களாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவற்றை வாசிக்கும் யாவருக்கும் கிறிஸ்தவம் என்பது சிந்திக்கும் அனுபவம் என்று அறிய உதவும். மேலும், அவரவருக்குக் கிடைத்த வெளிச்சத்தின்படி சிந்திக்கவும் சற்று பயன்படும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.
…வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்…மத்தேயு 24:15.
பென்னி அலெக்ஸாண்டர் 2024
கோவை.